
Written by S.NAGARAJAN
Date: 12 NOVEMBER 2017
Time uploaded in London- 6-52 am
Post No. 4388
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
அத்வைத ஸார விளக்கம்
பிறவி ஏன்? முக்தி எப்போது?
ச.நாகராஜன்
1
நம்மைக் குழப்பும் கேள்விகள் பல. பிறவி ஏன்? அது ஏன் வந்தது? எப்போது போகும்? – இப்படிப் பல கேள்விகள்
அத்வைத, விசிஷ்டாத்வைதம், த்வைதம் ஆகிய மூன்றும் மூன்று நிலைகளை நம் முன்னே வைக்கிறது.
அத்வைதம் தரும் சில பதில்கள் இங்கே தொகுக்கப்பட்டுத் தரப்படுகின்றன.
இங்கு தரப்பட்டதைத் தவிர ஏராளமான கேள்விகளும் உண்டு. அதற்கு அத்வைத சித்தாந்தம் தரும் அற்புத பதில்களும் உண்டு.
இவற்றையெல்லாம் அவ்வப்பொழுது சிந்திக்க வேண்டும் என்பது பெரியோர் போதனை.
இப்போது இதோ , சில கேள்விகள், அதற்கான பதில்கள்- அத்வைத நோக்கில்.
2
ஆத்மா சுகஸ்வரூபன். அழிவற்றவன் என்று சொல்லப்படுகிறது.
அப்படியானால் ஆத்மாவுக்குத் துக்கம் எப்படி வந்தது?
உடலை அடைவதால் – சரீரத்தை அடைவதால் வந்தது.
சரீரம் – உடல் – எப்படி வந்தது?
பூர்வ கர்மத்துடன் கூடிய ஐந்து பூதங்களால் (பஞ்சீகிருத பூதங்களால்)
கர்மம் எத்தனை வகை?
மூன்று வகை.
அவை என்ன?
ஆகாமியம் சஞ்சிதம் பிராரப்தம் என மூன்று வகை
ஆகாமியம், சஞ்சிதம், பிராரப்தம் என்றால் என்ன?
ஆகாமியம் என்றால் இந்த தேகம் எடுத்த பதினான்கு வயது முதல் செய்ததும் ,சஞ்சிதத்துடன் சேருவதுமாம்.
சஞ்சிதம் என்றால் பூர்வ ஜென்ம கர்மங்களில் அனுபவித்தது போக மீதம் இருப்பவை.
பிராரப்தம் என்றால் பூர்வ ஜென்ம கர்மங்களில் எந்தக் கர்மத்தின் பலனாக இந்த ஜென்மம் வந்ததோ,அந்த தேகத்தினால் அனுபவிக்க வேண்டியவையாம்.

இந்தக் கர்மங்கள் எப்போது நசிக்கும்?
ஞானம் வந்தால் ஆகாமியம் சஞ்சிதம் நாசம் அடையும்.
பிராரப்தம் அனுபவத்தால் தான் நசிக்கும்.
ஆகவே அனைவரும் விதேக முக்தியின் பொருட்டு பிரயத்னம் செய்ய வேண்டும்.
விதேக முக்தி என்றால் என்ன?
தேகமில்லாத முக்தி
அப்படியானால் வேறு பல முக்திகளும் உண்டா?
ஆம்.
ஸாலோக்கியம், ஸாமீப்யம்,ஸாரூப்யம், ஸாயுஜ்யம் என் இப்படி நான்கு வகை முக்தி உண்டு.
இவைகளை அடைவதற்கு சாதனங்கள் என்ன?
சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு உண்டு.
சரியை என்ரால் என்ன?
பகவத் கைங்கரிய ரூபமான தாஸ பாவனை.
கிரியை என்றால் என்ன?
தேவதா பூஜை செய்தல்
யோகம் என்றால் என்ன?
யமம், நியமம், ஆசனம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணை,தியானம், சமாதி ஆகிய எட்டு அங்கங்களைக் கொண்டது யோகம். இவற்றினால் பரமாத்மாவுடன் ஜீவாத்மா ஐக்கியம் ஆதல் அதாவது ப்ரம்மத்துடன் கலந்து பேதமற்று ஒன்றாக ஆதல்
ஞானம் என்றால் என்ன?
ப்ரம்ம் சைதன்யத்தை எங்குமாய் ஏகமாய் கண்டு ஆனந்தித்து ஐக்கியமுற்றிருத்தல்.
இந்த நான்கில் முந்தைய மூன்றும் மறுபடியும் பூமியில் ஜனனத்தைக் கொடுக்கும்.
ஸாயுஜ்யமே முக்கியமான முக்தி.
இன்னும் புண்யம், பாவம், மிஸ்ரம், இராக த்வேஷம் போன்றவற்றிற்கும் விளக்கம் உண்டு. அவற்றை பின்னால் பார்ப்போம்
***