பலா மரம்
Written by London swaminathan
Research Article no. 1708; dated 11 March 2015
Up loaded at 08-20 London time
பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாம் உளரே – தூவா
விரைத்தாலு நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு
—அவ்வையார் இயற்றிய நல்வழி
பொருள்: பூக்காது காய்க்கும் அத்தி, ஆல், அரசு, பலா முதலிய மரங்கள் உலகில் உண்டு. அது போல மக்கள் நடுவில் இதைச் செய் என்று சொல்லாமலேயே குறிப்பால் உணர்ந்து செயல்படும் நல்லோர் உண்டு. வேறு சிலரோ விதைத்தாலும் முளைக்காத வித்து (விதை) போன்றவர்கள். அவர்களுக்குச் சொன்னாலும் புரியாது- தெரியாது. மூடர்களுக்குச் சொல்லும் அறிவுரை இப்படிப் பயனற்றதே—அதாவது விதைத்தாலும் முளைக்காது.
ஆல மரம்
தாவரவியல் அறிவு மிக்கவர்கள் இந்தியர்கள் — உயரிய கருத்துக்களைச் சொல்ல இது போன்ற அரிய உவமைகளைப் பயன்படுத்துவர்.
நல்வழி இயற்றிய அவ்வையார், சங்க கால அவ்வையார் அல்ல. சங்க காலம் முதல் தமிழகத்தில் வாழ்ந்த ஆறு அவ்வையார்களில் இவரும் ஒருவர். பிற்காலத்திய அவ்வையார். வயதான, அறிவுமிகுந்த, கணவர் இல்லாத, முது பெரும் அறிவாளிப் பெண்களை தமிழ் கூறு நல்லுலகம் “அவ்வை” என்ற அன்புப் பெயரிட்டு அழைக்கும்.
அரச மரம்
இந்தப் பாடலில் உள்ள பூவாத மரங்கள் விஷயம் 2300 ஆண்டுகளுக்கு முந்தைய மனுஸ்மிருதியிலும் உள்ளது (1-47)
பூவாது காய்க்கும் மரங்கள் ‘வனஸ்பதி’ எனப்படும். புஷ்பங்கள், பழங்களுடனுள்ள மற்றவை “மரங்கள்” எனப்படும் என்பார் மனு.
Apushpaa: falavanto ye te vanaspataya smruthaa:
Pushpina: falinas cha eva vrukshaam tu ubayata smruta: (1-47 Manu)
அபுஷ்பா: பலவந்தோ யே தே வனஸ்பதய ஸ்ம்ருதா:
புஷ்பின: பலினஸ் ச ஏவ வ்ருக்ஷாம் து உபயத ஸ்ம்ருதா:
தீயோருடன் பேசாதே என்ற கருத்து பஞ்ச தந்திரக் கதைகளிலும் வருகிறது. குரங்குக்கு புத்திமதி சொன்ன தூக்கணங் குருவியின் கூட்டை, குரங்கு பிய்த்தெறிகிறது. இதன் மூலம் விஷ்ணுசர்மன் – “தீயோருக்கு புத்திமதி சொல்லாதே” — என்கிறார்.
இந்தப் பஞ்ச தந்திரக் கதையை விவேக சிந்தாமணி என்னும் நூலும் கூறுகிறது:-
“வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்
தானொரு நெறி சொலத் தாண்டிப் பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நுல்களும்
ஈனருக்கு உரைத்திடில் இடரது ஆகுமே”.
தூக்கணங்குருவி — கூடு
எவ்வளவு அற்புதமான கருத்துக்களை நல்வழியும், விவேக சிந்தாமணியும் எளிய தமிழில் நமக்குத் தருகின்றன!! அதே கருத்துக்கள் வடமொழியிலும் உள்ளன. இமயம் முதல் குமரி வரை ஒரே கருத்துடைய இவ்வளவு பெரிய பூகோள நிலப்பகுதி 2000 ஆண்டுகளுக்கு முன் உலகில் வேறு எங்கும் இருந்தது இல்லை. ஒரே சிந்தனை, ஒரே பார்வை, ஒரே குறிக்கோள்!
அத்தி மரம்
வாழ்க தமிழ்!! வளர்க சம்ஸ்கிருதம்!! பொலிக பாரதம்!!!





You must be logged in to post a comment.