Article No. 2059
Written by London swaminathan
Swami_48@yahoo.com
Date : 10 August 2015
Time uploaded in London :– 16-53
கவலை மலையும், அதைக் கரைக்க கடவுள் உதவியும்
“இக்கரைக்கு அக்கரை பச்சை” என்ற தமிழ்ப் பழமொழிக்கு இணையான பழமொழி எல்லா மொழிகளிலும் இருக்கிறது. இதை விளக்க இதோ ஒரு சுவையான கதை. சுவாமி ராமதாஸ் சொன்ன கதை:
அம்மாவுக்கு கவலை, அப்பாவுக்கு கவலை, பெண்ணுக்கு கவலை, பிள்ளைக்கு கவலை, கோடிவீட்டு கோமளா, மாடி வீட்டு மாலதி, எதிர்வீட்டு எத்திராஜ், அடுத்தவீட்டு அங்கு சாமி, பக்கத்துவீட்டு பங்கஜம்மாள், முதல் வீட்டு முத்து சாமி, கடைசி வீட்டு கந்த சாமி – இப்படி எல்லோரும் கவலைக் கடலில் மூழ்கித் தத்தளித்தனர். அந்த ஊருக்கு ஒரு சாமியார் வந்தார்.
உங்கள் எல்லோருடைய கவலையையும் போக்கவல்ல ஒரே ஆசாமி, இறைவனே. ஆகையால் பலமாகக் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார். ஊர் கூடி தேர் இழுத்தது போல, ஊரே கூடி ப்ராரத்தனை செய்தது. இறைவன் பக்தி வலையில் எளிதில் சிக்குவான். ஆகவே பகதர்களின் பிராத்தனையை செவிமடுத்து ஓடிவந்தான்.
இது என்ன? இவ்வளவு பேரும் கூடிப் பிரார்த்திக்கிறீர்களே! என்ன விஷயம் ?என்றான். எல்லோரும் சேர்ந்து ஒப்பாரி வைத்தனர். எனக்கு இந்தக் கவலை, அந்தக் கவலை என்று மூச்சுவிடாமல் அடுக்கினர்.
இறைவன் சொன்னான், “இதோ பாருங்கள். இது உங்கள் பிராரப்த கர்மம். அனுபவித்தே தீர வேண்டும் ஆனால் ஒரு சலுகை தருகிறேன். இதோ இந்த பெரிய சமவெளியில் உங்கள் கவலைகளை எல்லாம் தூக்கி எறியுங்கள் என்றான். உடனே பக்த கோடிகள் எல்லோரும் கவலைகளை விட்டெறிந்தனர். கவலைகள் மலை அளவுக்கு உருப்பெற்று, இமயமலைக்குப் போட்டியாக கவலை மலை உண்டானது.
கடவுள் சொன்னார், “நல்லது; இப்பொழுது இதிலிருந்து ஏதாவது ஒரு கவலையைப் பொறுக்கி எடுங்கள், பின்னர் வீட்டுக்குப் போகலாம் என்றார். உடனே எல்லோரும் கவலை மலை மீது பாய்ந்து, இதுவரை தான் அனுபவித்த பெரிய கவலையை ஒதுக்கிவிட்டு, ஜாக்கிரதையாக மற்றவனின் கவலையை எடுத்தனர்.
கண்தெரியாதவர், கண்களையுடைய முடவனின் கவலையைப் பெற்றார். குழந்தை இல்லாத மலடி தன், கவலையை விட்டு, குழந்தையுள்ளவளின் கவலையை எடுத்தாள். பணக்காரனின் கவலையை ஏழை எடுத்தான். இப்படி ஒவ்வொருவரும் தனது கவலையை விட்டு மற்றவனின் கவலையுடன் மாற்றுப் போட்டுக் கொண்டனர். எல்லோரும் , “அப்பாடா, இனிமேல் எல்லாம் இன்பமயம்தான், நம் வாழ்வு வளம் பெறும் என்று பெரு மூச்சுவிட்டனர். மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
இரண்டே நாட்களில் ஊர் முழுதும், பெரிய முக்கல், முனகல் சப்தம். கடவுளே என்னால் இந்தப் புதிய கவலையைப் பொறுக்கவே முடியாது. பழைய கவலையே பரவாயில்லை. அதுவாவது பழகிப் போய்விட்டது என்று கதறினர்.
மீண்டும் கூட்டுப் பிராரத்தனை. கடவுள் மனமிரங்கி இரண்டாவது முறை தோன்றி, அன்பர்களே, நண்பர்களே! இப்போது என்ன பிரச்சனை? என்றார். எல்லோரும் இக்கரைக்கு அக்கரை பாசை என்று எண்ணி ஏமாந்துவிட்டோம். தயவுசெய்து எங்களுடைய பழைய கவலைகளைத் திரும்ப எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றனர்.
இறைவனும் “ததாஸ்து” (அப்படியே ஆகட்டும்) என்று ஆசீர்வதித்தார்.
இறைவன் எல்லோருக்கும் சரியாகப் படி அளந்துள்ளான். விரலுக்கேற்ற வீக்கத்தையும், ஏழைக்கேற்ற எள்ளுருண்டையையும் கொடுத்திருக்கிறான். அதை விளங்கிக் கொண்டு, ஏற்றுக் கொண்டால் கவலை என்பதே இராது.
–சுபம்–


You must be logged in to post a comment.