
Written by S NAGARAJAN
Date: 21 JULY 2018
Time uploaded in London – 7-03 AM (British Summer Time)
Post No. 5241
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
எளிமையான வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை!
ச.நாகராஜன்
‘உண்மையான ஞானஸ்தன் எளிமையான வாழ்க்கையைத் தான் விரும்புவான்; எளிமையாகத் தான் வாழ்வான் என்று நம்பினார் சாக்ரடீஸ்.
தனது வாழ்க்கையிலும் அவர் எளிமையையே கடைப்பிடித்தார். இதனால் அவர் காலில் செருப்பு கூட அணிந்ததில்லை.
இருந்தாலும் கூட அடிக்கடி கடை வீதிக்கு வருவார். அங்குள்ள கடைகள் அனைத்தையும் பார்வையிடுவார்.
ஒரு நாள் அவரது நண்பர்களில் ஒருவர்,”எதையுமே நீங்கள் வாங்குவதில்லை; அப்படியிருக்க தினமும் ஏன் கடைவீதிக்கு வந்து அனைத்துக் கடைகளிலும் உள்ள பொருள்களைப் பார்வையிடுகிறீர்கள்” என்று வியப்புடன் கேட்டார்.
அதற்கு சாக்ரடீஸ், “ அங்கு அடிக்கடி போக நான் விரும்புவது உண்மைதான்! எத்தனை விதமான பொருள்கள் இல்லாமல் என்னால் சந்தோஷமாக இருக்க முடிகிறது என்பதை அறிவதற்காகத் தான்” என்று பதிலளித்தார்.
**

ஜப்பானில் முதியவர் கூட்டம் ஒன்று அடிக்கடி கூடி செய்திகளைப் பரிமாறிக்கொண்டே டீ அருந்துவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தது.
சுவையான புதிய வகை டீ ஏதேனும் எங்கேயும் கிடைக்கிறதா என்பதைப் பார்ப்பது அவர்களின் ஒரு வழக்கம். அந்த டீ எவ்வளவு விலையாக இருந்தாலும் சரி, அதைப் பற்றி அவர்கள் விசாரித்து அறிந்துகொண்டு அது எப்படிப்பட்ட கலவையைக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வர்.
ஒரு நாள் அங்கிருந்த வயதானவர் ஒருவரின் முறை வந்தது. அவர் தான் கொண்டு வந்திருந்த புது மாதிரியான டீயை அனைவருக்கும் தந்தார். அனைவரும் அதை சுவைத்துப் பார்த்தனர்.அருமையோ அருமை! இதுவரை அப்படிப்பட்ட சுவையுள்ள டீயை சாப்பிட்டதே இல்லை என்று ஒருமனதாக அனைவரும் கூறினர். இப்படிப்பட்ட டீயை எப்படிக் கலந்து தயாரிப்பது என்பதை அறிய அனைவரும் ஆர்வம் கொண்டு அவரைக் கேட்டனர்.
அதற்கு அவர்,”நண்பர்களே! இது எனது வயலில் உள்ள குடியானவன் காலம் காலமாகச் சாப்பிட்டு வரும் டீதான்! மிக அருமையான விஷயங்கள் உண்மையிலேயே அதிக விலை கொண்டவையும் அல்ல; எங்கேயோ தூரத்தில் இருப்பவையும் அல்ல; நமக்கு அருகில் உள்ள சிறந்த விஷயங்களை நாம் அறிவதே இல்லை” என்றார்.
அனைவரும் இந்த உண்மையைத் தெரிந்து கொண்டு ஆமோதித்தனர்.
**
“I have just three things to teach; Simplicity,Patience, Compassion. These three are your greatest treasures.: – Lao Tsu
எளிமை, பொறுமை, தயை இந்த மூன்றுமே உங்களுக்கு நான் போதிக்க வேண்டிய மூன்று விஷயங்கள். இவையே உங்களது பெரிய பொக்கிஷங்கள் என்றார் லாவோட்சு.
**

ஈஸ்வர சந்திர வித்யாசாகர் பெரிய பண்டிதர். எளிமையாக உடையை அணிபவர். படாடோபமான ஆடை அணிந்தவர்களையே பெரிய மனிதராக நினைத்து வந்த காவலாளி அவரை ஒருமுறை அழைக்கப்பட்ட இடத்தில் உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டான். படாடோபமான உடைகளைக் காட்டி வித்யாசாகர் இதற்கு அனுமதியை வழங்குங்கள் என்று சொன்ன போது தான் அனைவருக்கும் நடந்த விஷயம் தெரிய வந்தது. அவர்கள் மன்னிப்புக் கேட்டனர்.
இந்த சமபவம் அனைவரும் அறிந்த ஒன்று.
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்றார் வள்ளுவரும்! (குறள் எண் 667)
**
மகாத்மா காந்திஜி எளிமையின் உருவம். உடை, உணவு என்று எதை எடுத்தாலும் மிகக் குறைந்த தேவையையே அவர் கொண்டிருந்தார்.
அவர் இறந்த போது அவருக்கென்று இருந்த உடமைகள் பத்து கூடத் தேறவில்லை. அவரது கண்ணாடி, உண்ணுகின்ற பாத்திரம், செருப்பு, கடிகாரம் போன்றவை தான் அவருக்கென இருந்தன.

இந்தியாவைத் தட்டி எழுப்ப பிரிட்டிஷாரின் துணிகளை பகிஷ்காரம் செய்ய அவர் அறைகூவல் விடுத்தார். ஒவ்வொருவரும் அவரவருக்கான இடுப்புக் கச்சையை அவரவரே நூற்று உடுக்கலாம் என்று கூறி முன்னுதாரணமாகத் தானே நூற்க ஆரம்பித்தார். இந்த எளிமை உணர்வு வெகு ஜன உணர்வைத் தட்டி எழுப்பியது.
எளிமை என்றும் மதிப்பைத் தரும் என்பது தான் உண்மை.
சாக்ரடீஸ் முதல் காந்திஜி வரை அனைவரும் உணர்த்தும் உண்மையும் இதுவே தான்!
***