
Written by S NAGARAJAN
Date: 6 June 2017
Time uploaded in London:- 6-01 am
Post No.3975
Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.
contact: swami_48@yahoo.com
சான்பிரான்ஸிஸ்கோவில் இருப்பதால் பல திரைப்ப்டங்களைப் பார்க்க முடிகிறது என்றும் இவற்றைப் பற்றித் தனியே ஒரு கட்டுரையில் எழுதுகிறேன் என்றும் ஜாலி எல் எல் பி (கட்டுரை எண 3948 ;வெளியான தேதி:28-5-2017) தெரிவித்திருந்தேன்.
இதோ அந்தக் கட்டுரை!
காண்டு படங்கள்!
ச.நாகராஜன்
***

காண்டு படங்களைப் பார்த்து வருகிறீர்களா? அது என்ன காண்டு?
தமிழ் வார்த்தையா?அர்த்தம் என்ன ? – என்று கேட்கிறீர்களா?
எனக்கும் தெரியாது. அது தமிழ் வார்த்தை தான் போலும்!
நிறைய காண்டு படங்கள் வரத் தொடங்கி உள்ளன தமிழில்.
ஒரு கதாநாயகன்.- பொறுக்கி,பரட்டைத் த்லை, படிக்காதவன், ரவுடி இப்படி எல்லாவற்றையும் குழப்பி சேர்த்து உருட்டிய ஒரு உருவமாக இருப்பான் நமது கதாநாயகன்.
செக்கச் செவேலென்று தள தள, பள பளப்பாக ஒரு அழகி இருப்பாள். அவள் படித்தவள். கை நிறைய லகரக் கணக்கில் சம்ப்பாதிப்பவள்.அப்படியானால் பெரும்பாலும் சாப்ட்வேர் துறை என்று வைத்துக் கொள்ளுங்கள்.
நம்து பரட்டைத் தலை அவளைக் காதலிப்பான். அவளோ அவனை விரட்டியடிப்பாள். இவன் விடமாட்டான். தொடர்வான்.ஒரு சமயம் நமது பேரழகியை ஒரு ரவுடிக் கூட்டம் தொடர்ந்து இம்சிக்கும். நமது பரட்டைத் தலை பாய்ந்து வந்து அவளைக் காப்பாற்றும். அவ்வளவு தான்; உருகி விடுவாள், அழகி.
பிறகென்ன, சுபம்!
இதில் தான் காண்டு வருகிறது. பரட்டைத் தலை பேசும் வசனம் : ஒரே காண்டா இருக்கா? காண்டு பண்ணாதே.
இது அடிக்கடி வரும் வ்சனம்.
பொருள் என்றால் கத்தி, துப்பாக்கி!
சம்பவம் என்றால் கொலை,கொள்ளை.. இத்யாதி.
அய்யே!! நல்ல தமிழ் ஐயா இது!
***
இந்தியாவில் திரைப்படங்கள் எடுக்க ஆரம்பித்து நூறு ஆண்டுகள் ஆகி விட்டன. அதாவது மூன்று தலைமுறைகளைக் கடந்து விட்டது திரையுலகம்.
***
இன்றைய கால கட்டத்தில் நல்ல ‘டேலண்டுடன்’ ஒரு இளைஞர் பட்டாளம் தமிழ் திரையுலகில் தோன்றி கலக்கோ கலக்கு என்று கலக்குவது ஒரு சுகமான அனுபவமே!
***

பேரழகிகள் கதாநாயகிகளாகத் தோன்றுகிறார்கள். ஆமாம்; தோன்றுகிறார்கள், அவர்களுக்கு நடிப்பதற்கு வாய்ப்புக் கொடுத்தால் தானே நடிப்பார்கள்.
முகத்தைச் சிணுக்குவது, கதாநாயகன் ஒரு பக்கமும் இவள் மறு பக்கமும் போகும் போது கொஞ்ச தூரம் சென்று திரும்பிப் பார்த்து தலையை அசைப்பது.. இடுப்பை வளைத்து ஒரு டான்ஸ் போஸ் கொடுப்பது .. இது தான் இந்தப் பேரழகிகளின் சினிமா அசைன்மெண்ட். நடிப்புக்கு எங்கே இடம் இருக்கிறது?
**
அறிவியல் தொழில் நுட்பம் மிகவும் முன்னேறி ஏராளமான நவீன சாதனங்கள் திரைத் துறையில் குவிந்துள்ளன.கணினி மூலம் புகுத்தப்படும் உத்திகளோ மலைக்க வைப்பவை.
இத்துடன் நமது இளைஞர்களின் பல் துறை திறமையும் – டேலண்டும்- சேர்ந்தால் அது ஒரு புதிய உயரத்தை அல்லவா காண்பிக்க வேண்டும். அந்த உச்சியில் ஏறி நின்று அல்லவா கும்மாளம் போட வேண்டும்.
இல்லை, அது தான் இல்லை.
இவர்களிடம் இல்லாத ஒரு அம்சம் நல்ல கதை தான்! அதுவே மற்ற அனைத்தையும் கபளீக்ரம் செய்து விடுகிறது!
***
பேய்க்கதைகள், தாயாரையே கொல்வது, காண்டு, பொருள்,சம்பவம் இவற்றை உள்ளடக்கிய அடிதடிக் கதைகள், எத்தனை நாளைக்கு ஓடும்? எத்தனை நாளைக்கு இவர்களை திரைத்துறையில் ஓட்டும்?இவற்றில் வரும் காவல் துறையில் உள்ள அனைவருமே லஞ்ச்ப் பேர்வழிகள், கொலைகாரர்கள். துரோகிகள்,சமூக விரோதிகள்…
இவையெல்லாம் நல்லதற்கு அறிகுறியா? எதிர்கால சந்ததிக்கு உகந்த சிந்தனைகள் தானா?
***
குறைந்த பட்ஜெட்டில் மிக அருமையாக படத்தை முடித்து விடுகிறார்கள்.நல்ல செய்தி.
மூன்றே நாள் ஓடினால் போதுமாம.போட்ட முதலும் கொஞ்சம் லாபமும் வந்து விடுமாம்.
யாருக்கும் நஷ்டமில்லை.
பாகுபலி பிரம்மாண்டத்தை எடுக்கப்போய் உத்தம வில்லனாக முடிய வேண்டிய கஷடமும் நஷ்டமும் இவர்களுக்கு இல்லை!
ஆறுதலான செய்தி தான்.

பழைய கால நூறு நாள், 25வது வெள்ளி விழா வாரம் போன்ற கனவுகளில் இவர்கள் சிக்க வேண்டிய அவசியமும் இல்லை.
மூன்று நாட்கள், வெறும் மூன்றே நாட்கள்!
ஆனால் அதற்கும் தியேட்டர்கள் கிடைக்காத தமிழகத்தின் ‘பெகூலியர்’ பாலிடிக்ஸ் ஒரு தனிக் கதை!
***
புதிய அலையின் எல்லா படங்களுமே கதை அம்சம் இல்லாத படங்களா? இல்லை,இல்லை.அப்பா என்று ஒரு படம். உத்வேகமூட்டும் ஒரு அப்பாவைப் பற்றிய கதை. கதை உள்ள நல்ல அப்பா!
சற்று சிந்தித்து (எனது ஜாலி எல் எல் பி ஹிந்தி படத்தைப் பற்றியது -அந்தக் கட்டுரையைப் படியுங்கள்) ஒரு கதைக் கருவை எடுத்துக் கொண்டு அதை மெருகிட்டு எடுத்தால் இப்போதிருக்கும் இளைஞர்களின் டேலண்டும், பேரழகிகளின் அழகும் நவீன சாதனங்களின் உதவியும் ஒரு புது சகாபதத்தை உருவாக்கி விடுமே!
***
இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். முயன்றால் முடியும். அதுவும் இப்போதிருக்கும் இந்த கோஷ்டியினால் நிச்சயம் முடியும். வாழ்த்துக்கள்.
***
எந்த நடிகர், நடிகை, தொழில்நுட்ப வல்லுநர்கள்,இயக்குநர்கள், தயாரிப்பாளரின் பெயரையும் குறிப்பிடவில்லையே என்று கேட்காதீர்க்ள்.
திறமைப் பட்டாளம் ஜெயிக்கும் பட்டாளம். பெயரைக் குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை. அவர்களுக்குத் தேவையானது நல்ல கதையும், அதைத் திறம்படச் சொல்லும் (எடுக்கும்) உத்தியுமே.
ஒரே ஒரு சின்ன ஐடியா மட்டும் தர முடியும்.
ஒரு நூறு ஆங்கில, ஹிந்தி திரைப்ப்டங்களைப் பார்த்து அதன் கருவை ஒரு வரியில் எழுதி விட்டு அந்த ஒரு வரியை அவர்கள் 120 நிமிடமாக எப்படி டெவலப் பண்ணி இருக்கிறார்கள் என்று சிந்திக்கலாம். அதில் உள்ள கேரக்டர்களை எப்படி சித்தரித்திருக்கிறார்கள்,காட்சி அமைப்பை எப்படி உருவாக்கி இருக்கிறார்கள் என்று யோசிக்கலாம். அதை விவாதித்து எழுதி வைத்துக் கொள்ளலாம்.
அதன் பின்னர் தங்களுடைய ஒரு வரிக் கதையை எழுதி அதை காட்சிப்படுத்த முயற்சிக்கலாம்.
உருப்படியான யோசனை!
*** நல்ல நடிகரோ தயாரிப்பாளரோ, “ஐயா சொல்வது சுலபம் இப்படி உங்களால் ஒரு வரிக் குறிப்புகளைச் செய்து தர முடியுமா” என்று கேட்டால்….
கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்!
***