கட்டுரை எண் 1644; தேதி 12 பிப்ரவரி 2015
எழுதியவர் ச.நாகராஜன்
சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்
- ராதேயன் கர்ணன்!
நியாயங்களின் வரிசையில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:-
कूपखानकन्यायः
kupakhanaka nyayah
கூபகானக நியாயம்
கூபம் – கிணறு
கிணறு வெட்டுவது பற்றிய நியாயம் இது.
ஒரு கிணறை வெட்டும் போது அதை வெட்டுபவனுடைய உடலில் சகதிகள், மண், சேறு முதலில் படியும். ஆனால் வெட்ட வெட்ட கிணற்றிலிருந்து தண்ணீர் ஊறும். அந்த நீரினாலேயே அவன் தன் உடல் முழுவதையும் கழுவிக் கொண்டு சுத்தமாக ஆகி விடுவான். இதே போல ஒருவன் செய்யும் பாவங்கள் எல்லாம் கூட அவன் பின்னால் செய்யும் தான தர்மங்களினால் கழுவப் பட்டு விடும். இதை அழகாக எடுத்துரைக்கும் நியாயம் கூப கானக நியாயம்.
कूपयन्त्रघटिकान्यायः
kupayantraghata nyayah
கூபயந்த்ரகடிகா நியாயம்
ஒரு கிணறில் நீர் எடுக்க உதவும் உருளையில் பக்கட்டுகளை இணைத்திருப்பது பற்றிய நியாயம் இது.
கிணறிலிருந்து நீர் எடுக்கும் போது சில பக்கட்டுகள் நீர் நிரப்பப்பட்டு மேலே வரும். சில சமயம் நீர் இல்லாமலேயே மேலே வரும். கீழே போகும் போதோ காலியாக கீழிறங்கும். அதே போல உலகியலில் வாழ்க்கையில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நீர் நிரம்புவதும் நீர் நிரம்பாமல் இருப்பதுமாக, மேலே ஏறுவதும் கீழே இறங்குவதுமாக எத்தனை எத்தனையோ மாறுதல்கள்.
இந்த மாறுதல்களைச் சுட்டிக் காட்டுவது தான் கூபயந்த்ரகடிகா நியாயம்.
कैमुतिकन्यायः
kaimutika nyayah
கைமுதிக நியாயம்
“இன்னும் எவ்வளவு” என்னும் நியாயம் இது. வேலையே பார்க்காமல் இன்னும் எவ்வளவு அதிகமாகக் கிடைக்கும் என்று அதிகம் பெறுவதையே நோக்கமாக ஒருவர் கொள்ளும் போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.
कौन्तेयराधेयन्यायः
kaunteyaradheya nyayah
கௌந்தேய ராதேய நியாயம்
கௌந்தேய ராதேய என்னும் நியாயம் இது பிரபலமான ஒன்று.
மஹாபாரதத்தில் வரும் கர்ணனின் கதையை அடிப்படையாகக் கொண்ட நியாயம் இது. குந்தியின் மகனான கர்ணன் அவளால் ஒரு கூடையில் வைத்து ஆற்றில் விடப்பட அந்தக் கூடையை எடுத்துப் பார்த்துத் திகைக்கிறாள் ராதா என்னும் பெண். அவனைத் தன் மகனாக வளர்க்க ஆரம்பிக்கிறாள்.ராதையின் மகன் என்று அவனைச் சுட்டிக் காட்டப்படுகிறான் அவன்.
ஆகவே அவனை ராதேயன் என்று சாதாரணமாகக் கூப்பிடுவது வழக்கம்.
பேச்சு வாக்கில் கடைப்பிடிக்கப்படும் ஒரு பழக்கம் எப்போதுமே வழங்கப்பட்டு நிஜமான ஒன்றாக ஆவது போல இருக்கும் சமயத்தில் இந்த நியாயம் வழங்கப்படும்.
குந்தியின் மகன் தான்; ஆனால் ராதேயனாக ஆகி அதுவே நிஜமாகி விட்டது. அதைப் போன்ற தருணங்களில் வழங்கப்படும் நியாயம் இது!
खल्वाटबिल्वीयन्यायः
khalvatabilviya nyayah
கல்வாடபில்வீய நியாயம்
வழுக்கைத் தலையரும் வில்வப் பழமும் என்னும் நியாயம் இது.
இதற்கு அடிப்படையான கதை ஒன்று உண்டு.
ஒரு நாள், வழுக்கைத் தலையரான ஒருவர் வெய்யிலின் கொடூரம் தாங்காமல் களைப்பாறுவதற்காக ஒரு வில்வ மரத்தின் அடியில், நிழலில் வந்து அமர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக ஒரு பெரிய வில்வப் பழம் அவர் மண்டை மீது திடீரென்று விழுந்து காயம் ஏற்பட அவர் துடிதுடித்துப் போனார். துரதிர்ஷ்டம் எங்கு போனாலும் தொடர்ந்து வரும் என்பது போல சிலருக்கு எங்கே போனாலும் ஏதாவது இப்படி நடந்தால் இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.
*****************






You must be logged in to post a comment.