
WRITTEN by S NAGARAJAN
Date: 14 April 2018
Time uploaded in London – 6-10 AM (British Summer Time)
Post No. 4912
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
கொங்கு மண்டலப் பெருமை
புலவனுக்குப் பரிசு கொடுக்க முடியவில்லை எனில் புலிக்கு இரையாவதே சிறந்தது!
ச.நாகராஜன்
தமிழக மன்னர்களும் பிரபுக்களும் புலவர்களுக்குத் தகுந்த பரிசுகளைக் கொடுப்பதைப் பெருமையாகவும் கடமையாகவும் கருதியவர்கள்.
கொங்கு மண்டல சதகத்தில் வரும் பல பாடல்களை ஏற்கனவே பார்த்துள்ளோம். இன்னும் ஒரு பாடலைப் பார்ப்போம்:
இப்போதுள்ள கோபிச்செட்டி பாளையம் தாலுகா பழைய காலத்தில் காஞ்சிக்கோயில் நாடு என்று அழைக்கப்பட்டு வந்தது. இதில் அடங்கியிருந்த ஊரான பாரியூரில் செட்டி பிள்ளையப்பன் என்ற பெரிய கொடையாளி ஒருவர் இருந்தார். அவர் மீது கவிபாடிக் கொண்டு புலவர் ஒருவர் வந்தார். கொடுத்துக் கொடுத்துக் கையில் ஒன்றுமில்லாமல் இளைத்திருந்த செட்டி பிள்ளையப்பன் சற்று வருத்தத்துடன் சிந்திக்கலானார்.

உலகத்தில் ஒருவனிடம் சென்று எனக்கு இல்லை என்று கேட்பது சிறுமை. கேட்போனுக்கு இல்லை என்று சொல்வதோ சிறுமையிலும் சிறுமை. அதிலும் நம் குலத்தைப் புகழ்ந்து கவி பாட வந்த புலவருக்கு இல்லை என்று சொல்வது நமக்கு தீரா வசையைத் தேடித் தரும். ஆகவே அருகில் உள்ள புலித்தூறிற் புகுந்து அங்கிருக்கும் புலிக்கு உணவாவதே சாலச் சிறந்தது.
இப்படி எண்ணிய செட்டி பிள்ளையப்பன் புலி உறையும் இடத்திற்குச் செல்லலானார்.
அப்போது அங்கு கொள்ளையடித்த பொற்குவியல்களை பங்கு போட்டுக் கொண்டிருந்த திருடர்கள் அவரைப் பார்த்து பயந்து அவற்றை அப்படியே விட்டு விட்டு ஓடினர்.
இதனால் மகிழ்ந்த செட்டி பிள்ளையப்பன் அவற்றை எடுத்து வந்து புலவருக்கு உரிய முறையில் பரிசுகளை வழங்கினார்.
கொங்கு மண்டல சதகம் 99வது பாடல் செட்டி பிள்ளையப்பனைப் போற்றுகிறது.
பாடல் வருமாறு:
கவியின் மெலிந்த புகல்கவிக் கீயக் கயிலின்மையால்
புலியி னுழைபுக்குக் கள்வர்கள் பங்குப் பொருட்டிரளை
மலிய வெடுத்தப் புலவனுக் கீந்த வடகரையான்
வலியன் கனவாளன் செட்டிபிள் ளான்கொங்கு மண்டலமே
இதன் பொருள் : வறுமையால் தளர்வுற்ற காலத்தில், கூறிய பாட்டைக் கேட்டு அவருக்குப் பொருள் கொடுக்க கையில் ஒன்றும் இல்லாததால், புலி வாழுமிடத்தில் புகவே, அங்கு திருடர்கள் பங்கிட்டுக் கொண்டிருந்த பொற்குவியலை அடைந்து கவி பாடிய புலவனுக்குக் கொடுத்த வடகரை நாட்டினனான செட்டி பிள்ளான் என்பவனும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவரே!
ஒரு சுவையான செய்தி, பாரியூர் ஸ்ரீ அமரவிடங்கப் பெருமானார் சிவாலயத்தில் ஒரு கற்சாசனம் உள்ளது. அதில் செட்டி பிள்ளையப்பன் நில தானம் செய்த செய்தி உள்ளது.
“ஸ்வஸ்தி ஸ்ரீ…..வீர வல்லாள தேவர் .. ராஜ்ஜியம் பண்ணியருளா நின்ற … வத்ஸரத்து ஆவணி மாத முதல் காஞ்சிக் கூவல்நாட்டில் பாரியூர் வெள்ளாளன்களில் செட்டி பிள்ளையப்பனேன் உடையார் அமரவிடங்கப் பெருமாள் திருப்பள்ளிஎழுச்சிக்கு….”
இந்த அரிய சம்ப்வத்தை அமரவிடங்கர் குறவஞ்சி என்னும் நூ பாடலாக இப்படித் தருகிறது:
இட்டமான கவிசொல்லும் பாவலர்க்
கில்லையென்று சொலற்கஞ்சிக் காட்டில்வாழ்
துட்ட வன்புலித்தூறிற் புகுந்தநற்
றூயவன் கனவாள குலத்தினன்
செட்டி பிள்ளையப் பன்றினந் தொண்டுசெல்
தேவிமாமலை மாதொரு பங்குள
கட்டு செஞ்சடையமர விடங்கனார்
கதித்துவாழ் பாரியூ ரெங்களூரே

தமிழ்ப் புலவர்களை மதித்து வாழ்ந்த நாடு தமிழ் நாடு; அதில் கொங்கு மண்டலத்தின் சிறப்பை இந்தப் பாடல் மூலம் அறிந்து மகிழ்கிறோம்.
***






