
Written by S.NAGARAJAN
Date: 16 NOVEMBER 2017
Time uploaded in London- 6-27 am
Post No. 4400
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures are not related to the story.
தமிழ் இன்பம்
25-10-2017 அன்று வெளியான கட்டுரை எண் 4333 – ‘பயறு மிளகான கதை’- கொங்கு மண்டலப் பெருமையைக் கூறும் ஒன்று.
வெண்மைப் பெண்மணி தமிழ்ச் சங்கம் அமைத்தது!
ச.நாகராஜன்
கொங்கு மண்டலம் பல விசித்திரமான சம்பவங்களைக் கொண்ட தங்க மண்டலம்.
அந்த வியத்தகு சம்பவங்களில் வெண்மைப் பெண்மணி சம்பவமும் ஒன்று.
அதைப் போற்றி கொங்கு மண்டலப் பெருமைகளில் ஒன்றாக அதையும் தன் கொங்குமண்டல சதகத்தில் சேர்த்துப் பாடியுள்ளார் கார்மேகக் கவிஞர்.
அந்தப் பாடல் வருமாறு:
காடையிற் சேடக் குலத்தான் மகள்மெய்க் கழுவறைந்து
மேடையிற் சங்கப் பலகையுண் டாக்கிநல் வேப்பமலர்த்
தோடையும் பாடகக் காங்கேயன் றன்னைச் சுமந்துபெற்று
மாடையு நேர்தெய்வப் பேறுபெற் றாள்கொங்கு மண்டலமே
(கொங்கு மண்டல சதகம் – பாடல் எண் 75)
பாடலின் பொருள் :- சேடர் குலத் தலைவனின் மகள், நட்ட கழுவிற் சத்தயம் செய்து, சங்கப் பலகை உண்டாக்கி, வேப்ப மாலை பெற்ற பாடகம் அணிந்த, இளமையனான காங்கேயனைப் பெற்று பெரும் புகழ் பெற்றாள். அவள் இருந்ததும் கொங்கு மண்டலத்திலேயே என்பதாம்.
இந்தப் பாடல் சுட்டிக் காட்டும் வரலாறு சுவையான ஒன்று.
காங்கேய நாட்டுக் காடையூரில் கொங்கு வேளாளரில் சேட குலத் தலைவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
அந்தப் பெண் குழந்தை பிறவியிலேயே வெண்மையாக இருந்தது. அவள் வளர்ந்து பெரியவள் ஆனாள்.

கீழ்கரைப் பூந்துறை நாட்டுக் கருமாபுரத்திலிருந்து வந்திருந்த பொருளந்தை குலத்து வாலிபன் ஒருவனுக்கு அவள் மணம் முடித்துக் கொடுக்கப்பட்டாள்.
விவாக கால ஒப்பந்தப்படி காடையூரில் காணி முதலிய உரிமைகளை அந்த வெண்மைப் பெண்ணின் சகோதரர்கள் கொடுக்க மறுத்து விட்டனர்.
சபை கூடியது. அந்தச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப் படி, நட்ட கழுவில் அந்த வெண்மைப் பெண்மனி கையறைந்து சத்தியம் செய்தாள். தன் உரிமைகளை அடைந்தாள்.
அந்தப் பெண்மணியின் குழந்தைக்குக் கல்லி கற்பிப்பதற்காக, சில தேர்ந்த தமிழ்ப் புலவர்களைக் கூட்டி அந்தப் பெண்மணி ஒரு தமிழ்ச் சங்கத்தை உருவாக்கினாள்.
அந்தப் புலவர்களிடம் தமிழ் கற்ற சிறுவன் பாண்டிய வீரனின் படையில் சேர்ந்தான்.
போருக்குச் சென்ற அவன், பாண்டியன் படைக்கு வெற்றி பெற்றுத் தந்தான்.
அதனால் மகிழ்ந்த பாண்டிய மன்னன் அவனுக்குக் காங்கேய்ன் என்ற பட்டத்தைத் தந்ததோடு அரச சின்னங்களான மாலை, கொடி ஆகியவற்றைக் கொடுத்துக் கௌரவித்தான்.
இதுமட்டுமல்லாமல் பின்பு இம்முடிக்காங்கேயன் – மன்றாடி என்ற பட்டத்தை இவன் சந்ததியினர் பெற்றனர்.
இப்படிப்பட்ட வியத்தகு சம்பவம் நிகழ்ந்தது கொங்கு மண்டலத்தில் தான் என்று வியந்து பாடுகிறார் கவிஞர்.
தமிழரின் வீரத்திற்கும் தமிழ்ப் பற்றிற்கும் கொங்கு மண்டலம் இது போன்ற ஏராளமான சம்பவங்களைச் சான்றாகத் தருகிறது.
***