சம்பூர்ண ராமாயணம் படம் பார்த்த ராஜாஜி

sampoorna-ramayanam-400x400-imadat38gaatymk5

Compiled by S Nagarajan

Article No. 1687; Dated– 3 March 2015.

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 7

by ச.நாகராஜன்

 

ஶ்ரீ ராமராஜ்யம்!


சம்பூர்ண ராமாயணம் படம் பார்த்த ராஜாஜி

 

பொதுவாக திரைப்படங்களைப் பார்க்க விரும்பாத மூதறிஞர் ராஜாஜி திரைப்படங்களைப் பார்க்கத் தமக்கு நேரமில்லை என்று சொல்லி ஒதுங்கி விடுவது வழக்கம். ஆனால் சம்பூர்ண ராமாயணம் படம் பார்க்க அவரை அழைத்த போது படம் பார்க்க வந்ததோடு பரதனாக நடித்த சிவாஜிகணேசனின் நடிப்பு சிறப்பாக அமைந்திருப்பதாகவும் பாராட்டினார்.பொதுவாக ராமாயணம் பற்றிய இதே ஈடுபாடு இந்த தேசத்தில் பிறந்த சிறு குழந்தை முதல் மூதறிஞர் வரை இருப்பதில் வியப்பே இல்லை. ராமாயண மஹாபாரத இதிஹாஸம் என்றால் மக்களுக்குத் தனி ஒரு ஈடுபாடு என்றும் உண்டு.தொலைக்காட்சியில் ராமாயணம் தூர்தர்ஷன் வாயிலாக ஒளிபரப்பப்பட்ட போதும் மக்கள் அனைவரும் குறிப்பிட்ட அந்த ஒளிபரப்பு நேரத்தில் தொலைக்காட்சிப் பெட்டிக்கு குடும்பத்துடன் அடைக்கலமாயினர்.

ramayan1

ஶ்ரீராமராஜ்யம்

இந்த வகையில் ராமாயணம் மீண்டும் தெலுங்குப் படவுலகில் 2011இல் வெற்றிகரமாகப் படமாக்கப்பட்டது.ஶ்ரீராமராஜ்யம் என்ற படம் ராமர் அயோதியில் பட்டம் சூட்டப்பட்ட பின்னர் நடந்த நிகழ்வுகளைக் கொண்ட அருமையான படம்.

பிரபல டைரக்டரான பாபு இதை இயக்க படங்களில் நிரந்தர ராமராக வலம் வந்த என்.டி.ராமாராவின் புதல்வர் சூப்பர்ஸ்டார் பாலகிருஷ்ணா ராமராகவும் நயன்தாரா சீதையாகவும் நடித்த ஶ்ரீராமராஜ்யம் படம் 2011ஆம் ஆண்டு திரையிடப்பட்டது. இது 2012ஆம் ஆண்டு டப்பிங் செய்யப்பட்டு தமிழிலும் மலையாளத்திலும் வெளி வந்தது. 1943ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தி படத்தின் தலைப்பே தனக்கு உத்வேகமூட்டியது என்றார் பாபு.

இசை அமைத்தவர் இளையராஜா. ஆத்மார்த்தமாக இசை அமைத்த அவரது பாடல்கள் 170 நிமிட நேர படத்தில் 50 நிமிடம் 25 விநாடிகள் எடுத்துக் கொண்டதென்றால் பாடலின் முக்கியத்துவம் பற்றிக் கேட்க வேண்டுமா என்ன? 15 பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஷ்ரேயா கோஷல் உள்ளிட்ட பல பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் பாடினர்.ஜொன்னவிதூல ராமலிங்கேஸ்வர ராவ் பாடல்களை இயற்றினார். அருமையான பாடல்கள் அனைத்தையும் வரவேற்ற ரசிகர்கள், இன்றும் தவறாமல் அவற்றை யூடியூப் உள்ளிட்ட பல்வேறு இணையதள பாடல்தளங்களில் கேட்டு ரசிக்கின்றனர்.

sankarabharanam-400x400-imad2r8gnyjansmh

சங்கராபரணம்

இதே போல தெலுங்கில் தயாராகி தமிழில் டப் செய்யப்பட்ட 1979ஆம் ஆண்டு திரைப்படமான சங்கராபரணம் குறிப்பிடத் தகுந்த ஒரு படம். இதில் ராமரைப் பற்றிய பத்ராசல ராமதாஸரின் பாடல் ஒன்று இடம் பெற்று அனைவரையும் உருக்கியது. வாணி ஜெயராம் பாடிய பாடலை யாருமே மறக்க முடியாது.

ஏ தீருக நனு தய ஜூசே தவோ, இன வம்சோத்தம ராமா

நா தரமா   பவசாகர மீதனு, நளின தளேக்ஷண ராமா

ஶ்ரீ ரகு நந்தன, சீதா ரமணா, ச்ரித ஜன போஷக ராமா

காருண்யா லய, பக்த வரத நின்னு, கன்னதி காணுபு ராமா

க்ரூர கர்மமுலு, நேரக சேசிதி, நேரமுலெஞ்சகு ராமா

தாரித்ரயமு, பரிகாரமு சேயவே, தெய்வ சிகாமணி ராமா

எப்படி கருணை புரிவாய். எப்படி சாகரம் கடப்பேன், வம்சோத்தம ராமா, ரகு நந்தனனே, சீதையின் ரமணனே, அடியாரைக் காப்பவனே, காருண்யமயமானவனே, பக்தர் தம் வரதனே, க்ரூரமான கர்மங்கள் செய்தாலும் அவற்றை நீக்கி, தரித்திரம் போக்கி அருள்வாய் தெய்வ சிகாமணியே, ராமா!’ என்ற பொருளை உடைய இதை வாணி ஜெயராம் தன் பக்திக் குரலில் பாடியது அனைவரையும் மகிழ்வித்தது!

tel_shankarabharanam

சங்கராபரணம் படத்தை இயக்கியவர் பிரபல டைரக்டரான கே.விஸ்வநாத். இந்தப் படம் வெளின முதல் நாளில் கூட்டமே இல்லை. ஆனால் படத்தைப் பார்த்து வெளியே வந்த ரசிகர்கள் கூறிய அபாரமான புகழ்மொழிகளால் அடுத்த நாளிலிலிருந்து கூட்டம் அலை மோத ஆரம்பித்தது. ஹைதராபாத் ராயல் தியேட்டரில் 216 நாட்கள் ஓட, நாட்டின் இதர பகுதிகளில் உள்ள பல திரையரங்கங்களில் சுலபமாக நூறு நாட்களைத் தாண்டியது!

Sankarabharanam-Movie-Stills (3)

ப்ரோசேவாரெவரு ரா

சங்கர சாஸ்திரியாக நடித்த ஜே.வி.சோமயாஜுலு அந்தப் பாத்திரமாகவே மாறி விட்டார். இதில் ராமரைப் பற்றிய புகழ் பெற்ற இன்னொரு பாடலும் உண்டு.மைசூர் வாசுதேவாசார் இயற்றிய ப்ரோசே வாரெவரு ரா என்ற பாடலை யாருமே மறக்க முடியாது. இதை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் வாணி ஜெயராமும் தங்கள் அற்புதக் குரல் வளத்தால் மெருகேற்றினர்.

மைசூர் வாசுதேவாசார் (தோற்றம் 28-5-1865 மறைவு 17-5-1961) பெரிய ராமபக்தர்.தியாகராஜ ஸ்வாமிகளின் சீடர் பரம்பரையில் வந்தவர். 95 வயது வரை வாழ்ந்த இவர் சுமார் 200 கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை சம்ஸ்கிருதம் மற்றும்ம் தெலுங்கில் உள்ளவை.

நினு விநா ப்ரோசேவாரெவரு ரா – உன்னையல்லால் என்னைக் காப்பவர் யார்?

ரகுவரா – ஓ ரகு குல திலகமே

 நானு நீ சரணாம்புஜமுலு – நான் உன் சரணாரவிந்தங்களை

நே விடஜால கருணாலயால – விட முடியாது, கருணைமயமானவனே!

கமாஸ் ராகத்தில் அமைந்த இந்தப் பாடலைக் கேட்டு உருகாதவர் யாரும் இருக்க முடியாது! படக்காட்சியும் அபிநயங்களோடு அமைந்திருந்தது!

Sankarabaranam Movie in Tamil Photos (6)

இதிஹாஸம் ஏற்படுத்தும் தெலுங்கு, தமிழ் ஒற்றுமை

தெலுங்கு திரைப்பட உலகமும் தமிழ்த் திரைப்பட உலகமும் மிக அன்யோன்யமாகவே ஆரம்ப காலம் முதல் இருந்து வந்துள்ளது. இதற்கான காரணம் பண்பாட்டின் அடிப்படையில் மனதால் அனைவரும் ஒன்று பட்டிருந்த காரணத்தினால் தான்! அரசியல் அந்தக் காலத்தில் திரையுலகில் புகவில்லை! சென்னையில் இருந்த ஸ்டுடியோக்களைத் தாராளமாகப் பயன்படுத்திய திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு இரு மொழிகளில் ஒரே சமயத்தில் படம் எடுப்பது சுலபமாக இருந்தது.

ஆடல் பாடல், கிளுகிளுப்புப் படங்களையே தெலுங்கு உலகம் விரும்பியது என்று சிலர் கூறுவது சரியில்லை. மிக அழகான கலைப் படங்களையும் இதிஹாச புராணப் படங்களையும் தெலுங்கு உலகம் தந்திருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும். சம்பூர்ண ராமாயணம், லவகுசா, ஶ்ரீ ராமராஜ்யம், சங்கராபரணம் போன்ற படங்கள் போதாதா, இதை நிரூபிக்க!

இந்த அற்புதமான தெலுங்கு தமிழ் ஒற்றுமை காலத்தை வென்று நிலை நிற்க ராமரின் அருளை வேண்டுவோம்!

*************

இன்று போய் நாளை வாராய்!

01cp_sampoorna_ram_1129781f

Research Paper written by ச.நாகராஜன்

Research Article No.1658; Dated 18th February 2015.

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 4

ச.நாகராஜன்

ராமனை தோள் வலி கூறுவதன் பயன்!

காலம் காலமாக பாரத மக்களிடம் இருந்து வரும் நம்பிக்கையை அப்படியே சுருக்கமாக மஹாகவி கம்பன் இப்படிக் கூறுகிறான்:

“நாடிய பொருள் கை கூடும்ஞானமும் புகழும் உண்டாம்

 

வீடியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்

 

நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை சூடிய

 

ராமன் தோள் வலி கூறுவோர்க்கே!”

ராமன் தோள்வலியைக் கூறி மக்களிடம் உத்வேகம் ஊட்ட ஜனரஞ்சக ஊடகமான

 

திரைப்படம் முன் வந்தது.

பக்திப் படங்களில் ஒரு திருப்பம்!   

 

1958-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தன்று தமிழகத்தில் ஏராளமான தியேட்டர்கள் விழாக் கோலம் பூண்டன. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த சம்பூர்ண ராமாயணம் திரைப்படம் அரங்கங்களில் வெளியிடப்பட மனத்தைக் கொள்ளை கொண்ட இதிஹாஸத்தின் திரை வடிவைப் பார்க்க ரசிகர்கள் அலை மோதினர்.

எம்.ஏ. வேணு தயாரிக்க கே.சோமு இயக்க திரைப்படக் கதை, வசனத்தை ஏ.பி.நாகராஜன் உருவாக்க ராமராக என்.டி.ராமாராவும், பரதனாக நடிகர்திலகம் சிவாஜிகணேசனும், சீதையாக பத்மினியும், ராவணனாக டி.கே.பகவதியும் மண்டோதரியாக சந்தியாவும் தோன்ற படம் பெரும் வெற்றியைப் பெற்றது.

திரைப்படத்தை எள்ளி நகையாடியவர்கள் கூட அது அரும் பங்கை ஆற்றவல்லது என்று ஒத்துக் கொள்ளுமளவு படம் அனைவரின் மனதிலும் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது.


ravana

மஹாதேவனின் இசை; மருதகாசியின் பாடல்கள்!

ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு நடித்த நடிப்பால் படம் களை கட்டிய போது இசை ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டது. இசை அமைத்தவர் கே.வி.மஹாதேவன்.

பாடலை எழுதியவரோ கவிஞர் ஏ.மருதகாசி. ராமன் பாடல்களுக்கும் இவருக்கும் நிறையப் பொருத்தம் இருப்பதாகத் திரையுலகே முத்திரை குத்தி விட்ட ஒரு பெரும் கவிஞர் மருதகாசி.

படத்தின் வில்லனாக இருக்கும் ராவணனை அறிமுகப்படுத்தும் காட்சியே அமர்க்களமாகப் படமாக்கப்பட்டிருந்தது. ராவணனுடைய சபையில் வீணை இசைத்துப் பாடி பரிசு பெற விழையும் வெளிநாட்டுப் பாடகன் ஒருவனை ராவணன் வரவேற்றுப் பாட வைக்கும் காட்சி அது.

வீணைக் கொடியுடைய வேந்தனே

வீரமே உருவாகிடும் இசை வெள்ளமே

 

உயிரெனவே நினைந்து உலவும் வீணைக் கொடியுடைய வேந்தனே

ஆனந்தகான அமுத மழையே

 

பொழிந்து மனம் தனை உருக வழி செய்த

வீணைக் கொடியுடைய வேந்தனே (பாடல் – ஏ.மருதகாசி)

மோஹன ராகத்தில் அற்புதமான பாடல், திருச்சி லோகநாதனின் குரலில், மலர இதைத் தொடர்ந்து

ராவணன் சபையினரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் அவர்களின் கேள்விக்கு பதில் அளித்து ஒவ்வொரு ராகமாக விவரிக்கும் காட்சி இடம் பெறுகிறது.

காலையில் பாடும் ராகம் பூபாளம்

உச்சியில் பாடும் ராகம் சாரங்கா

மாலையில் பாடும் ராகம் வசந்தா

இரக்கத்திற்கான ராகம் நீலாம்பரி

மகிழ்ச்சிக்கான ராகம் தன்யாசி

யுத்தத்திற்கான ராகம் கம்பீர நாட்டை

வெண்பா பாட சங்கராபரணம்

அகவல் இசைக்க தோடி

 

தாழிசைக்கு கல்யாணி

 

என ராவணன் முடிக்க கயிலை நாதனைக் கானத்தால் கவர்ந்த ராகம் எது என மண்டோதரி (சந்தியா) வினவ காம்போதியை வீணையில் ராவணன் இசைக்கிறான்.

 

அற்புதமாக இப்படி ராவணனின் ஏற்றத்தைச் சித்தரிக்கக் காரணம் அப்படிப்பட்ட ஏற்றமுடையவன் தவறாக, அயலான் மனைவியை அபகரித்த பெரும் பாவத்தைச் செய்து அழிந்தான் என்பதை வலியுறுத்தவே தான்!


Sampoorna-Ramayanam

கம்பனின் ராவணன்

 

கம்பன் ராவணனை மிக அழகாகச் சித்தரிப்பான்.அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்பதைத் தன் காவியத்தின் லட்சிய வாசகமாக வைத்து எப்படிப்பட்ட பெரும் ராவணேஸ்வரன் தன் செய்கையால் இப்படி வீழ்ந்து பட்டான் என்பதைத் திறம்பட எடுத்துரைப்பான்.

 

தாரணி மௌலி பத்து.

நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நா

சங்கரன் கொடுத்த வாள்.

முக்கோடி வாழ் நாளும் முயன்றுடைய பெரும் தவமும் கொண்டவன்! – இது தான் ராவணன்.

ஆனால் தேவியைக் அபகரித்து வந்ததைப் பாவம் என்று சொல்லி அவளை விடுவிக்க அனைவரும் ஆலோசனை கூறுகையில்,

 

“ஆவியை விடுவேன் அல்லால் தேவியை விடுவேன் அல்லேன்” என்று அகங்காரத்துடன் மொழிந்தவன் ராவணன்.’என்னையே நோக்கி நான் இந்த நெடும் பகையைத் தேடிக் கொண்டேன்’ என்கிறான்! தன் வீரத்தின் மீது அவனுக்கு அவ்வளவு நம்பிக்கை!


rama fb

போர், பெரும் போர்!

 

போர் எனில் இது போர். புண்ணியத் திருப்போர். அறத்திற்கும் மறத்திற்கும் இடையே நடந்த கடும் போர்! அது எப்படி இருந்தது?

 

விண் போர்த்தன திசை போர்த்தன மலை போர்த்தன விசை ஓர்

கண் போர்த்தன கடல் போர்த்தன படி போர்த்தன கலையோர்

எண் போர்த்தன எரி போர்த்தன இருள் போர்த்தன என்னே

திண் போர் தொழில் என்று ஆனையின் உரி போர்த்தவன் திகைத்தான்!

 

(யுத்த காண்டம் – கம்ப ராமாயணம்)

ஆனால் அண்ணலின் கடும் அஸ்திரங்கள் அவனை வீழ்த்த, ஆயுதமின்றி இருக்கும் ராவணனை நோக்கி,

 

ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த பூளை ஆயின கண்டனை;

 

இன்று போய் போர்க்கு நாளை வா”

 

(யுத்த காண்டம் – கம்ப ராமாயணம்)

 

என்று  ராமன் கூறுகிறான். ‘பெரும் காற்றில் பறந்த பூளைப் பூக்களைப் போல உன் துணைப் படைகள் பறந்தே போயின; இன்று போய் (இன்னும் போர் புரியும் எண்ணம் இருக்குமானால்) நாளை வா; (இல்லையேல் சரணாகதி எனில் உடனே சரண் அடை”)’ என்கிறான் ராமன்!

ramarama

சிவனிடம் முறையீடு!

 

போர்க்களக் காட்சியை அடுத்து ராவணன் மனம் சோர்ந்து அரண்மனை திரும்புகிறான்.

 

சிவனுக்கு சாம கானம் இசைத்தவன்; சிவ பக்தனான ராவணன் சிவனிடம் முறையிடும் காட்சி அடுத்து இடம் பெறுகிறது.

 

டி.கே.பகவதி வீணை இசைக்கும் காட்சியில் இன்று போய் நாளை வாராய் என்ற அற்புதமான பாடல் மலர்கிறது. பாடலைப் பாடியவர்  சிதம்பரம் ஜெயராமன்.

 

கே.வி,மஹாதேவன் இசை அமைத்த திலங் ராகப் பாடல் இன்றளவும் ஜீவன் உள்ளதாய் அனைவராலும் விரும்பிக் கேட்கப்படுகிறது.

“இன்று போய் நாளை வாராய் என எனை ஒரு மனிதனும் புகலுவதோ!

மண்மகள் முகம் கண்டே மனம் கலங்கிடும் நிலை இன்று ஏன் கொடுத்தாய்?

 

எண்டிசை வென்றேனே! அன்று இன்னிசை பொழிந்துனைக் கண்டேனே” (பாடல்- ஏ.மருதகாசி)

அற்புதமான பாடல்; அற்புத இசை; அற்புத நடிப்பு.

அனைவரின் மனமும் தவறு செய்த பேரரசனுக்காக ஒரு கணம் உருகவே செய்கிறது, காட்சி அமைப்பால்!

 

மக்களை மனம் கவர்ந்த ராமர் என் டி ராமாராவ் என்றால் சீதை பத்மினி தான்; பரதன் சிவாஜி கணேசன் தான். இராவணன் டி.கே பகவதி தான். தசரதன் நாகையா தான்!

அனைவராலும் பார்க்கப்பட்ட நல்ல படமாக அமைந்த சம்பூர்ண ராமாயணம் திரைப்பட வரலாற்றில் பக்திப் படங்களில் ஒரு மைல் கல்!

-தொடரும்

குறிப்பு: படம் வெளியிடப்பட்ட ஆண்டாக 1956 என சில தளங்களும் பத்திரிகைகளும் குறிப்பிட்டாலும் கூட, 1958 என்று இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பது சிவாஜிகணேசனின் அதிகாரபூர்வமான இணையதளமும் அதைச் சுட்டிக்காட்டும் விக்கிபீடியா தரும் விவரத்தின் அடிப்படையிலும் தான்!

 

-தொடரும்