
Written by S NAGARAJAN
Date: 30 June 2017
Time uploaded in London:- 6-10 am
Post No.4038
Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.
தர்ம உறவு
தந்தையே மகனின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் காரணம்!
ச.நாகராஜன்
ஒரு மகன் பெரும் புகழ் பெற்று ஒழுக்க சீல்னாக வாழ்கிறான் என்றால் அதற்கான முழுப் பெருமையும் தந்தையையே சாரும்.
அதே போல ஒரு மகன் இழிவு தரும் காரியங்களில் இறங்கி மிகவும் குணக்கேடனாக இருந்தால் அதற்கான முழுப் பொறுப்பும் தந்தையையே தான் சாரும்.
ஈன்றெடுத்த தாய் எப்போது உவப்பாள்? தன் மகனைச் சான்றோன் எனக் கேட்டவுடன்!! அப்போது மிகவும் கஷ்டப்பட்டு கருவில் சுமந்து தாங்க முடியாத வலியையும் தாங்கி மகனைப் பிரவிசத்தற்கு மேலாக – சான்றோன் என்று சபையினர் கூறும் போது – அவள் மிக அதிக மகிழ்ச்சி அடைவாள்.

மகன் அவையிலே முந்தி இருந்து போற்ற்ப்பட்டு சாதனை செய்தான் என்றால்.”இவன் தந்தை என் நோற்றான் கொல்?”
இவனது தந்தை என்ன தவம் செய்தானோ – என்று அனைவரும் கேட்டு வியப்பர்.
இது வள்ளுவன் வாக்கு.
ஸ்வாமி விவேகானந்தர் (நரேந்திரனாக இருந்த இளம் வயதில்) ஒரு நாள் தன் தந்தை விஸ்வநாத் தத்தரிடம், “அப்பா!எனக்கு என்ன தான் நீ தந்திருக்கிறாய்?” என்று கேட்டார்.
உடனே அவர் தந்தை அவரை அழைத்துச் சென்று ஒரு கண்ணாடியின் முன் நிறுத்தினார்: “இதோ இங்கே பார்! பார்த்து நீயே தெரிந்து கொள்! நான் உனக்கு என்ன ஒரு விலைமதிப்பற்ற பரிசை உனக்குக் கொடுத்திருக்கிறேன் என்று” என்று பதில் கூறினார்.
ஆம், ஒரு தந்தை மகனை முழுதுமாக உருவாக்குகிறார். தேகம், மனம், ஆன்மா அனைத்திற்குமான வளர்ச்சியை ஒரு தந்தையே தருகிறார்.
நமது அறநூல்கள் மிகத் தெளிவாக கூறுகின்றன இப்படி:
பிதா ஸ்வர்க: பிதா தர்ம: பிதா ஹி பரமம் தப: I
பிதரி பிரதிமாபன்னே ப்ரீயந்தே சர்வ தேவதா: II
தந்தையே ஸ்வர்க்கம்.
தந்தையே தர்மம்
தந்தையே பரம தவம்
தந்தையை மதி; சகல தேவர்களும் ப்ரீதி அடைவர்.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது நமக்குத் தரப்பட்ட அறவுரை.
ரோல் மாடலாக தந்தையையே ஒரு நல்ல மகன் சுட்டிக் காட்டுவான்.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் டபிள்யூ புஷ் தந்தையர் தினத்தன்று தனக்குத் தெரிந்த வரையில் தன் தந்தையே உலகில் ஒரு அருமையான மனிதர் என்று கூறினார். தனக்கு எல்லையற்ற அன்பை வாரி வழங்கியவர் தன் தந்தையே என்று அவர் கூறி மகிழ்ந்தார்.
மேலை நாடுகளில் தந்தையர் தினம் அன்னையர் தினம் காதலர் தினம் என்று வகை வகையாக தினங்கள் உண்டு.
அந்த ஒரு நாளில் மட்டும் தந்தையருக்கு மரியாதை; அன்னையருக்கு மரியாதை! காதலுக்கு மரியாதை!
ஆனால் ஹிந்து தர்மத்திலோ ஒவ்வொரு கணமும் மரியாதை!
சங்க இலக்கியத்தில் வரும் ஒரு பாடல் மிகச் சரியாக தந்தை தாய் உறவைச் சித்தரிக்கிறது.
ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே!
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!
ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!
புறநானூறு 312ஆம் பாடல்
பொன் முடியார் என்ற பெண் புலவர் பாடிய பாடல் இது.
வள்ளுவரைப் போலவே இவரும் ஈன்று பெறுதலைத் தாயின் கடனாகவும் சான்றோன் ஆக்குதலைத் தந்தையின் கடனாகவும் குறிப்பிடுவது பொருள் பொதிந்த ஒன்றாகும்.
பௌதிக ரீதியிலான தாம்பத்ய உறவைத் தாண்டி அமானுஷ்யமான கர்ம பலன் (புண்ய பாவப் பரிசு) தத்துவத்தை வள்ளுவரும் பொன்முடியாரும் சித்தரிக்கின்றனரோ?!
ஹிந்து மத அறநூல்கள் விவரிக்கும் ரகசியம் இதில் அடங்கி இருக்கிறதல்லவா?

எல்லா மதங்களும் தந்தை – தாய் – மகன் உறவைப் புனித உறவாகச் சித்தரிக்கின்றன என்பதில் ஒரு சிறிதும் ஐயமில்லை.
ஆனால் அதையும் தாண்டி – அதாவது பௌதிகரீதியிலான உறவையும் தாண்டி தந்தை – மகன், தாய் – மகன் உறவை ஹிந்து மதம் தர்ம உறவாகச் சித்த்ரிக்கிறது.
ஜென்ம பந்தம் என்று இதைத் தான் நாம் சொல்கிறோம்.
இந்த தர்ம உறவைப் போற்றுவது ஹிந்து மதத்தில் தோன்றிய ஒவ்வொருவரின் கடமையாக ஆகிறது.
பிறந்ததிலிருந்து கொள்ளி போடுவது வ்ரை ஒரு தொடர் தர்ம உறவு தந்தை – மகன் உறவாக ஆகிறது.
என்ன வியக்கத்தக்க – ரகசியம் அடங்கிய – ஒரு கொள்கை இது!