Written by ச.நாகராஜன்
Article no. 1716; dated 14 March 2015
Up loaded at 12-30 London time
கலைமகளில் முன்பு வெளியான பழைய கட்டுரை இது. அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க மறுபதிப்பு செய்யப்படுகிறது.
ச.நாகராஜன்
தமிழரின் வானவியல் அறிவு
தமிழரின் வானவியல் அறிவு பிரமிக்கத் தக்கது. பிரபவ தொடங்கி அக்ஷய முடிய அறுபது ஆண்டுகளைத் தமிழ் வருடங்கள் என்றே கூறுகிறோம். ஆண்டுகள் ஐம்பதாகவோ, நாற்பதாகவோ ஏன் வகுக்கப்படவில்லை? மேலை நாடுகளில் ஆண்டுகளுக்குப் பெயர் சூட்டும் வழக்கமும் இல்லை; அறுபது வருடச் சுழற்சியால் வருடங்களைப் பிரிப்பதும் இல்லை. நமது முன்னோர் மட்டும் ஏன் இப்படி வகுத்தனர் என்ற வினா எழுவது இயல்பே! அறிவியல் ரீதியில் வானிவியல் அடிப்படையில் அற்புதமாக அமைக்கப்பட்ட ஏற்பாடே அறுபது வருடச் சுழற்சி ஆகும். குரு கிரகம் ஒரு முறை வான வட்டத்தைச் சுற்றி வர (12 ராசிகளைக் கடக்க) 12 வருடங்கள் ஆகும். சனி கிரகம் வான வட்டத்தைச் சுற்றி வர 30 வருடங்கள் ஆகும். குருவும், சனியும் அசுவதி நட்சத்திரத்தில் காணப்படும் போது தோன்றும் வருடமே பிரபவ ஆகும்.
ஐந்து முறை ஒரு வானவட்டத்தைச் சுற்றி வர 60 ஆண்டுகள். இந்த பிரஹஸ்பதி சக்கரத்தின் அறுபது மாதங்களே பிரபவ, விபவ, சுக்ல முதலான அறுபது வருடங்கள் ஆகும். இது மட்டுமின்றி ஆண்டுக்குப் பெயர் சூட்டியதோடு அதன் மூலம் அந்த ஆண்டின் இயல்பையும் நம் முன்னோர் குறித்து வைத்துள்ளனர். அது மட்டுமின்றி வருஷத்திய பலனுக்கான வெண்பா வேறு தனியே தரப்படுகிறது. எடுத்துக்காட்டாக பிரபவ எனில் பொருள் உற்பத்தி ஆகுதல் என்று பொருள்; விபவ என்றால் ஐஸ்வர்யம்; சுக்ல என்றால் நன்மை. இப்படி அறுபது வருடத்திற்கும் தனித்தனி பொருள் உண்டு. சித்ரபானு வருஷத்திய பலன் பற்றிய வெண்பா பின்வருமாறு:-
சித்ர பானிற் சிறக்கமழை மிகுந்து
வித்துள்ள வெல்லாம் விளையுமே – எத்திசையும்
பார்பாருக் காகாது பாவேந்தர்க்கே நலமாம்
தீர்ப்பாக பூமிபயஞ் செப்பு.
தைத்திரீய சம்ஹிதா 60 வருடங்களை விரிவாக விளக்குகிறது.
சூரிய வருடமும் சந்திர வருடமும்
சூரிய வருடம் என்றும் சந்திர வருடம் என்றும் வருடங்களை இரண்டு விதமாகக் கணக்கிடுவது வேத காலம் தொட்டு இருந்து வருகிறது. சூரிய வருடம் என்பது பூமி சூரியனைச் சுற்ற எடுத்துக் கொள்ளும் காலமாகும். சந்திர வருடம் என்பது சந்திரனை அடிப்படையாகக் கொண்டது. இரண்டுக்கும் உள்ள வேறுபாடு சுமார் 11 நாட்கள் ஆகும். 5 வருடத்திற்கு ஒரு முறை ஏதாவது ஒரு மாதத்தில் இரண்டு அமாவாசை வரும். தமிழர்கள் சூரியனை அடிப்படையாகக் கொண்ட வருடத்தையே கடைப்பித்து வந்தனர். ஆகவே அறுபது வருடங்களும் தமிழ் வருடங்கள் ஆகிவிட்டன. பஞ்சாங்க கணித சாத்திரத்தில் தமிழர்கள் மிக நுணுக்கமாகக் காலத்தை நிர்ணயிக்கும் ஆற்றல் பெற்றிருந்தனர். ஒரு சூரிய வருடத்திற்கு 365 நாட்கள், 15 நாழிகை, 31 வினாடி, 15 தர்ப்பரைகள் என்று துல்லியமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ என்ற ஒன்பது எழுத்துகளிலேயே பஞ்சாங்கத்தைக் கணித்து விடுகின்றனர். இது மிக்க ஆச்சரியத்தை விளைவிக்கும் ஒன்று.
நாரத புராணத்தில் வரும் கதை
தேவி பாகவதம் மற்றும் நாரத புராணத்தில் 60 வருடங்களை நாரதருடன் தொடர்பு படுத்தி சுவாரசியமாக கதை ஒன்று உள்ளது. ஒரு முறை கிருஷ்ணர் நாரதரைத் தன் ரதத்தில் ஏற்றிக் கொண்டு சென்றார். வழியிலே நீரோடை ஒன்றைக் கண்ட நாரதர் நீர் அருந்தச் சென்றார். முதலில் குளித்துவிட்டு நீரை அருந்துமாறு கிருஷ்ணர் கூறினார். ஆனால் இந்தக் கட்டளையைப் புறக்கணித்து விட்டு நாரதர் குளிக்காமலேயே நீரை அருந்தினார். என்ன ஆச்சரியம்! உடனே அவர் ஒரு அழகிய பெண்ணாக ஆகி விட்டார். அங்கே கிருஷ்ணரும் இல்லை; ரதமும் இல்லை. நாட்டிலே சுற்றி அலைந்த பெண் உருவிலான நாரதர், ரிஷி ஒருவரின் ஆசிரமத்தை அடைந்தார். சமாதியிலிருந்து மீண்ட ரிஷி தன் எதிரே அழகிய பெண் நிற்பதைக் கண்டார். தன்னை சிஷ்யையாக ஏற்றுக் கொள்ளுமாறு அவள் வேண்டவே அவளையே மணந்தார். அந்தப் பெண்ணும் 60 பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். ஒரு நாள் 60 பிள்ளைகளும், கணவனான ரிஷியும் இறந்து விட்டனர். துக்கம் தாளாமல் கதறி அழுத பெண் ஈமக் கிரியைகளைக் கூடச் செய்ய முடியாத அளவில் மிகவும் சோர்ந்து போனாள். அதி பயங்கரப் பசி அவளை வாட்டியது.
பக்கத்திலிருந்த மாமரத்தின் கனியைப் பறிக்க கையை உயர்த்தினாள். ஆனால் அது எட்டவில்லை. வேறு வழியின்றித் தன் கணவன் மற்றும் 60 பிள்ளைகளின் பிணத்தை ஒன்றின் மீது ஒன்று அடுக்கி மேலே ஏறிக் கனியைப் பறித்தாள். அப்போது அங்கே வந்த மறையவர் ஒருவர், கணவன் பிள்ளைகள் இறந்த தீட்டைப் போக்காமல் சாப்பிடுவது தவறு என்று அறிவுறுத்தி முதலில் குளிக்குமாறு கூறினார். அதைக் கேட்ட பெண் கையில் மாங்கனியைத் தூக்கிப் பிடித்தவாறே குளித்தாள். பெண் உரு நீங்கிப் பழைய படி வளையல் மட்டும் மாங்கனியோடு அப்படியே இருந்தது. மறையவர் கிருஷ்ணனாக மாறினார். கிருஷ்ணரின் கட்டளைப்படி மீண்டும் நீரில் இறங்கிக் குளித்த நாரதர் முழு உருவத்தைப் பெற்றார். அவர் கையில் இருந்த மாங்கனி வீணையாக மாறியது. கிருஷ்ணர் நாரதரை நோக்கி, ”உங்களுடன் வாழ்ந்த ரிஷி யாரும் இல்லை; அவரே காலபுருஷன்! 60 பிள்ளைகளும் பிரபவ, விபவ முதலான 60 வருடங்கள்” என்று கூறினார்.
மாயையின் மகிமையை அறிய விரும்பிய நாரதர், ‘காலத்திற்கு உருவம் கிடையாது; ஆனால் அந்தக் காலமே மாயைக்கு உருவமாக இருக்கிறது’ என்ற உண்மையை உணர்ந்தார். நம் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட 60 குண விசேஷங்களையே 60 பிள்ளைகளான வருடங்கள் வெளிப்படுத்துகின்றன. இவ்வாறு காலத்தின் மகிமையை வெளிப்படுத்தும் அழகிய புராணக் கதை பல அரிய உண்மைகளை வெளிப்படுத்துகிறது.
ஜைன சித்தாந்தம்
ஜைன சித்தாந்தப்படி ஐந்து வருட சுழற்சியில் 60 சூரிய மாதங்களும், 61 ருது மாதங்களும், 62 சந்திர மாதங்களும், 67 நட்சத்திர மாதங்களும் குறிப்பிடப்படுகிறது. ஒரு சூரிய வருடத்திற்கு 366 நாளும், ஒரு ருது வருடத்திற்கு 360 நாளும் சித்திர வருடத்திற்கு 354 12/62 நாளும், ஒரு நட்சத்திர வருடத்திற்கு 327 51/67 நாளும் குறிப்பிடப்படுகிறது. என்றாலும் தமிழர்கள் ஏற்ற சூரிய வருடத்தையே உலகெங்கும் இன்று கடைப்பிடித்து வருவதை நினைக்கும் போது தமிழ் நெஞ்சங்கள் உவகை அடைவதில் வியப்பே இல்லை!
***************************





You must be logged in to post a comment.