
Written by London Swaminathan
Date: 20 November 2016
Time uploaded in London: 18-27
Post No.3373
Pictures are taken from various sources; they are representational only; thanks.
contact; swami_48@yahoo.com
காளிதாசனும் கம்பனும் வள்ளுவனும் சங்கப் புலவர்களும் கையாளும் உவமைகள் பாரதப் பண்பாடு ஒன்றே என்று காட்டுகின்றன. இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனை; ஒரே வகையான உவமை. ஆயினும் உலகில் , வேறெங்கும் இந்த உவமைகளைக் காணமுடியாது. மரமும் மேகமும் உலகம் முழுதும் காணப்படும். ஆயினும் பாரதப் புலவர்களுக்கு மட்டுமே அவைகளைப் பார்த்த மாத்திரத்தில் நற்சிந்தனை எழுகின்றது.
காளிதாசன் எழுதிய சாகுந்தல நாடகத்தில் கூறுவான்:-
பவந்தி நம்ராஸ் தரவ: பலாகமை
நர்வாம்புபிர்தூர விலம்பினோ கனா:
அனுத்ததா: சத்புருஷா: சம்ருத்திபி:
ஸ்வபாவ ஏவைஷ பரோபகாரிணாம்
–சாகுந்தலம் 5-12

பொருள்:-
பழங்கள் நிறைந்த மரம் வளைந்து வணங்கி கீழ்நோக்கி நிற்கிறது. நீர் நிரம்பிய மேகம் விண்ணில் தாழத் தவழ்கிறது. நகரும் பொருளான மேகமும் நிலையான பொருளான மரமும் கூட உதவி கொடுக்கத் தயாராக பணிந்து நிற்கின்றன. நல்லோரும் இப்படித்தான். அவர்களுக்குச் செல்வம் கிடைத்தால் பணிவாக இருப்பர். பணிவே அவர்களுக்கு அணிகலன்.
வள்ளுவனும் இதை அழகாகச் சொன்னான்:
பயன்மரம் உள்ளூர் பழுத்தற்றார்ச் செல்வம்
நயனுடையான் கட் படின் – குறள் 216
ஊர் நடுவில் ஒரு மரத்தில் பழங்கள் காய்த்தால் எப்படிப் பயன்படுமோ அதுபோல நல்லோரிடம் வந்த செல்வம் எல்லோருக்கும் பயன்படும்; எளிதில் கிடைக்கும்.
புறநானூற்றுப் பாடலில்

கபிலர் பாடிய புறநானூற்றுப் பாடலில் பாரியை இகழ்வது போலப் புகழ்கிறார். அங்கும் மேகம் உவமை வருகிறது:-
பாரி பாரி என்று பல ஏத்தி
ஒருவர் புகழ்வர், செந்நாப்புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே
–புறம் 107, கபிலர்
பொருள்:-
இது என்ன வேடிக்கையாக இருக்கிறது. செந்நாப் புலவர்கள் எல்லோரும் கொடுப்பதில் சிறந்தவன் பாரி, பாரி என்று புகழ்ந்து தள்ளுகிறார்களே. பாரி ஒருவன் மட்டும்தான் உலகத்தைக் காப்பதற்கு உள்ளானோ! மாரியும் (மழையும்) உலகைக் காப்பாற்ற இருக்கிறது! (பாரியை மட்டம் தட்டுவது போலப் புகழ்வது)!
தராசு போல இரு
நீதி வெண்பா இயற்றிய ஒரு தமிழ்ப் புலவர், தராசு போல இரு என்று ஒரு அருமையான உவமை தருகிறார்:
ஆக்கம் பெரியர் சிறியார் இடைப்பட்ட
மீச்செலவு காணின் நனி தாழ்ப — தூக்கின்
மெலியது மென்மேல எழச் செல்லச் செல்ல
வலிதனே தாழுந்துலைக்கு
(துலை= துலா = தராசு)
பொருள்:
தராசுத்தட்டில் வைத்து நிறுத்தால் மெல்லீய பொருளுள்ள தட்டு மேலே போகப்போக பாரமான தட்டு கீழே போகும். அது போல, கல்வி, செல்வம் ஆகிய இரண்டிலும் சிறந்த பெரியோர்கள் செருக்குடையோரைக் கண்டால் தாழ்ந்து போவர்.
அதாவது நிறைகுடம் தழும்பாது; குறைகுடம் கூத்தாடும்.
–SUBHAM—
