எம்.ஜி.ஆர் பாடல்கள் : “நான் ஆணையிட்டால்!” (Post No.5477)

WRITTEN BY S NAGARAJAN

Date: 27 September 2018

 

Time uploaded in London – 6-01 AM (British Summer Time)

 

Post No. 5477

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

எம்ஜிஆர் நூற்றாண்டு. மக்களை உயிராக நேசித்தவரை – மக்களால் உயிராக நேசிக்கப்பட்டவரை மறக்க முடியுமா? நூற்றாண்டு சிறப்புக் கட்டுரை!

எம்.ஜி.ஆர் பாடல்கள் : “நான் ஆணையிட்டால்!

 

ச.நாகராஜன்

1

எம் ஜி ஆர் நூற்றாண்டு. மக்கள் திலகத்தை மறக்க முடியுமா? அவர் பாடல்களைத் தான் பாடாமல், கேட்காமல் இருக்க முடியுமா?

எம் ஜி ஆர் பாடல்கள் என்றாலே ஒரு தனிச் சொற்றொடராக விளங்குகிறது. அவருக்கென எழுதப்பட்ட பாடல்கள் என அர்த்தமாகிறது.

நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்?

அது நடந்து விட்டால் ! ஏழைகள் வேதனைப் பட மாட்டார்.

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்.

எம் ஜி ஆர் என்ற மூன்றெழுத்திலா?

அது முடிந்து விட்டால் என் பேச்சிருக்கும்.

கடமை. அது கடமை.

தூங்காதே தம்பி தூங்காதே

திருடாதே பாப்பா திருடாதே

அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்!

 

இப்படி அற்புதமான பாடல்களை இன்றும் கேட்டு மகிழும்படி அளித்தவர் எம் ஜி ஆர். பல்லவி அவருக்குப் பிடித்திருந்தால் தான் கவிஞர் மேலே போகலாம்!

சில வரிகளைத் தனக்குப் பிடிக்கும் வரை மாற்றச் சொல்வார். ஏனெனில் அவை மக்களைச் சென்று சேர வேண்டுமே! அது எம் ஜி ஆர் பாடலாயிற்றே!

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வாலி, கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் எழுதிய எம்ஜிஆர் வரிகள் அவரை என்றும் வாழ வைத்திருப்பதோடு பாடல்களைப் படைத்த அவர்களையும் வாழ வைத்துள்ளது.

கணீரென டி.எம்.சௌந்தரராஜன் தன் குரலில் பாடிய பாடல்கள் இன்றும் எங்கும் ஒலிக்கின்றன. பானுமதி, சரோஜா தேவி, ஜெயலலிதா என கதாநாயகிகள் தலையை அசைத்து, புன்முறுவல் பூத்து, உடல் அபிநயம் காட்டி, நடித்து மக்களை மகிழ்வித்தது ஒரு புறம் இருக்க பாடல்களின் அர்த்தம் இன்றும் பேசப்படக்கூடிய அளவில் இருப்பது தான் அவற்றின் சிறப்பு.

நாடோடி மன்னன் படத்திற்காக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் தூங்காதே தம்பி தூங்காதே.

தூங்காதே தம்பி  தூங்காதே-நீயும்
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே! (தூங்)

நீ-தாங்கிய உடையும் ஆயுதமும்-பல
சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்,
சக்தியிருந்தால் உன்னைக்கண்டு சிரிக்கும்
சத்திரந்தான் உனக்கு இடம் கொடுக்கும் (தூங்)

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானுங்கெட்டார்; சிலர்
அல்லும் பகலும்  தெருக்கல்லா யிருந்துவிட்டு
அதிர்ஷடமில்லையென்று  அலட்டிக் கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்-உன்போல்
குறட்டை விட்டோரெல்லாம்  கோட்டைவிட்டார்! (தூங்)

போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான்-உயர்
பள்ளியில் தூங்கியவன் கல்வியழந்தான்!
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான்-கொண்ட
கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்-இன்னும்
பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்-பல
பொன்னான வேலையெல்லாம்  தூங்குதப்பா! (தூங்)
[நாடோடி மன்னன்,1958]

 

பல நல்ல கருத்துக்களைத் தரும் இந்தப் பாடலுக்குப் பின்னர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திருடாதே படத்திற்காக எழுதிய எம் ஜி ஆர் பாடல் திருடாதே பாப்பா திருடாதே!

 

திருடாதே! பாப்பா திருடாதே!
வறுமை நிலைக்குப் பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே

சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து-தவறு

சிறிசா இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாமே நடந்திருந்தா-அது

திரும்பவும் வராமே பார்த்துக்கோ (திரு)

திட்டம் போட்டுத் திருடுற கூட்டம்

திருடிக்கொண்டே இருக்குது-அதைச்
சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம்

தடுத்துக் கொண்டே இருக்குது
திருடராய் பார்த்துத் திருந்தாவிட்டால்

திருட்டை ஒழிக்க முடியாது (திரு)

கொடுக்கிற காலம் நெருங்குவதால்-இனி

எடுக்கிற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்

பதுக்கிற வேலையும் இருக்காது

ஒதுக்கிற வேலையும் இருக்காது
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா

கெடுக்கிற நோக்கம் வளராது-மனம்

கீழும் மேலும் புரளாது! (திரு)

[திருடாதே,1961]

கொடுக்கிற காலம் நெருங்குவதால் இனி எடுக்கிற அவசியம் இருக்காது! எம் ஜி ஆர் அரசுப் பொறுப்பை ஏற்கக் கட்டியம் கூறிய பாடலோ இது.

மலம் நிறைந்த பாதாளச் சாக்கடை போல நாற்றம் பிடித்த கும்பலிலிருந்து தப்பி வெளி வந்தவர்கள் தமிழக சரித்திரத்தில் பலர். சிவாஜி கணேசன், கண்ணதாசன், எம்.ஜி.ஆர் என்று இந்த நீண்ட பட்டியலைத் தொகுக்கலாம். கொள்ளையடிக்கும் கும்பலிலிருந்து வெளி வந்த எம்.ஜி.ஆர் மக்களுக்காக எதைக் கொடுக்கலாம் என்று நினைத்தாரே தவிர அவர்களிடமிருந்து எதையெதை எடுக்கலாம் என்று ஒரு போதும் நினைத்ததில்லை; கள்ளப் பணத்தால் சொத்தும் சேர்த்ததில்லை.

 

அடுத்து அவரது உள்ளக்கிடக்கையை நன்கு தெரிவித்த பாடல் கவிஞர் வாலி எழுதியது.

நான் ஆணையிட்டால். எம் ஜி ஆர் ஆணையிட்டால் என்னென்ன நடக்கும்? பார்ப்போம்:

 

நான் ஆணையிட்டால்
அது நடந்து விட்டால்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன்
அவர் உரிமைப் பொருள்களைத் தொட மாட்டேன்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால் பிடிப்பார்
எதிர் காலம் வரும் என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்
பொது நீதியிலே புதுப் பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

இங்கு ஊமைகள் தூங்கவும் உண்மைகள் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன்
ஒரு கடவுள் உண்டு அவன் கொள்கை உண்டு
அதை எப்போதும் காத்திருப்பேன்
முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார்
இந்த மானிடர் திருந்திட பிறந்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

ஆஹாஹா ஆஹாஹா
ஆஹாஹா ஆஹாஹா

பாடல் வரிகளுடன் எம்ஜிஆர் ஒன்றி விட்டார்; அல்லது எம்ஜிஆருடன் பாடல் வரிகள் ஒன்றி விட்டன.

1964இல் வெளியான தெய்வத்தாய் படம் அவரது மூச்சு எங்கிருக்கும் என்பதைச் சுட்டிக் காட்டியது. கவிஞர் வாலி எழுதிய பாடல் இது:

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்..

அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்..

உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்..

அந்த ஊருக்குள் எனக்கோரு பேர் இருக்கும்..

கடமை அது கடமை..
கடமை அது கடமை..

அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்..
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்..

உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்..

அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்..

பதவி வரும்போது பணிவு வர வேண்டும்..

துணிவும் வரவேண்டும் தோழா..

பாதை தவறாமல் பண்பு குறையாமல்..
பழகி வரவேண்டும் தோழா..

பதவி வரும்போது பணிவு வர வேண்டும்..
துணிவும் வரவேண்டும் தோழா..

பாதை தவறாமல் பண்பு குறையாமல்.
பழகி வரவேண்டும் தோழா..

அன்பே உன் அன்னை..
அறிவே உன் தந்தை..
உலகே உன் கோவில்..
ஒன்றே உன் தேவன்..

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்..
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்..

உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்..
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்..

கடமை அது கடமை..
கடமை அது கடமை..

வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்..
கோழை குணம் மாற்றுத் தோழா..

நாளை உயிர் போகும் இன்றுப் போனாலும்..
கொள்கை நிறைவேற்றுத் தோழா..

வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்..
கோழை குணம் மாற்றுத் தோழா..
நாளை உயிர் போகும் இன்றுப் போனாலும்..
கொள்கை நிறைவேற்றுத் தோழா..

அன்பே உன் அன்னை..
அறிவே உன் தந்தை..
உலகே உன் கோவில்..
ஒன்றே உன் வேதம்..

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்..
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்..

உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்..
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்..

கடமை அது கடமை..
கடமை அது கடமை..

 

இப்படி, தான் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நடக்கும் என்பதைப் பட்டியலிட்டுப் பாடிய எம்ஜிஆர் உலகம் முழுவதையும் அணைத்த பாடலை1965இல் வெளியான படமான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்காக கண்ணதாசன் அளித்தார்..

அற்புதமான அந்தப் பாடல் – அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்.

 

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே — (ஒரே வானிலே)

தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லிலாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியிலாமல் வாழவில்லையே
போகும் போது வேறு பாதை போகவில்லையே — (ஒரே வானிலே)

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை — (ஒரே வானிலே)

 

எம்ஜிஆரை மேடைக்கு மேடை கண்ணதாசன் கடுமையாக விமரிசித்தவர். ஒரு நாள் முதல் அமைச்சராக இருந்த எம்ஜிஆரிடமிருந்து அவரை உடனடியாக வந்து பார்க்குமாறு அழைப்பு வந்தது. கண்ணதாசன் அவரைச் சந்தித்த போது அரசவைக் கவிஞராக அவர் நியமிக்கப்பட்டிருப்பதைக் கூறிய எம் ஜி ஆர், ‘சரி’ என்று ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். கண்ணதாசன் நெகிழ்ந்து உருகிப் போனார்.

 

பொன் மனம் கொண்ட எம்ஜிஆரின் உடலும் தங்க மயம் தானே!

 

அதில் லயித்த கண்ணதாசன் அவரை கதாநாய்கி வர்ணிப்பது போலத் தன் உள்ளத்தில் பட்டதை அப்படியே சொல்லி விட்டார் 15-8-1963 அன்று வெளியான நீதிக்குப் பின் பாசம் படத்தில்:

“தேக்கு மரம் உடலைத் தந்தது

சின்ன யானை நடையைத் தந்தது

பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது

பொன்னல்லவோ நிறத்தை தந்தது” (மானல்லவோ கண்கள் தந்தது பாடல்)

தங்க நிற உடலுக்கு மட்டுமல்ல இந்த உவமை; தங்கமான மனதிற்கும் சேர்த்து உவமையாக வந்தது பொன்!

எம்.ஜி.ஆர் என்ற. மூன்றெழுத்து தமிழக மக்களில் உள்ளங்களில் என்றென்றும் நிரந்தரமாக இருக்கும்.

 

****