தலையில் இருந்தால் முடி, கீழே விழுந்தால் மயிர்- வள்ளுவர் குறள் (Post No.3566)

Written by London swaminathan

 

Date: 22 January 2017

 

Time uploaded in London:- 15-42

 

Post No.3566

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

contact: swami_48@yahoo.com

 

தமிழ்ப் புலவர்கள், நமக்குச் சொல்ல வேண்டிய விஷயங்களை எவ்வளவு வலுவாக– வலியுறுத்திச் சொல்ல வேண்டுமோ– அவ்வளவுக்குச் சொல்லுவர் அதற்கேற்ற உவமைகளையும் எடுத்தாள்வர்.

 

வள்ளுவப் பெருமான் “மயிர்” என்ற சொல்லை இரண்டு குறள்களில் பயன்படுத்துகிறார். மானம் என்ற , அ,,,,,,காரத்தில் அவைகளை வைத்திருப்பது பொருத்தமாக உள்ளது. நாம் யாரையேனும் அல்லது எ தையேனும் மட்டம் தட்ட வேண்டுமானால் “என் மயிர் போச்சு” என்று இழித்துரைக்கிறோம்; பழித்துப் பேசுகிறோம். ஆனால் அதே மயிர் தலையில் இருக்கும் வரை அதைச் சீவி முடித்து சிங்காரித்துப் பாராட்டுகிறோம். மயிருள்ள சீமாட்டி எஸ் கொண்டையும் போடுவாள் ஒய் கொண்டையும் போடுவாள் என்பது பழமொழி. அது மட்டுமல்ல. கணவன் வெளியூர் சென்றுவிட்டால் மனைவி சிகை அலங்காரம் செய்ய மாட்டாள் என்பது சம்ஸ்கிருத , தமிழ் இலக்கியங்களில் உள்ளது.  இமயம் முதல் குமரி வரை ஒரே பண்பாடு என்பதை  இது காட்டுகிறது. ஆரிய-திராவிட இனவெறிக் கொள்கை உடையோரின் மூஞ்சியில் இது  கரி பூசுகிறது.

 

 

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்

நிலயின் இழிந்தக் கடை (குறள் 964)

 

மக்கள் நெறி தவறி, உயர்ந்த நிலையிலிருந்து கீழே விழுந்தால், தலையிலிருந்து விழுந்த மயிர் போல ஆவர்.

 

மயிர் நீப்பின் வாழாக் கவரி மா அன்னார்

உயிர் நீப்பர் மானம் வரின்  (குறள் 969)

 

தன் உடம்பிலிருந்து ஒரு மயிர் நீங்கினாலும் வாழ விரும்பாத கவரிமானைப் போன்றவர்கள், மானம் போனால் உடனே உயிர் நீப்பர்.

 

விவேக சிந்தாமணி என்னும் நூலிலும் இதே கருத்தைக் கூறும் இரண்டு பாடல்கள் உள்ளன:-

 

மானம் உள்ளோர்கள் தன்னோர்

மயிர் அறின் உயிர் வாழாத

கானுறு கவரிமான் போல

கனம்பெறு புகழே பூண்பார்

மானம் ஒன்று இல்லார் தாமும்

மழுங்கலாய்ச் சவங்களாக

ஈனமாம் கழுதைக்கு ஒப்பாய்

இருப்பர் என்று உரைக்கலாமே.

 

இந்தப் பாடல் குறளில் வரும் அதே கவரிமான் கதையைச் சொல்லுகிறது. இன்னொரு பாடல், அது அது இருக்க வேண்டிய இடத்தில்தான் மதிப்பு என்கிறது.

 

சங்கு வெண் தாமரைக்குத்

தந்தை தாய் இரவி தண்ணீர்;

அங்கு அதைக் கொய்துவிட்டால்

அழுகச் செய்து அந்நீர் கொல்லும்;

துங்க வெண் கரையில் போட்டால்

சூரியன் காய்ந்து கொல்வான்;

தங்கள் நிலைமை கெட்டால்

இப்படித் தயங்குவாரே

 

பொருள்:-

சங்கு போன்ற வெள்ளைத் தாமரைக்கு, சூரியனும் தண்ணீரும் தாய், தந்தை ஆவர். ஆனால் அதே தாமரையைக் கொய்து தண்ணீரில் போட்டால் அதுவே அழுகச் செய்து விடும். கரையில் போட்டாலோ சூரியன் காயவைத்துக் கொல்வான். அது போலவே தங்களுடைய நிலை கெட்டு வேறிடத்தில் இருந்தால் கஷ்டப்படுவர்.

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா

 

கவிஞர் கண்ணதாசனும் இக்கருத்தை வலியுறுத்தும் பாடலை சூரியகாந்தி படத்தில் பாடி இருக்கிறார்.

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

 

–subham–