பாட்டிற்கோ பாரதியே தான்! (Post No 3145)

statue-bharati

Written by S NAGARAJAN

Date: 11 September 2016

Time uploaded in London: 21-24

Post No.3145

Pictures are taken from various sources; thanks.

 

செப்டம்பர் 11 : பாரதி நாள்!

.நாகராஜன்

 

bharati-malar

வெந்துயரில் வீழ்ந்திருந்த பாரதத்தை வாழவைக்கத்

தந்துயரம் பாராத சான்றோருள்இந்தியமா

நாட்டிற்கோ காந்தியெனில் நாமெழவே கூவிட்ட

பாட்டிற்கோ பாரதியே தான்

 

செய்யுநலம் சீரழிந்து செந்தமிழும் வாடுகையில்

உய்யுநலம் காட்டியவன் ஓர் கவிஞன்நெய்யுமொரு

கூட்டிற்கோ தேன்கூடு கொட்டுதமிழ்ச் சந்தமொழி

பாட்டிற்கோ பாரதியே தான்

 

வீட்டிற்கோ குலமகளிர் வீதிக்கோ நல்லோர்பள்ளி

காட்டிற்கோ உயிர்தருமொரு சஞ்ஜீவனிஇந்தியமா

நாட்டிற்கோ வேதரிஷிகள் கவிதையெனில் தமிழ்ப்

பாட்டிற்கோ பாரதியே தான்

வேறு

இந்தியர் தம் நெஞ்சினிலே தேசப்பற்றை ஊட்டினான்

வஞ்சக வெள்ளையரை நாட்டைவிட்டு ஓட்டினான்

தமிழர்க்குத் தமிழ் போற்றும் வழி காட்டினான்

புகழோங்கு பாரதத்தை நிலை நாட்டினான்

புதியதொரு பாதையைப் புவியினிலே காட்டினான்

புகழவோர் வார்த்தையிலை புகழுக்கே புகழ் ஊட்டினான்

புண்ணியன் சுப்பிரமணி பாரதியின் பெருமையினை

எண்ணியெண்ணி அவன்வழி நடப்போம் உயர்வோம்

********

 

 

 

பாரதியார் பற்றி அமுதன் வானொலி உரை

bharati patal, picture,fb

Compiled by ச.நாகராஜன்

Date : 7 September  2015

Post No. 2132

Time uploaded in London: – காலை 8-50

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! – 6

ச.நாகராஜன்

பாரதியார் பிறந்த நாள்

அரவிந்த ஆசிரமம் அமுதன்

இது ஒரு புத்தகம் அல்ல. வானொலி உரை. அரவிந்த ஆசிரமத்தைச் சேர்ந்த அமுதன் அவர்களை புதுவை வானொலி நிலையத்தார் அழைத்து மஹாகவி பாரதியார் பற்றி உரை ஒன்றை நிகழ்த்துமாறு வேண்டினார்கள்.

பாரதியார் பிறந்த தினத்தன்று 11-12-1968ஆம் தேதி இது ஒலிபரப்பப்பட்டது.

அமுதன் அவர்கள் சிறுவயதிலேயே பாரதியாருக்கு அறிமுகமானவர். பின்னால் அரவிந்த ஆசிரமத்தில் மஹரிஷி அரவிந்தருடன் நெருங்கிப் பழகும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது. அன்னை அவர்களின் அந்தரங்கக் காரியதரிசியாகவும் அவர் ஆனார்.

வைகறை என்ற இதழ் அரவிந்த ஆசிரமம் வெளியிடும் ஒரு அழகிய தமிழ் இதழ். பிப்ரவரி, ஏப்ரல்,ஆகஸ்டு, நவம்பர் மாதங்களில் வெளி வர ஆரம்பித்த இந்த இதழின் ஆசிரியப் பொறுப்பில் இருந்த அவர் அழகுற அருமையான தங்கம் நிகர் கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டு வந்தார். இந்த வைகறையில் 1970ஆண்டு மலர் 1இல் இவரது வானொலி உரை முழு வடிவில் அப்படியே பிரசுரமானது.

பாரதி அன்பர்கள் அரவிந்தரின் தொடர்பினால் மஹாகவி எவ்வளவு மகிழ்ச்சியுற்றார், அரும் படைப்புகளைப் படைத்தார் என்பதை அறிவர். அந்த நெருங்கிய தொடர்பைப் பற்றியும் மஹாகவி பற்றியும் நன்கு விளக்கிக் கட்டுரைகளைப் படைத்தவர் அமுதன் அவர்கள்.

அமுதன் அவர்களின் வானொலி உரை

அவரது உரையின் பெரும் பகுதி, அரவிந்த ஆசிரமத்திற்கும் வைகறைக்கு நாம் செலுத்தும் உரிய நன்றியுடன், அவரது சொற்களிலேயே இதோ:-

“பாரதியார் புதுவையில் இருக்கும்போது அவருடன் நெருங்கிப் பழகினவர்களில் நானும் ஒருவன்; இந்த ஒரு காரணத்தினாலேயே நான் அவரை நன்கு தெரிந்து கொண்டு விட்டதாகவும் நான் ஏதோ ஏனையோர் இதுவரை சொல்லியிராத விவரங்களை சொல்லப் போவதாகவும் நினைக்கக் கூடாது. என்னை விட அவரை அறிந்து தெரிந்தவர்கள் இருக்கத்தான் வேண்டும். பாரதியாரைப் பற்றி எண்ணிறந்த கட்டுரைகள் வெளி வந்துள்ளன – பாரதியாரின் நாட்டுப்பற்று, பாரதியாரின் இலக்கியம், முக்கியமாக – அவர் கவிதை, பாரதியாரின் புதுவை வாழ்க்கை முதலிய.

சுருங்கச் சொல்லின் இவை எல்லாவற்றையும் விட அவர் நம் தமிழ்வானின் கீழ்த்திசையில் முளைத்த வெள்ளி.

நான் பாரதியாரை முதன் முதலில் பார்த்தது 1909. அவரை தரிசித்த ஒரு வாரத்திற்குள்ளேயே அவர் சாதாரண மனிதன் அல்ல என்பது பசுமரத்தில் அடித்த ஆணி போல் என் உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்து விட்டது. அன்று நானோ சிறுபிள்ளை.

பாரதியாரின் அசாதாரணத் தன்மை அவர் நடையிலும் உடையிலும், பாவனையிலும் பளிச்சென்று பிரகாசிக்கும்; அதை நாம் வேண்டாவிடினும் அதை கவனித்தே ஆக வேண்டியிருக்கும்.

பாரதியார் ஆதர்ச புருஷன் – கொண்ட ஆதர்சத்தில் முழுக்க ஈடுபட்டவர்; அவரிடம் எதிலும் அரைகுறை என்ற பேச்சே கிடையாது. ஒரு கொள்கையை அவர் உள்ளம் கண்டதும், அதைக் கொண்டதும், உடனே அந்த க்ஷணமே அதைக் கைக்கு மெய்யாக ஆக்கி விடப் பார்ப்பார், ஆக்கியும் விடுவார். கொள்கைக்கும் செய்கைக்கும் மத்தியில், அவர் வரை, இடைவெளி கிடையாது.

இன்று போல் அல்ல அன்று. இன்று நாம் ஒளியை விட்டு விலகி, மண்ணோடு மண்ணாய் விட்டோம். இன்று, “வருமானம் என்ன, செலவு என்ன, சாப்பாட்டிற்கு வழி என்ன, எவ்வளவு சேகரம் செய்தோம்?” என்பன போன்ற எண்ணங்களும் உணர்ச்சிகளும் தனி மனிதனையும் மக்கள் குழாத்தையும் ஆட்டிக் கொண்டிருக்கின்றன. அன்றோ மக்கள் உள்ளத்தில் தீ சுடர் விட்டெரியக் கண்டோம். அச்சுடரை மூர்த்திகரிக்கும் ஆதர்ச புருஷர்கள் மக்களிடை சஞ்சாரம் செய்தார்கள். அத்தகைய மூர்த்திகளில் ஒருவர் பாரதியார். அவர் மண்ணுலகில் நடமாடிய போது நாம் விண்ணுலகில் வாழ்வதாக நினைத்தோம். அவர் ‘விடுதலை’ என்னும் மந்திரச் சொல்லைக் கர்ஜித்த போது நாம் நமது தளைகள் அறுந்து இறக்கை கட்டி விண்ணில் பறப்பதாக எண்ணினோம். மண்ணும் ஒளிர்ந்தது.

பாரதியார் வாழ்ந்த காலம் மண்ணில் விண்ணைக் கண்ட காலம்.பாரதியார் தன் பாடல்களைப் பாடிய மாதிரி வேறெவரும் பாடி நான் கேட்டதில்லை – அந்த ஆவேசம், அந்த சக்தி, அந்த உத்ஸாஹம், அந்த தாண்டவம் நான் மீண்டும் காணவில்லை.

பாரதியார் வாக்கில், அவர் சொல்லில் ஓர் அமாநுஷ்யம், தைவதம் மிளிர்ந்தது – அது தெய்வ சம்பத்தல்லவா?

எவரிடமும் அவருக்கு அவநம்பிக்கையே கிடையாது – பச்சைக் குழந்தை உள்ளம். தன் பொருள், பிறர் பொருள் என்பதும் அவரிடம் கிடையாது – ஒருவித சரளம், அவர் பிறரிடம் சல்லாபம் செய்யும்போது.

பட்டினத்துப்பிள்ளை: “பொய்யாய்ப் பழங்கதைக் கனவாய் மெல்லப் போனதுவே”

பாரதி: “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது சொற்புதிது, சோதி மிக்க நவ கவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை”

மேனி சிலிர்க்க வைக்கும் மெய்யுரை

எப்படிப்பட்ட உரை! மண்ணகத்தில் விண்ணகத்தைக் கண்ட காலத்தில் மஹாகவியுடன் நெருங்கிப் பழகும் பேறு பெற்ற பெரியவர் அல்லவா அமுதன்!

அவர் உரை மேனி சிலிர்க்க வைக்கிறது. பாரதி அன்பர்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டிய அற்புத உரை இது!

*************

பாரதி நினைவுகள்: மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! -2

bharathi_ninaivukal_copy

Article No. 2095

Written by ச. நாகராஜன்
Date : 24 August  2015
Time uploaded in London :– 10-10

ச.நாகராஜன்

  1. பாரதி நினைவுகள்

பாரதி பற்றிய இந்த நூலை எழுதியவர் யதுகிரி அம்மாள். இதன் முதற் பதிப்பு 1954 செப்டம்பர் மாதம் அமுத நிலையம் பிரைவேட் லிமிடட்-ஆல் வெளியிடப்பட்டது. நூலின் அன்றைய விலை 30 காசுகள் மட்டுமே! 87 பக்கங்கள் அடங்கிய இந்த நூலை “பாரதியின் தோழராக விளங்கிய என் பிதா ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீநிவாஸாச்சாரியாரின் திருவடித் தாமரைகளில் இச் சிறு நூலை அன்புக் காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன்” என்று சமர்ப்பணம் செய்துள்ளார் யதுகிரி அம்மாள்.

அறிமுகம் என்ற உரையில் ரா.அ.பத்மநாபன் கூறுவது:-

“வாசகர்கள் முன் உள்ள இந்த “பாரதி நினைவுகள்” நூலை எழுதிய ஶ்ரீமதி யதுகிரி அம்மாள் மண்டயம் ஶ்ரீ ஶ்ரீநிவாஸாச்சாரியாரின் மூத்த புதல்வி. புதுவையில் பாரதியார் இருந்த சமயம் சிறுமியாக இருந்தவர். பாரதியாருடன் பல்லாண்டுகள் நெருங்கிப் பழகி, அவரது அன்புக்குப் பாத்திரமாகும் பேறு பெற்றிருந்தவர். தமது சிறு வயதில் பாரதியாரைத் தாம் அறிந்த வகையில் கவிஞரை நமக்கு விவரிக்கிறார் ஶ்ரீமதி யதுகிரி அம்மாள்”         (ரா.அ.பத்மநாபன், சென்னை, 3—9-54இல் எழுதியது)

“பாரதியாரைப் பற்றி எனக்குத் தெரிந்ததைப் பிறரும் அறியச் செய்யலாம் என்று ஏதோ எழுத முன் வந்தேன். இக்குறிப்புகள் 1938-39-ல் எழுதப்பட்டவை. இன்ரு அச்சேறுகின்றன” என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார் யதுகிரி (28-7-1954இல் எழுதப்பட்டது முன்னுரை)

நூலில் 26 அத்தியாயங்கள் உள்ளன.

பாரதி நினைவுகள் - யதுகிரி

உலையில் போடுவதற்காக வைத்திருந்த அரிசியில் கால் பங்கு கூட இல்லை என்று செல்லம்மா தவிக்கையில், பாரதியார், “வா, செல்லம்மா, இந்தக் குருவிகளைப் பார்! எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றன” என்று கூறி அரிசியைக் குருவிகளுக்குப் போட்ட சம்பவம் விட்டு விடுதலையாகி என்ற அத்தியாயத்தில் விவரமாகத் தரப்பட்டுள்ளது.

பாம்பாட்டி பாடிய பாட்டில் ஒரு பாடலை எழுதித் தருவதாக பாரதியார் யதுகிரியிடம் கூறி விட்டு மறுநாள் “பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்” பாடலை எழுதிக் கொண்டு வந்து பாடிக் காட்டிய சம்பவம் பாரத தேசமென்று பெயர் சொல்லுவார் என்ற அத்தியாயத்தில் தரப்பட்டுள்ளது.

போட்டிக்கு எழுதப்பட்ட செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற பாடல் எழுந்த வரலாற்றையும் அதை வ.வெ.ஸு. ஐயர் வெகுவாகப் பாராட்டியதையும் செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற அத்தியாயம் சுவையாக விவரிக்கிறது.

காணி நிலம் வேண்டும் என்ற பாடல் எப்படி எழுந்தது? ஜப்பானில் புதிய சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதன் படி அந்த ராஜ்யத்தை ஒரே சமனாகப் பிரித்து எல்லா ஜப்பானியருக்கும் ஆளுக்கு இவ்வளவு என்று பிரித்துக் கொடுத்து விடுவது, இனி பிச்சைக்காரர்களும், சோம்பேறிகளும் தங்கள் தேசத்தில் இருக்கக் கூடாது என்று செய்தார்கள். இதைப் பார்த்த புதுவை சுதேசியார் நம் நாட்டில் ஒரு குடும்பம் பிழைக்க எவ்வளவு நிலம் வேண்டும் என்று ஆராய்ந்தனர்.

அதற்கு விடையே காணி நிலம் வேண்டும் என்ற பாரதியாரின் பாட்டு,

ஏராளமான சம்பவங்கள். உள்ளத்தைத் தொடுபவை சில. உருக்குபவை சில. உணர்ச்சி ஊட்டுபவை பல.

பாரதி ஆர்வலர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம் இது.

****