பாரதி போற்றி ஆயிரம் – 41 (Post No.4691)

Date: 2 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-17 am

 

Compiled  by S NAGARAJAN

 

Post No. 4691

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 41

  பாடல்கள் 241 முதல் 249

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கவிஞர் k. ராமமூர்த்தி பாடல்கள்

மகாகவி பாரதி வாழ்க மாதோ!

சீர்மிகுந்த செந்தமிழின் சீராளர்;

     செகம்புகழும் கவிதந்த பேராளர்;

கார்த்திகைத் தீபத்திங்கள் திருநாளில்,

     கதிரெனவே அவதரித்தார் பாரதியார்.

 

நேர்த்தியுடன் பாநெய்த தறியாளர்;

      நிலையறிந்து நூலிழைத்த குறியாளர்;

பாரதிசெவ் வாய்மலர, உருவான

     பைந்தமிழ்ச் சொல்தங்கக் கருவூலம்.

 

கல்வியினால் காழ்ப்புதன் னிடமில்லாமல்

      கவிக்குலத்து முன்னவரைப் படம்பிடித்தார்;

புல்முளைத்தே இருளடைந்த இந்நாட்டை,

       பொலிவாக்கும் திருப்பணிக்கே வந்துதித்தார்.

 

முந்தையரின் புகழலையில் பொருந்தியதால்

       முகிழ்ந்தகடற் செல்விஆழம் இருந்தவாறே,

சந்தமினிமை, முத்துப்பவளம் பாலித்தாள்;

       தங்கக்கவி, தொடுத்ததனை மாலையிட்டார்.

 

பாவானம் பார்த்தறியா விடிவெள்ளி;

       பாரதநாட்டு விடுதலையின் தீக்கொள்ளி;

மாகாளியம் மகாசக்தி, அருட்சக்தி,

       மாகவியாய் வந்ததமிழ்ப் பெரும்சக்தி.

 

வளர்கின்ற பொற்காலம் தமிழினுக்கே

       வாராதோஎன விசனிக்கின்ற பொழுதினிலே

களமிறங்கித் துறைதோறும் பாடிவைத்தார்;

       காசினியில் மனிதநேயம் நாடிநின்றார்.

 

புலர்காலைப் பொழுதுவரும் ஞாயிறுபோல்,

       புரட்சிக்கே பாட்டாயுதப் பாயிரத்தால்

தளர்வின்றிச் சமூகவானில் சிறகடித்தே,

       சமத்துவத்தைத் தாரணிகேட்க முரசடித்தார்.

 

பவித்திரம் பாரதிபாட்டு நெறிபாடும்

       பார்மீது ரவியாலே ஒளிகூடும்;

கவியரசர் பாரதிக்கு ஜதிபல்லக்கு

       காசினியில் பாரதியே கதிநமக்கு

 

செந்தமிழ்ப் பாலதினில் மொய்ம்புறவே,

       தேசபக்தி, தெய்வபக்தி நெய்யெடுத்தார்;

வந்தனைகள் புரிந்துநலம் சூழ்ந்திடவே,

        வையமெலாம் பாரதிபுகழ் வாழ்கமாதோ!

     

    

கவிஞர்  K. ராமமூர்த்தி : பாரதி காவலர் டாக்டர் K. ராமமூர்த்தி ‘மகாகவி பாரதிக்கு ஜதி பல்லக்கு’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். பாரதி பற்றிய பல கவிதைகளையும் புனைந்துள்ள பாரதி ஆர்வலர். தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் நடந்த 10வது உலகக் கவிஞர் மாநாட்டில் பங்கேற்று பாரதி பற்றி உரையாற்றியவர். பாரதத்தில் பல்வேறு இடங்களில் உரையாற்றியவர். தொடர்ந்து பாரதியைப் பரப்பும் பணியை மேற்கொண்டுள்ளார்.

தொகுப்பாளர் குறிப்பு: ‘மகாகவி பாரதிக்கு ஜதி பல்லக்கு’ என்ற நூலில் வெளியாகியுள்ள கவிதை. நூலை வெளியிட்டோர் : கங்கை புத்தக நிலையம் 23, தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை – 600017 முதல் பதிப்பு டிசம்பர் 2010

நன்றி: பாரதி காவலர் டாக்டர் K. ராமமூர்த்தி; நன்றி: திரு ராமநாதன், கங்கை புத்தக நிலையம்

 

***