‘பேடண்ட் கிங்’ யோஷிரோ நகாமட்சு! (Post No.3999)

Written by S NAGARAJAN

 

Date: 14 June 2017

 

Time uploaded in London:-  6-13  am

 

 

Post No.3999

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

பாக்யா 9-6-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

அதிசய கண்டுபிடிப்பாளர் ; ‘பேடண்ட் கிங் யோஷிரோ நகாமட்சு!

ச.நாகராஜன்

 

      “கின்னஸ் புக் ஆஃப் வோர்ல்ட் ரிகார்டில் அதிகமான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவர் என்று பதிவு செய்யப்பட்ட யோஷிரோ நகாமட்சு தாம்ஸ் ஆல்வா எடிஸனை விட மூன்று மடங்கு அதிகமான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவராகத் திகழ்கிறார். – அறிவியல் தகவல்

     இன்றைய உலகில் மிக அதிகமான கண்டுபிடிப்புகளுக்கான பேடண்டுகளை எடுத்து பேடண்ட் கிங் என்று பெயர் பெற்றிருப்பவர் யோஷிரோ நகாமட்சு (Yoshiko Nakamatsu) என்னும் ஜப்பானியர் தான்! 1928ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தேதி பிறந்து இப்போது 89 வயதாகியுள்ள இவர் தான் ஃப்ளாப்பி டிஸ்கைக் கண்டுபிடித்தவர். தாமஸ் ஆல்வா எடிஸன் ஏராளமான கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்தது போல இவரும் லீஃப் ஸ்பிரிங்குகளுடன் கூடிய குதிக்கும் ஷூக்கள், காலை வெதுவெதுப்பாக்கி மூளையைக் குளிர வைத்து அதன் திறனை அதிகமாக்கும் நாற்காலி, செக்ஸ் திறனை அதிகமாக்கும் சிடி(CD), மூளைத் திறனைக் கூட்டும் சிகரட் போன்ற சாதனம், கண்ணாடி அணிந்திருப்பது போலவே தோன்றாமல் இருக்கும் படி கண் போன்ற அமைப்பில் உள்ள கண்ணாடி உள்ளிட்ட சுமார் 4000 கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்.

    6000 பேடண்டுகள் எடுப்பதும் 144 ஆண்டுகள் வாழ்வதுமே தன் லட்சியம் என்கிறார். பிரபலமான டோக்கியோ பல்கலைக்கழகத்தில் படித்து பொறியியல் பட்டம் பெற்றவர் இவர்.

   ‘தி இன்வென்ஷன்ஸ் ஆஃப் டாக்டர் நகாமட்ஸ் என்று ஒரு நகைச்சுவையுடன் கூடிய டாகுமெண்டரி படம்  இவரைப் பற்றி எடுக்கப்பட்டிருக்கிறது!

    2013ஆம் ஆண்டு இவருக்குப் கான்ஸர் நோய் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து சிகிச்சையை மேற்கொண்டு வந்த இவரிடம் டாக்டர்கள் இன்னும் 15 நாள் தான் வாழ முடியும் என்றும் டிசம்பர் 31, 2015இல் இறுதி வந்து சேரும் என்று கூறினர். ஆனால் அதைப் பொய்யாக்கி தனது சிகிச்சையிலும் தானே புதுவழிகளை மேற்கொண்டு இவர் இன்னும் வாழ்ந்து வருகிறார்.ஆலிவ் ஆயிலும் ஒய்னும் கலந்த கான்ஸரை எதிர்க்கும் தன்மை கொண்ட ஒரு கலவையைக் கண்டு பிடித்து தனது கான்ஸரைக் குணமாக்க அவர் முயன்று வருவது லேடஸ்ட் செய்தி!

   ஜப்பானிய டாக்ஷோக்களில் பிரபலமாகிய இவர் தனது கண்டுபிடிப்புகளை நகைச்சுவை உணர்வுடன் விவரிப்பார்.

   தான் எப்ப்டி இவ்வளவு கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடிக்க முடிந்தது என்பதற்கு இவர் கூறும் காரணம் சற்று விசித்திரமானதுநீரில் மூழ்கி இருக்கும் போது மூச்சுத் திணறி ஆக்ஸிஜன் இல்லாமல் போகும் நிலையில் மூளையில் இவருக்கு ஐடியாக்கள் தோன்றுமாம். மூளை ஆக்ஸிஜன் இல்லாமல் அறவே செயல் இழந்து இறக்கும் நிலைக்கு வருவதற்கு அரை வினாடி முன்னால் அவருக்கு படைப்பாற்றல் திறன் கூடுமாம்.

   அத்துடன் அவரே வடிவமைத்துள்ள ஒரு அமைதி அறை என்ற காம் ரூமும் (Calm Room) அவருக்கு உதவுகிறதாம். இந்த பாத்ரூம் ஒரு ஆணி கூட அடிக்காமல் கட்டப்பட்டுள்ளது. அறை முழுவதும் 24 காரட் தங்கத்தால் இழைக்கப்பட்டு வேயப்பட்டிருக்கிறது. இது ரேடியோ மற்றும் டெலிவிஷன் அலைகள் பாத்ரூமில் புகுவதைத் தடுத்து விடுமாம்.

  வீட்டில் ஒரு எலிவேடரை இவர் அமைத்திருக்கிறார். அது உயரத் தூக்கிச் செல்லும் லிப்ட் என்பதை இவர் மறுத்து, “அது செங்குத்தாக மேலே செல்லும் அறை; அதில் தான்  எனது சிந்தனை சிறப்பாக செயல்படுகிறது என்கிறார்.

 

   சிறந்த கண்டுபிடிப்பாளரான நகாமட்சுக்கு அரசியல் ஆர்வமும் ஆசையும் நிறைய உண்டு. கண்டுபிடிப்பின் ஒரு அங்கம் தான் அரசிய்ல் என்பது இவரது கருத்து.

     டோக்கியோவின் கவர்னருக்கான தேர்தலில் பலமுறை போட்டியிட்டிருக்கிறார், வெற்றி தான் கிடைக்கவில்லை. ஹாப்பினெஸ் ரியலைஸேஷன் பார்ட்டி என்ற சந்தோஷக் கட்சியின் சார்பில் ஜப்பானின் மேல் சபைக்காக இவர் போட்டியிட்டிருக்கிறார். ஆனால் அதிலும் வெற்றி பெறவில்லை.

      2005ஆம் ஆண்டு சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் கண்டுபிடிப்புகளுக்கு அளிக்கப்படும் இக்நோபல் பரிசு இவருக்கு அளிக்கப்பட்டது. எதற்காக இந்தப் பரிசு என்றால் சுமார் 34 ஆண்டுகள் தான் சாப்பிடுவதற்கு முன் தன் உணவை விடாமல் போட்டோ எடுத்ததற்காக! ஊட்டச்சத்து பற்றி அறிவதற்காக அவரால் எடுக்கப்பட்ட போட்டோக்களே இவை! இக்நோபல் பரிசை மகிழ்வுடன் ஏற்ற இவர் அந்த விழாவில் தனது மருத்துவ நிலை பற்றி ஒரு பாடலையும் பாடினார்!

  நியூயார்க் நகரில் 2016ஆம் ஆண்டு வாழ்நாள் தீர்க்கதரிசன விருது ஒன்றும் இவருக்கு அவரது 88வது பிறந்த நாளையொட்டி வழங்கப்பட்டது

இவரது கண்டுபிடிப்புகள் பிரபலமாகி அவற்றை உலகெங்கிலுமுள்ள மக்கள் இன்றும் வாங்கி வருகின்றனர்லவ் ஜெட் என்ற இவரது படைப்புக்கு சீனா உள்ளிட்ட நாடுகளில் பெரும் வரவேற்பு உள்ளது. அந்தரங்க ஜனன உறுப்பில் பொருத்திக் கொள்ள வேண்டிய அதிசய படைப்பு இது. ‘ப்யான் ப்யான் பூட் என்ற இவரது இன்னொரு படைப்பையும் வெகுவாக உலகெங்கும் உள்ள விற்பனை நிறுவனங்கள் வாங்கி விற்கின்றன.

  இவரது படைப்புகள் அனைத்தும் இவரது நூலகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

   ஜப்பானிய தொலைக்காட்சித் தொடர்களில் பிரபலமாகி இளைய தலைமுறையினருக்கு இவர் ஹீரோ என்றால் இன்னும் பல ஜப்பானியருக்கோ இவர் கடவுளே தான்! புதுக் கண்டுபிடிப்புகளுக்காக 41 முறை கிராண்ட்பிரிக்ஸ் விருதை   வென்றிருக்கும் இந்த புது படைப்புக் கடவுளின் புராணம் பெரியது, மகத்தானதும் கூட!.

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல்கலாம் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு படிப்பாலும் உழைப்பாலும் முன்னுக்கு வந்தவர். தனது இளமை நாட்களில் தன் குடும்பத்தின் வருமானத்திற்காக செய்தித்தாள்களை தினமும் விநியோகிப்பது அவரது வழக்கம்.

 

அவர் எதையும் வெளிப்படையாகப் பேசும் குணமும் கொண்ட்வர். 1979இல் நடந்த சம்பவம் இது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் அவர் திட்ட இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது ஒரு சாடலைட்டை விண்வெளியில் அனுப்புவதற்கான தேதியும் நேரமும் குறிக்கப்பட்டது. ஆனால் சாடலைட் ஏவுவதற்கு சில நிமிடங்கள் முன்பாக  கம்ப்யூட்டர் ஏவுகணையைச் செலுத்துவதில் உள்ள ஒரு தவறைக் காட்டியது. ஆனால் அப்துல்கலாமோ அந்த எச்சரிக்கையை ஒதுக்கி விட்டு அதை விண்ணில் திட்டமிட்டபடி ஏவி விட்டார். இதைப்பற்றி நகைச்சுவையுடன் பின்னால் அவரே கூறியது: “மீடியாக்களுக்கு நான் மிகவும் பயந்தேன். அது விண்ணில் செல்வதற்கு பதிலாக வங்காள் விரிகுடாவில் விழுந்தது”

 

 

ஆனாலும் இஸ்ரோவின் தலைவரான சதீஷ் தவான் பத்திரிகையாளர் கூட்டத்தில், “இன்னும் ஒரு ஆண்டில் விண்ணில் சாடலைட்டைப் பறக்க் விட்டு வெற்றி பெறுவோம்” என்றார். அதன்படியே பின்னால் வெற்றி மேல் வெற்றி வந்து குவிந்தது.