
Compiled by S Nagarajan
Article No. 1687; Dated– 3 March 2015.
தமிழ் திரைப்படங்களில் ராமர் – 7
by ச.நாகராஜன்
ஶ்ரீ ராமராஜ்யம்!
சம்பூர்ண ராமாயணம் படம் பார்த்த ராஜாஜி
பொதுவாக திரைப்படங்களைப் பார்க்க விரும்பாத மூதறிஞர் ராஜாஜி திரைப்படங்களைப் பார்க்கத் தமக்கு நேரமில்லை என்று சொல்லி ஒதுங்கி விடுவது வழக்கம். ஆனால் சம்பூர்ண ராமாயணம் படம் பார்க்க அவரை அழைத்த போது படம் பார்க்க வந்ததோடு பரதனாக நடித்த சிவாஜிகணேசனின் நடிப்பு சிறப்பாக அமைந்திருப்பதாகவும் பாராட்டினார்.பொதுவாக ராமாயணம் பற்றிய இதே ஈடுபாடு இந்த தேசத்தில் பிறந்த சிறு குழந்தை முதல் மூதறிஞர் வரை இருப்பதில் வியப்பே இல்லை. ராமாயண மஹாபாரத இதிஹாஸம் என்றால் மக்களுக்குத் தனி ஒரு ஈடுபாடு என்றும் உண்டு.தொலைக்காட்சியில் ராமாயணம் தூர்தர்ஷன் வாயிலாக ஒளிபரப்பப்பட்ட போதும் மக்கள் அனைவரும் குறிப்பிட்ட அந்த ஒளிபரப்பு நேரத்தில் தொலைக்காட்சிப் பெட்டிக்கு குடும்பத்துடன் அடைக்கலமாயினர்.

ஶ்ரீராமராஜ்யம்
இந்த வகையில் ராமாயணம் மீண்டும் தெலுங்குப் படவுலகில் 2011இல் வெற்றிகரமாகப் படமாக்கப்பட்டது.ஶ்ரீராமராஜ்யம் என்ற படம் ராமர் அயோதியில் பட்டம் சூட்டப்பட்ட பின்னர் நடந்த நிகழ்வுகளைக் கொண்ட அருமையான படம்.
பிரபல டைரக்டரான பாபு இதை இயக்க படங்களில் நிரந்தர ராமராக வலம் வந்த என்.டி.ராமாராவின் புதல்வர் சூப்பர்ஸ்டார் பாலகிருஷ்ணா ராமராகவும் நயன்தாரா சீதையாகவும் நடித்த ஶ்ரீராமராஜ்யம் படம் 2011ஆம் ஆண்டு திரையிடப்பட்டது. இது 2012ஆம் ஆண்டு டப்பிங் செய்யப்பட்டு தமிழிலும் மலையாளத்திலும் வெளி வந்தது. 1943ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தி படத்தின் தலைப்பே தனக்கு உத்வேகமூட்டியது என்றார் பாபு.
இசை அமைத்தவர் இளையராஜா. ஆத்மார்த்தமாக இசை அமைத்த அவரது பாடல்கள் 170 நிமிட நேர படத்தில் 50 நிமிடம் 25 விநாடிகள் எடுத்துக் கொண்டதென்றால் பாடலின் முக்கியத்துவம் பற்றிக் கேட்க வேண்டுமா என்ன? 15 பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஷ்ரேயா கோஷல் உள்ளிட்ட பல பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் பாடினர்.ஜொன்னவிதூல ராமலிங்கேஸ்வர ராவ் பாடல்களை இயற்றினார். அருமையான பாடல்கள் அனைத்தையும் வரவேற்ற ரசிகர்கள், இன்றும் தவறாமல் அவற்றை யூடியூப் உள்ளிட்ட பல்வேறு இணையதள பாடல்தளங்களில் கேட்டு ரசிக்கின்றனர்.

சங்கராபரணம்
இதே போல தெலுங்கில் தயாராகி தமிழில் டப் செய்யப்பட்ட 1979ஆம் ஆண்டு திரைப்படமான சங்கராபரணம் குறிப்பிடத் தகுந்த ஒரு படம். இதில் ராமரைப் பற்றிய பத்ராசல ராமதாஸரின் பாடல் ஒன்று இடம் பெற்று அனைவரையும் உருக்கியது. வாணி ஜெயராம் பாடிய பாடலை யாருமே மறக்க முடியாது.
ஏ தீருக நனு தய ஜூசே தவோ, இன வம்சோத்தம ராமா
நா தரமா பவசாகர மீதனு, நளின தளேக்ஷண ராமா
ஶ்ரீ ரகு நந்தன, சீதா ரமணா, ச்ரித ஜன போஷக ராமா
காருண்யா லய, பக்த வரத நின்னு, கன்னதி காணுபு ராமா
க்ரூர கர்மமுலு, நேரக சேசிதி, நேரமுலெஞ்சகு ராமா
தாரித்ரயமு, பரிகாரமு சேயவே, தெய்வ சிகாமணி ராமா
எப்படி கருணை புரிவாய். எப்படி சாகரம் கடப்பேன், வம்சோத்தம ராமா, ரகு நந்தனனே, சீதையின் ரமணனே, அடியாரைக் காப்பவனே, காருண்யமயமானவனே, பக்தர் தம் வரதனே, க்ரூரமான கர்மங்கள் செய்தாலும் அவற்றை நீக்கி, தரித்திரம் போக்கி அருள்வாய் தெய்வ சிகாமணியே, ராமா!’ என்ற பொருளை உடைய இதை வாணி ஜெயராம் தன் பக்திக் குரலில் பாடியது அனைவரையும் மகிழ்வித்தது!

சங்கராபரணம் படத்தை இயக்கியவர் பிரபல டைரக்டரான கே.விஸ்வநாத். இந்தப் படம் வெளின முதல் நாளில் கூட்டமே இல்லை. ஆனால் படத்தைப் பார்த்து வெளியே வந்த ரசிகர்கள் கூறிய அபாரமான புகழ்மொழிகளால் அடுத்த நாளிலிலிருந்து கூட்டம் அலை மோத ஆரம்பித்தது. ஹைதராபாத் ராயல் தியேட்டரில் 216 நாட்கள் ஓட, நாட்டின் இதர பகுதிகளில் உள்ள பல திரையரங்கங்களில் சுலபமாக நூறு நாட்களைத் தாண்டியது!

ப்ரோசேவாரெவரு ரா
சங்கர சாஸ்திரியாக நடித்த ஜே.வி.சோமயாஜுலு அந்தப் பாத்திரமாகவே மாறி விட்டார். இதில் ராமரைப் பற்றிய புகழ் பெற்ற இன்னொரு பாடலும் உண்டு.மைசூர் வாசுதேவாசார் இயற்றிய ப்ரோசே வாரெவரு ரா என்ற பாடலை யாருமே மறக்க முடியாது. இதை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் வாணி ஜெயராமும் தங்கள் அற்புதக் குரல் வளத்தால் மெருகேற்றினர்.
மைசூர் வாசுதேவாசார் (தோற்றம் 28-5-1865 மறைவு 17-5-1961) பெரிய ராமபக்தர்.தியாகராஜ ஸ்வாமிகளின் சீடர் பரம்பரையில் வந்தவர். 95 வயது வரை வாழ்ந்த இவர் சுமார் 200 கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை சம்ஸ்கிருதம் மற்றும்ம் தெலுங்கில் உள்ளவை.
நினு விநா ப்ரோசேவாரெவரு ரா – உன்னையல்லால் என்னைக் காப்பவர் யார்?
ரகுவரா – ஓ ரகு குல திலகமே
நானு நீ சரணாம்புஜமுலு – நான் உன் சரணாரவிந்தங்களை
நே விடஜால கருணாலயால – விட முடியாது, கருணைமயமானவனே!
கமாஸ் ராகத்தில் அமைந்த இந்தப் பாடலைக் கேட்டு உருகாதவர் யாரும் இருக்க முடியாது! படக்காட்சியும் அபிநயங்களோடு அமைந்திருந்தது!

இதிஹாஸம் ஏற்படுத்தும் தெலுங்கு, தமிழ் ஒற்றுமை
தெலுங்கு திரைப்பட உலகமும் தமிழ்த் திரைப்பட உலகமும் மிக அன்யோன்யமாகவே ஆரம்ப காலம் முதல் இருந்து வந்துள்ளது. இதற்கான காரணம் பண்பாட்டின் அடிப்படையில் மனதால் அனைவரும் ஒன்று பட்டிருந்த காரணத்தினால் தான்! அரசியல் அந்தக் காலத்தில் திரையுலகில் புகவில்லை! சென்னையில் இருந்த ஸ்டுடியோக்களைத் தாராளமாகப் பயன்படுத்திய திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு இரு மொழிகளில் ஒரே சமயத்தில் படம் எடுப்பது சுலபமாக இருந்தது.
ஆடல் பாடல், கிளுகிளுப்புப் படங்களையே தெலுங்கு உலகம் விரும்பியது என்று சிலர் கூறுவது சரியில்லை. மிக அழகான கலைப் படங்களையும் இதிஹாச புராணப் படங்களையும் தெலுங்கு உலகம் தந்திருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும். சம்பூர்ண ராமாயணம், லவகுசா, ஶ்ரீ ராமராஜ்யம், சங்கராபரணம் போன்ற படங்கள் போதாதா, இதை நிரூபிக்க!
இந்த அற்புதமான தெலுங்கு தமிழ் ஒற்றுமை காலத்தை வென்று நிலை நிற்க ராமரின் அருளை வேண்டுவோம்!
*************
Posted by Tamil and Vedas on March 3, 2015
https://tamilandvedas.com/2015/03/03/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa/
You must be logged in to post a comment.