Arrow Mark shows the location of Tromso, noorthern most town of Norway.
( We have already published about this trip as abridged by AK Chettiyar. I am giving the portions that we have not covered so far since I have got the full book with me: swami)
மகாமேரு யாத்திரை
கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண். 919 தேதி 20 மார்ச் 2014
திருநெல்வேலி ஜில்லா தாம்பிரபர்ணீதீரம், அரியநாயகிபுரம் ஆர். அனந்தகிருஷ்ண சாஸ்திரிகள் எழுதிய ‘மகா மேரு யாத்திரை’ என்ற 1936 ஆம் ஆண்டுப் புத்தகம் பொள்ளாச்சியில் சாலை ஓரத்தில் பழைய புத்தகம் விற்பவரிடம் கிடைத்தது. எட்டு வருஷமாகப் படிக்காமல் பாலிதீன் பையில் போட்டு பாதுகாத்து வைத்த புத்தகத்தை இப்போதுதான் வாசித்தேன். இதோ சில சுவையான செய்திகளை மட்டும் தருகிறேன்.
அனந்தகிருஷ்ண சாஸ்திரிகள் எழுதியது பின்வருமாறு:
1.நான் மகாமேரு யாத்திரை சென்று வந்தவுடன், யாத்திரையைக் குறித்து ஒரு சிறு புஸ்தகம் ‘மிட்நைட் ஸன் இந் தி லாண்டு ஆப் அவர் போர் பாதர்ஸ்’ என்ற பெயருடன் இங்கிலீஷில் பிரசுரம் செய்தேன். நீலகிரியில் ஸ்ரீ ராமகிருஷ்ணாச்சிரமத்தில் ஸ்வாமி சித்பவானந்தரவர்களைச் சந்தித்தேன். அவர்கள் உத்தரவுப்படி ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் என்ற தமிழ் மாதப் பத்திரிகையில் எழுதினேன். பத்திரிகையைப் படித்தவர்கள் இன்னும் விவரமாக எழுதிப் புத்தகமாக வெளியிட வேண்டும் என்று கேட்டனர்.
2.யாத்திரை செய்யமுடியாவிட்டாலும் யாத்திரா ஸ்தலங்களைப் படித்த அறிவுக்கும் ஒரு புண்ணியம் உண்டு என்று நம் சாஸ்திரங்கள் சொல்லுகிற படியினால் திராவிட தேசத்தில் வசிக்கிற நம் ஆரியர்கள் இந்தச் சிறு தமிழ் புஸ்தகத்தைப் படித்து மகாமேரு யாத்திரைப் பலனை அடையவேண்டுமென்பது என் விருப்பமாகும்—ஜய மஹாதேவ, —— ஆர்.ஏ.சாஸ்திரி, 9-12-1935
3.வேதத்தில் கூறியபடி பூமிமுழுதும் ஆரியர்களுடையது. பிறகு மனு முதலான ஸ்மிருதிகளின்படி தொடர்ச்சி பூமியாயுள்ள ஆசியாக் கண்டம் முழுவதும் ஆரியர் வாசஸ்தானமாக இருந்தது, இப்பொழுது நாம் வசிக்கும் பரத கண்டம் மாத்திரம் ஆரிய வாசஸ்தானமாக குறிக்கப்பட்டிருக்கிறது. எனினும் வட இந்தியாவில் இருக்கும் ஆரியர் தென் இந்தியாவில் வஸிப்பவரை த்ரவிடர்களென்றும் ஆரியர் ரத்தக் கலப்புள்ளவர்களென்றும் பழிப்பதுண்டு. இவைகள் எல்லாம் காலக்கிரமத்தில் வந்த அசூயை ஆகும். மேதாதிதி முதலான சில பெரியோர்களின் சட்டப்படி எந்த இடத்தில் ஆரியர் தங்கள் ஆசாரத்துடன் வஸிக்கிறார்களோ அந்த இடத்திற்கு ஆரியாவர்த்தம் என்றும். எந்தப் பூமியில் மிலேச்சாச்சாரமிருக்கிறதோ அந்த இடத்திற்கு மிலேச்சதேசமென்றும் பூமிக்குத் தனியே தோஷமில்லை யென்றும் அதில் வாஸம் செய்யும் நல்லவர், கெட்டவர்களால் பூமிக்குச் சுத்தம் அசுத்தம் ஏற்படுகிறதென்றும் சிலர் கூறியிருக்கிறார்கள்.
4.முதிர்ந்த வயதில் வெகுகால சாத்தியமான ஒரு பெரிய யாத்திரையைச் செய்யவேண்டும். அதற்குப் பூ பிரஸ்தாரம்( பூமியைச் சுற்றுதல்: என்று பெயர். பூ பிரஸ்தாரம் என்றால் நம் பரதக்கண்ட மட்டுமன்று; பூமியையே சுற்றுதல் ஆகும். ரூ 3000ம் நான்கு மாத அவகாசமும் கிடைப்பின் பூப்பிரதக்ஷிணம் செய்யலாம். கூட ரூ 3000 இருந்தால் ஆகாயப் பிரதக்ஷிணமும் சிரமமின்றி செய்யமுடியும்.
Mid Night Sun
5.பூமி கோழிமுட்டை மாதிரி உருண்டையாக இருக்கிறதென்பது எல்லாருக்கும் தெரியுமே. வடக்குக் கடைசிக்கு மகாமேரு என்று பெயர். அந்த இடத்திற்கு காந்த முள் இழுப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்களே. அவ்விடத்திற்குப் போகமுடியாது. ஆகாய விமானத்தையாவது கப்பலையாவது காந்த சக்தி சமீபத்தில் வரவிடுவதில்லை. அப்படிப்பட்ட இடம் சுமார் 150 மைல் சுற்றளவுள்ளது. இதிலிருந்து சுமார் 400 மைல் தெற்கேயுள்ள இடங்களுக்கு ஆர்டிக் இடங்கள் என்று பெயர். அதாவது 66 டிகிரி முதல் 80 டிகிரி வரை. இவ்விடத்திற்கு நம் பெரியோர் உத்தரகுரு வென்று பெயர் வைத்திருந்தார்கள்.
6.இவ்விடத்தில் மே 14உ முதல் ஆகஸ்டு 30உ வரை சூரியன் உதயாஸ்தமனமில்லாமல் எப்பொழுதும் விளங்குகிறான். அப்படியே தக்ஷிணாயனத்தில் ( நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை ) சூரியனே காணப்படுவதில்லை
7. அந்தந்த ஸ்தானத்திற்குத் தகுந்தபடி நம் பூர்வீகர் மூன்று இரவு யாகம் முதல் நூறு இரவு சேர்ந்திருந்த காலம் வரை யாகஞ் செய்ததாக வேதங்களிற் சொல்லப்பட்டிருக்கிறது. சதராத்ரிக் கிரது செய்த இடத்தை நாம் இப்பொழுது ‘ட்றாம்சோ’ என்கிற இடமாகிய 72ஆவது டிக்ரியில் பார்க்கலாம். அவ்விடத்தில் சரியாக நூறு தினங்கள் ஒரே இரவாகச் சூரியனே இல்லாமல் இருக்கிறது. இதற்கு நேரே வடக்கில் மகாமேரு இருக்கிறது. அந்த இடத்திற்கு துருவஸ்தானமென்று பெயர்.
8.இந்த பூமியானது சமமாக ஆகாயத்தில் மிதக்கவில்லை. வட பக்கம் போகப் போகச் சிறிது உயர்ந்திருக்கிறது. ஆகையால் வடதிசைக்கு உத்தரம் என்று பெயர் வந்தது.( ‘உத்’ என்றால் ‘மேல்’ என்று பொருள்). தக்ஷிணம் கொஞ்சம் பள்ளமாகக் காணப்படுவதால் தென் மேருவை நரகம் என்றும், யமபட்டண மென்றும், பூமிக்குச் சிலகோடி மைலுக்குக் கீழே இருக்கிறதென்றும் சில புராணங்களிற் கூறப்பட்டிருக்கிறது. அப்படியே உத்தர மேருவை, தேவர்கள் வஸதிஸ்தானமென்றும் சூரியர் முதலானவர் புண்ணிய பூமியென்று பிரதஷிணம் செய்கிறார்களென்றும், ஸம்ஸாரத்தைத் தாண்ட இது காரணமாக இருப்பதினால் இந்த இடத்திற்கு உத்தரம் (தாண்டவைப்பது) என்றும் சொல்லப்படுகிறது.
9. இந்த ‘ட்றாம்சோ’ என்ற இடத்தில் மே மாதம் 14ஆம் தேதி இரவு 11-45க்கு மேற்குத் திசையில் சூரியன் உதித்து, நவம்பர் மாதத்தில் கிழக்கே அஸ்தமனமாகிறான். ஆகையால், முன் வேதத்தில் குறிப்பிட்ட வாக்கியமானது உண்மையாமன்றோ? வட தேசங்களில், ‘பாதி இரவு சூரியன்’ என்று சூரியனைச் சொல்வது வழக்கம். மே 14 ஆம் தேதி இரவு நான் அந்தப் பாதி இரவு சூரியன் உதிப்பதைப் பார்க்கலானேன். சுமார் 11 மணிக்கு நான் மேற்கே பார்த்துக் கொண்டிருக்கையில், மேல் கடலிலிருந்து ஒளிப் பிழம்பொன்று தோன்றுவது தெரிந்தது; உடனே கொஞ்சம் மேலே வந்து வடக்கே அது ஓடிவிட்டது.
10. அங்கு சூரியன் நம் தேசத்திற் போல ஆகாயத்தில் குறுக்கே போவதில்லை. ஆகாயத்தின் ஓரமாகவே செல்லுவான். ஆகையால் சாஸ்திரங்களில்’ ‘குயவன் பானை செய்கிற சக்கரம் போலச் சூரியன் சுற்றுகிறான்’ என்று வருணிக்கப்பட்டுள்ளது (குலால சக்கிர பிரமவத்: திலகர் எழுதிய ஆர்டிக் புஸ்தகம்). அப்படிச் சுற்றுவதனால் சூரியன் நிறம் சுவர்ணமயமாகவே யிருக்கும். நல்லவெண்மை நிறம் அன்று. ஆகையால் எப்பொழுதும் ‘மகாமேரு சூரியன்’ பொன் வர்ணமென்று வேதங்களில் புகழப்படுகிறான் (ஹிரண்மயன்). மேருப் பிரதேசத்தில் சூரியனுக்கு தாமிரம், அருணம், பப்ரு, சுமங்களம் என்ற நாலு வர்ணங்களுண்டென்று வர்ணிக்கப்படுகிறது (ருத்திராத்தியாயம்). ஏழுவர்ணம் சொல்லிய வேத வாக்கியங்களை, நம் தேசங்களில் சூரியனைக் கண்டு வர்ணித்ததாகக் கொள்ளவேண்டும். சூரியன் தங்க வர்ணம்; ஹிரண்மய மீசை; பொன் மயிர்; கால் முதல் தலைவரை ஸ்வர்ண தேஜஸ் என்று சொல்லிய வாக்கியங்கள் எல்லாம் மேருப் ப்ரதேச சூரியனைக் குறித்தவைகளாகும். இதை உத்தேசித்துத் தான் மகாமேரு ஸ்வர்ணபர்வதமென்று புராணங்களில் அலங்கரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆதாரம்: மகாமேரு யாத்திரை (நடுநிசி சூரியன் நம் முன்னோர் வசித்த பூமியில்), ஆர்.அனந்தகிருஷ்ண சாஸ்திரியினால் யாத்திரை செய்து எழுதப்பட்டது, ஜனவரி 1936.
Northern Lights known as Aurora Borealis
என் குறிப்புகள் : 1935 ஆம் ஆண்டில் ஒரு திருநெல்வேலி பிராமணர் இப்படி நார்வே நாடு வரை போனது அதிசயம்தான். ஆசார அனுஷ்டானங்களையோ, நியம நிஷ்டைகளையோ விடாது போனது பற்றி அவர் கூறுவதை இரண்டாவது பகுதியில் தருகிறேன். இதைவிட அதிசயம், வேத கால ரிஷிகளுக்கு வட துருவம் பற்றி எப்படித் தெரிந்தது என்பதுதான். லோகமான்ய பால கங்காதர திலகரும் 1925 ஆம் ஆண்டிலேயே இது பற்றி எழுதி இருக்கிறார்.
இன்று நாள்ளிரவுச் சூரியனைப் பார்ப்பது சர்வ சாதாரணம். ஆண்டுதோறும் லட்சக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் நார்வே ஸ்வீடன் நாடுகளில் குவிகின்றனர். உண்மையான வட துருவத்துக்கும் இந்தியர்கள் சென்று வந்துவிட்டனர். அனந்த கிருஷ்ண சாஸ்திரிகள் போனது நார்வேயின் வடகோடிப் பகுதிதான். அவரது சாதனை அங்கு சென்றுவிட்டு 1936ஆம் ஆண்டிலேயே தமிழில் புத்தகம் எழுதியது ஆகும்!!
தொடரும்………….
contact swami_48@yahoo.com
Pictures are taken from different sites;thanks.





You must be logged in to post a comment.