Radio Talk written by S NAGARAJAN
Date: 9 November 2015
Post No:2313
Time uploaded in London :– 7-50 AM
(Thanks for the pictures)
DON’T REBLOG IT ! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்
(நான்காம் பாகம்)
By ச.நாகராஜன்
சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்
Part 1 posted on 6th November 2015
Part 2 posted on 7th November 2015
Part 3 on 8th nov. & Part 4 on 9th nov.15
4.காற்றையும் நீரையும் தூய்மையாக இருக்கும்படி காப்போம்!
மின்வெட்டு அதிகம் உள்ள இந்த நாட்களில் நமது அன்றாட தேவைகளுக்காக பாட்டரிகளை அதாவது மின்கலங்களை அதிகமதிகம் பயன்படுத்தும் வழக்கம் நகரங்களிலும் கிராமங்களிலும் அதிகரித்து வருகிறது.
ஆனால் பயன்படுத்தப்பட்ட பின்னர் இந்த மின்கலங்களை அறிவியல் பூர்வமான வழிகளில் அல்லாமல் மனம் போன போக்கில் கழிவாகத் தூக்கி எறிவது சுற்றுப்புறச் சூழலுக்குப் பெரும் கேட்டை விளைவிக்கிறது! கூடவே ஆரோக்கியக் கேடுகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த மின்கலங்களில் காரீயம் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 14.5 கிலோகிராம் எடையுள்ள ஒரு காரின் மின்கலத்தில் 8.7 கிலோகிராம் அளவு ஈயம் உள்ளது. இதை விடப் பெரிய அளவில் வணிக நிறுவனங்கள் மற்றும் வீட்டுப் பயன்பாடுகளில் உள்ள இன்வர்டர்களில் சுமார் 16 கிலோ எடையுள்ள ஈயம் உள்ளது.
பயன்படுத்தப்பட்ட பின்னர் தூக்கி எறியப்படும் இவைகளைத் துண்டு துண்டுகளாக்கித் தூக்கி எறியும் போது வெளிப்படும் ஈயத் தூசு, சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும். இந்த ஈயத்திலிருந்து வெளிப்படும் நச்சு இரத்த ஓட்டத்தில் உயர் அழுத்தத்தை ஏற்படுத்தும்.அத்தோடு சிறுநீரகத்தைப் பழுதடையச் செய்யும்.சிறுவர்கள் இந்தப் புகையால் பாதிக்கப்பட்டால் அவர்களின் நடத்தையில் மாறுபாடும் ஏற்படும்.
இப்படி பல்வேறு மனித அங்கங்களைப் பாதிக்கும் ஈயக் கழிவை உரிய முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.
ஈயம் சில அழகு சாதனங்களிலும் சேர்க்கப்படுகிறது. பெயிண்டுகள், சிறுவர்கள் விளையாடும் பொம்மைகள்,சில வகை மண்பாண்டங்கள் ஆகியவற்றிலும் ஈயம் கலக்கப்படுவதால் இவை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் போது நீரும் நிலமும் காற்றும் மாசுபட வாய்ப்பு ஏற்படுகிறது.
ஆகவே ஈயம் எதிலெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற அடிப்படை அறிவைப் பெறுவதோடு அதைக் கழிவாக அப்புறப்படுத்தும் போது உரிய முறையில் நிபுணர்களின் துணையோடு அப்புறப்படுத்துவதைப் பழக்கமாகக் கொள்ள வேண்டும்.
இதனால் உடல்நலமும் பாதுகாக்கப்படும்; சுற்றுப்புறமும் பாதுகாக்கப்படும்!
****************


You must be logged in to post a comment.