Written by S Nagarajan
Article No 1696; Dated 7th march 2015
London Time 6-35 am
சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்
20. மாந்தோப்பில் உள்ள மரங்கள்!
ச.நாகராஜன்
நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:
आचरार्यत्वन्यायः
acararyatva nyayah
ஆசாரார்யத்வ நியாயம்
ஆர்யன் என்ற சொல்லுக்கு பண்புடையவன் என்று அர்த்தம். ஆரிய இனம் எங்கிருந்தோ வந்தது, பாரதத்தில் புகுந்து தலைமை இடத்தைப் பிடுங்கிக் கொண்டது என்பதெல்லாம் வெள்ளைக்காரர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி, வேற்றுமைகளைத் தொடர்ந்து உருவாக்கும் உத்தி ஆகியவற்றின் அடிப்படையில் பரப்பப்பட்ட கருத்துக்கள். இதை முதலில் மனதில் கொண்டு இந்த நியாயத்தின் பொருளைப் புரிந்து கொள்ளும் அணுகுமுறை இருத்தல் வேண்டும்.
வர்ணாச்ரம தர்மம் சமூகத்தின் நான்கு முக்கிய பிரிவுகளைச் சுட்டிக் காட்டும் ஒன்று. இதில் ஏற்றத் தாழ்வு எதுவும் இல்லை. இதே போல வாழ்க்கையின் முக்கிய பிரிவுகளாக க்ரஹஸ்தாச்ரமம், வானப்ரஸ்தம் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நியாயம் ஆசாரம் மற்றும் ஆர்யத்வம் பற்றிச் சொல்லும் நியாயம். ஆசாரங்கள் எனப்படும் நல் நடத்தைகளும் பண்பாடுள்ள வாழ்வும் ஆர்யர்களின் வம்சத்தை, அதாவது பண்பாடுள்ளவர்களின் வம்சத்தை வளர்க்க இன்றியமையாதவை என்று சொல்கிறது இந்த நியாயம்.
ஒன்று இன்னொன்றைச் சார்ந்திருக்கிறது என்கிறது இந்த நியாயம். ஆசாரம் இருந்தால் மட்டுமே ஆர்யத்வம் எனப்படும் பண்பாட்டுத் தன்மை இருக்கும். ஆர்யன் எனப்படுபவன் ஆசாரமுள்ளவன் அல்லது நல்நடத்தைகளின் தொகுதியால் பின்னப்பட்ட வாழ்க்கையை உடையவன் என்பதையே இந்த ஆசாரமும் ஆர்யத்வமும் என்னும் நியாயம் சொல்கிறது.
आम्रवनन्यायः
amravana nyayah
ஆம்ரவன நியாயம்
ஆம் – மா; வன – தோப்பு; ஆம்ரவனம் – மாந்தோப்பு
மாந்தோப்பின் அடிப்படையில் எழும் நியாயம் இது.
மாமரங்கள் அதிகம் அடங்கிய ஒரு தோப்பு இருக்கிறது. அந்தத் தோப்பில் வேறு வகை மரங்களும் கூட சில இருக்கக்கூடும். என்றாலும் கூட எண்ணிக்கை மற்றும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் அது மாந்தோப்பு என்றே அழைக்கப்படும். வழக்கத்தின் அடிப்படையில் ஏற்படும் சொல்வழக்கத்தை இந்த நியாயம் சுட்டிக் காட்டுகிறது. அத்தோடு சகவாசத்தால் ஏற்படும் விளைவையும்– நல்லவர், தீயவர் சேர்க்கையால் ஏற்படும் விளைவையும் – இது சுட்டிக் காட்டும்.
करिबृंहितन्यायः
karivrnhita nyayah
கரிப்ரிங்ஹித நியாயம்
கரி – யானை; ப்ருங்ஹிதம் – யானை
கரி என்ற சொல் யானையைக் குறிக்கும். ப்ரிங்ஹிதம் என்றாலும் யானையையே குறிக்கும்.
யானை பிளிறுவதைச் சொல்கிறது இந்த நியாயம்.
ப்ருங்ஹிதம் என்றாலேயே யானை பிளிறல் என்று தான் பொருள். கரி என்ற சொல் இங்கு அதிகப்படியாக இருக்கிறது. இது ஒரு சிறப்பான அழுத்தத்தைத் தரப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உதாரணமாக மாலை என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். மாலை என்றாலேயே பொதுவாக பூக்களால் தொடுக்கப்பட்ட ஒன்று என்று தான் அர்த்தம். என்றாலும் கூட பூமாலை அல்லது புஷ்பமாலா என்றே சொல்கிறோம். இங்கு மாலையில் பூக்களின் மேன்மையை எடுத்துக் காட்டவே பூமாலை என்ற சொல்லை வழக்கத்தில் பயன்படுத்துகிறோம். அது போலவே ப்ரிங்ஹிதம் என்னும் பிளிறலை கரிப்ரிங்ஹிதம் என்று யானையின் பிளிறல் என்று கூறி யானையைச் சிறப்பிக்கிறோம். இது போல ஒரு விஷயத்தின் சிறப்பைக் குறிக்க அதே பொருளைக் கொண்ட சிறப்புச் சொல்லைப் பயன்படுத்திக் கூறுவதை இந்த நியாயம் நியாயப்படுத்துகிறது. கூறியது கூறல் என்ற குற்றம் இங்கு எழாது.
काकदधिघातकन्यायः
kakadadhighataka nyayah
காகததிகாதக நியாயம்
காகம் – காக்காய்; ததி – தயிர்
காகமும் தயிர்ப்பானையும் பற்றிய நியாயம் இது.
இதன் அடிப்படையிலான சம்பவம் இது தான்: ஒருவர் தயிரை வைத்திருக்கும் தயிர்பானையை பத்திரமாக காக்கையிடமிருந்து பாதுகாக்குமாறு இன்னொருவரிடம் கூறினார். காக்கையிடமிருந்து தானே பாதுகாக்கச் சொன்னார் என்று அதை மட்டும் விரட்டி விட்டு மற்ற மிருகம், பறவைகள் அந்த தயிர்பானையில் உள்ள தயிரை எடுக்க அவர் விடலாமா? கூடாது.
காகத்திடமிருந்து காக்க வேண்டும் என்று சொல்லும் போதே இதர அனைத்து பறவைகள், மிருகங்கள் முதலியவற்றிடமிருந்து தயிரைப் பாதுகாக்க வேண்டும் என்பது சொல்லாமலேயே அதில் அடங்குகிறது, இல்லையா! அதே போல முக்கிய விஷயத்தை ஒரு சொல்லால் கூறி அனைத்தையும் உள்ளடக்குவதற்கு இந்த நியாயம் பயன்படுத்தப்படுகிறது.
***********






You must be logged in to post a comment.