ரொனால்டோவின் நன்றி! (Post No.4028)

 

rime Minister of Portugal Antonio Costa presented Narendra modi, PM of India with a jersey autographed by the famous footballer Chritiano Ronaldo 24th June 2017

Written by S NAGARAJAN

 

Date: 27 June 2017

 

Time uploaded in London:-  6-07 am

 

 

Post No.4028

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

உத்வேகமூட்டும் வீரர்

 

ரொனால்டோவின் நன்றி!

ச.நாகராஜன்

 

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்நன்றி கொன்ற மகற்கு”

என்பது வள்ளுவர் வாக்கு.

 

 

உண்மையில் நடந்த ஒரு சம்பவம் இந்தக் குறளுக்குத் தகுந்த ஒரு எடுத்துக்காட்டாகும்.

 

 

மிக பிரபலமான ஃபுட் பால் விளையாட்டு வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் (Christianao Ronaldo) வாழ்க்கையில் இளமைப் பருவத்தில் நடந்த சம்பவம் இது.

ஸ்பெயின் தேசத்தின் மிகச் சிறந்த ஃபுட்பால் வீரர் என்ற பெயரைப் பெற்றவர் அவர்.

 

அவருக்கு ஆல்பர்ட் என்ற ஒரு அருமை நண்பர் உண்டு. அவரைப் பற்றி ரொனால்டோ ஒரு இணையதள் பேட்டியில் இப்படிக் குறிப்பிட்டார்:

 

“எனது ஃபுட்பால் வாழ்க்கையில் ஆல்பர்ட்டுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.லிப்ஸனில் நாங்கள் இருவரும் ஒரு ஃபுட்பால் கிளப்பில் விளையாடிக் கொண்டிருந்தோம். ஒரு நாள் லிப்ஸன் ஸ்போர்டிங் கிளப்பிலிருந்து உயர் அதிகாரிகள் எங்கள் விளையாட்டைப் பார்க்க வந்தனர். அவர்களில் ஒருவர், “உங்களில் அதிகம் ஸ்கோரை எடுப்பவருக்கு  ஸ்போர்டிங் கிளப் ஃபுட்பால் அகாடமியில் சேர சிபாரிசு செய்வோம்” என்றார்.

எங்களது டீம் மூன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் ஜெயித்தது.

 

 

முதல் கோலை நான் எடுத்தேன். இரண்டாவது கோலை ஆல்பர்ட் எடுத்தார்.அடுத்தாற்போல பந்து எதிரணிக்குச் செல்லுகையில் அந்த அணியின் கோல் கீப்பர் ஒன்றும் செய்ய இயலாத நிலையை ஆல்பர்ட் ஊகித்தறிந்தார். ஆனால் பந்தை அவரே கோலுக்குச் செலுத்தாமல் என்னிடம் தள்ளி விட்டார். நான் பந்தை அடித்து கோலை எடுத்தேன். இரண்டு கோல்களைப் போட்டதால் என்னையே அகாடமியில் சேர சிபாரிசு செய்தனர். அங்கு சேர்ந்தது என் ஃபுட்பால் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பு முனையாக் அமைந்தது. பின்னால் பல வேற்றிகளைப் பேற அதுவே வழி வகுத்தது.

 

 

பந்தயம் முடிந்த பிறகு ஆல்பர்ட்டிடம் நான், “ஏன் அந்த் கோலை நீயே எடுக்கவில்லை. என்னிடம் பந்தைத் தள்ளி விட்டு என்னை கோல் ஸ்கோர் செய்ய வைத்தாயே, ஏன்?” என்று கேட்டேன்.

அதற்கு ஆல்பர்ட்,”என்னை விட நீ நன்கு பெரிய ப்ளேயராக வர முடியும் என்பதால் தான்! உனக்கு ஒரு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. அதனால் தான்” என்று பதில் கூறினார்.

 

சில வருடங்கள் கழிந்தன.ஒரு பத்திரிகையாளர் ஆல்பர்ட்டை சந்தித்தார்.

 

மேலே கண்ட சம்பவம் உண்மை தானா என்று அவர் கேட்டார்.

அதற்கு ஆல்பர்ட்,”எனது ஃபுட் பால் வாழ்க்கையில் நான் ஒன்றும் பெரிதாகச் சாதித்து விட முடியாது என்பது எனக்கு நன்கு தெரியும். ஆனால் ரொனால்டோ நிச்ச்யம் பெரிய ஆளாக வருவார் என்று நம்பினேன். ஆகவே தான் அவருக்கு கோல் அடிக்க வாய்ப்பை ஏற்படுத்தினேன்.இப்போது நான் வேலை ஏதும் இல்லாமல் இருக்கிறேன். ஆனால் என்னுடன் விளையாடிய ரொனால்டோவோ பெரும் புகழ் பெற்றவராக ஆகி விட்டார்” என்று கூறினார்.

பத்திரிகையாளர் உடனே ஆல்பர்ட்டிடம்,” உங்களுக்கு வேலை இல்லை என்கிறீர்கள். ஆனால் பார்த்தால் நல்ல செல்வச் செழிப்புடன் இருப்பதாகக் காணப்படுகிறீர்களே”. இதன் இரகசியம் என்ன?” என்று வியந்து கேட்டார்.

 

“அட, அதுவா!இதெல்லாம் ரோனால்டோ எனக்கு அளித்தது தான்! அனைத்து பரிசுகளும் ரொனால்டோ தந்தவையே. இன்னும் அவர் என்னைத் தினமும் நினைத்துக் கொண்டிருக்கிறார். நன்றியுடன் அவர் தரும் பரிசுகளே என்னிடம் உள்ளன. என்னை வாழ வைக்கின்றன” என்றார்.

 

பத்திரிகையாளர் பிரமித்தார். அவர் வாயிலாக உலகம் ரொனால்டோவின் நன்றி பாராட்டும் பெரும் குணத்தை அறிந்தது.

செய் நன்றி கொன்றவர்க்கு உய்வே இல்லை என்பதைத் தெரிந்து கொள்வது ஒன்று. அதை உள்ளத்தில் ஏற்றி நன்றி பாராட்டுவது இன்னொன்று.

 

 

ரொனால்டோவின் நன்றி பாராட்டும் குணம் வள்ளுவர் வழி வாழும் செம்மல் அவர் என்பதைக்  காட்டுகிறது.

 

உத்வேகமூட்டும் செயலைப் புரிபவர் எங்கிருந்தாலும் எந்த நாட்டைச் சேர்ந்தவரானாலும் நல்லவரே!

 

ரொனால்டோ ஃபுட்பால் வீரர் மட்டுமல்ல; அரிய குணம் கொண்ட அற்புத மனிதரும் கூட!

***