கர்ப்பூரமாமோ கடலுப்பு? (Post No.4321)

Written by London Swaminathan

 

Date: 21 October 2017

 

Time uploaded in London- 6-17 am

 

 

Post No. 4321

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கர்ப்பூரமும் வெள்ளை நிறம்; கடலுப்பும் வெள்ளை நிறம்.

இயற்கையில் கிடைக்கும்போது இரண்டும் ஒரே தோற்றம்.

ஆயினும் கர்ப்பூரமும் கடலுப்பும் ஒன்றாகுமா?

 

நான் மதுரையில் இருந்தபோது ஒரு பெரிய மில்லின் (நெசவாலை) ஒரு பெரிய அதிகாரியை எனது நண்பர் ஒருவர் கிண்டல் செய்வார். “அவன் யார் தெரியுமா? என் கூடப் படித்த காலத்தில் நசுங்கிய பித்தளைப் பாத்திரத்தில் தினமும் தயிர் சோறு கொண்டு வருவான்; பரம ஏழை; இன்று பார்! அவன் காரில் போகிறான்; நான் இங்கே உன்னுடன் உடகார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருகிறேன்” என்பார்.

 

அவரே இன்னொரு விஷயமும் சொல்லுவார்– ” பார் என் பாட்டியும் விக்டோரியா மஹாராணியாரும் ஒரே நேரத்தில் ஒரே வருடத்தில் பிறந்தவர்கள்; இதோ பார்! ஜாதகம்! என்று காட்டுவார். பாராண்ட விக்டோரியா மஹாராணி எங்கே? பார்வை இழந்த மதுரைக் கிழவி எங்கே?

 

ஆக, நம்மில் பலரும் அறியாமையின் காரணமாகவோ, பொறாமையின் காரணமாகவோ உயர்ந்த பதவியில், உயர்ந்த நிலையில் உள்ளவர்களுடன் நம்மை ஒப்பிட்டுக் கொள்வோம். அவர்களுடைய முயற்சி, உழைப்பு முதலியவற்றை மறைத்துவிட்டு நம்மை அவர்களுக்குச் சரி சமமாக காட்ட முயல்வோம். இது தவறு என்பதை விளக்க சில அழகான தமிழ்ப் பாடல்கள் உள.

 

கர்ப்பூரம் போலக் கடலுப் பிருந்தாலுங்

கர்ப்புர மாமோ கடலுப்புப் — பொற்பூரும்

புண்ணியரைப் போல இருந்தாலும் புல்லியர்தாம்

புண்ணியரா வாரோ புகல்

–நீதி வெண்பா (எழுதியவர் பெயர் கிடைக்கவில்லை)

 

பொருள்:

கடல் நீரில் உண்டாகும் உப்பு,   கர்ப்பூரத்தைப் போலவே இருந்தாலும், அந்த உப்பு, கர்ப்பூரம் ஆகி விடுமா?

ஒருக்காலும் ஆகாது, அது போல,

 

தீச்செயல் புரிவோர், தோற்றத்தில், அழகு மிக்க நல்வினையாளர் போலத் தோன்றினாலும்,  அவர்கள் புண்ணியர் ஆகிவிடுவரோ? நீயே சொல்.

கான மயிலும் வான் கோழியும் ஒன்றா?

 

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானு மதுவாகப் பாவித்துத் — தானுந்தன்

பொல்லாச் சிறகைவிரித்  தாடினாற் போலுமே

கல்லாதான் கற்ற கவி – வாக்குண்டாம்

 

முறையாக யாப்பிலக்கணம் கற்காதவன், கற்றறிந்தோர் சபையில் கவி பாடுவதானது காட்டில் உள்ள மயில் தன் அழகிய தோகையை விரித்தாடியதைக் கண்ட வான் கோழி, தன்னையும் அந்த மயில் என்று எண்ணிக் கொண்டு, அதுவும் தன் அழகில்லாத சிறகுகளை விரித்தாடியது போலாகும்.

 

கல்லாதவன்= வான் கோழி

கற்றவன்= கான மயில்

 

தவறான கவிதைகள் = வான் கோழிச் சிறகு

இலக்கணக் கவிதைகள்=  மயில்தோகை

நாம் வான் கோழியைப் பின்பற்றமல் இருப்போமாக!

 

TAGS:–கற்பூரம், கர்ப்பூரம் உப்பு, மயில், வான்கோழி

சுபம்–