DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
WRIITEN BY london swaminathan
Date : 12 September 2015
Post No. 2150
Time uploaded in London: – காலை 6-51
(Thanks for the pictures)
கருமிக்கு ஓவியம் விற்பது எப்படி?
வில்லியம் ஹோகார்த் என்பவர் தலைசிறந்த ஆங்கில ஓவியர். ஒரு பெரிய பணக்காரர், அவரைச் சந்தித்து ஒரு ஓவியம் வரையுங்கள் என்றார். ஆனால் அவர் மஹா கருமி. அது ஹோகார்த்துக்கும் தெரியும் . ஆகையால் ஏதேதோ சாக்குப்போக்குச் சொல்லித் தட்டிக் கழிக்கப் பார்த்தார். ஆனால் அந்தக் கருமி — மஹா கஞ்சன் — விடாக் கொண்டன், கொடாக்கொண்டனாக நச்சரித்தார்.
ஹோகார்த்: சரி, உங்களுக்கு என்ன ஓவியம் வேண்டும்?
கருமி: மாடிக்குப் போகும் வழியில் செங்கடலை வரைந்து அதில் இஸ்ரேலியர்கள் கடந்து போவதையும் எகிப்திய பாரோவின் ஆட்கள் மூழ்குவதையும் (பைபிள் கதை), அப்படியே தத்ரூபமாக வரையுங்கள்.
ஹோகார்த்: அதற்கு பல ஆயிரம் பவுன்கள் செலவுபிடிக்குமே!
கருமி: முடியாது; சில நூறு பவுன்கள்தான் தருவேன்.
ஹோகார்த்: சரி, உங்களுக்காக வரைகிறேன்.
இரண்டு நாட்களுக்குப் பின்னர், ஓவியம் தயார் – என்று ஹோகார்த் அறிவித்தார்.
கருமி ஆவலோடு ஓடிவந்தார். சுவர் முழுதும் சிவப்பு சாயம் பூசப்பட்டிருந்தது.
மஹா கருமி (கோபத்துடன்) : என்ன இது? நான் வரையச் சொன்னது இது இல்லையே. செங்கடல் எங்கே? பாரோ எங்கே? இஸ்ரேலியர்கள் எங்கே?
ஹோகார்த்: இதோ பாருங்கள் சிவப்பு சாயம், அதுதான் செங்கடல்
கருமி: இஸ்ரேலியர்கள் எங்கே?
ஹோகார்த்: அவர்கள் செங்கடலைக் கடந்து போய்விட்டார்கள்.
கருமி: எகிப்திய பாரோ (மன்னன்)வின் வீரர்கள் எங்கே?
ஹோகார்த்: அவர்கள் எல்லோரும் கடலில் மூழ்கிச் செத்துப் போய்விட்டார்கள்.
கருமிக்குப் புரிந்தது: கூலிக்கு ஏற்ற வேலைதான் கிடைக்கும் என்று!
ஹோகார்த்துக்கோ ஒரே மகிழ்ச்சி! நல்ல பாடம் புகட்டிவிட்டேன் என்று.
ரட்யாட்ர்ட் கிப்ளிங் துணுக்கு!
கள்ளனுக்கு குள்ளன்
நீ பாய்க்கு அடியில் போனால் நான் கோலத்துக்கு அடியில் போவேன் என்பது கன்னடப் பழமொழி.
ரட்யார்ட் கிப்ளிங் பெரிய எழுத்தாளர். இந்தியாயவை அடிப்படையாக வைத்து கதை எழுதிய பெரிய ஆங்கில நாவலாசிரியர். அவருக்கு ஒரு அமெரிக்க ரசிகர் கடிதம் எழுதினார்:
அன்புள்ள கிப்ளிங்,
நீங்கள் உங்கள் இலக்கியப் படைப்புகளை விற்பதாக அறிந்தேன். ஒரு சொல்லுக்கு ஒரு டாலர் கட்டணம் வசூலிப்பதாகக் கேள்விப்பட்டேன். இத்துடன் ஒரு டாலர் நோட்டு இணைக்கப்படுள்ளது. எனக்கு ஒரு மாதிரி (ஸாம்பிள்) அனுப்புமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
இப்படிக்கு உங்கள்
பரம ரஸிகன்
உடனே கிப்ளிங் பதில் அனுப்பினார்:
அன்புள்ள ரஸிகா,
நன்றி.
இப்படிக்கு கிப்ளிங்
பரமரஸிகன் விடுவாரா? இந்த ஆளிடம் ஒரு சொல் மாதிரிக்கு எழுது என்றால் “நன்றி” என்று ஒரு சொல்லை எழுதி ஏமாற்றிவிட்டார். அவர் கள்ளன் என்றால் நான் கள்ளனுக்கும் குள்ளன் என்று காட்டுகிறேன் என்று எண்ணி, அனதக் கடிதத்தை ஏலம் விட்டார். இரண்டு டாலர் கிடைத்தது.உடனே கடிதம் எழுதினார்:–
அன்புள்ள கிப்ளிங்,
தங்கள் சொல் கண்டேன்; பேரானந்தம் கொண்டேன். அதை ஏலத்துக்கு விட்டேன். இரண்டு டாலர் கிடைத்தது. தபால் செலவு, பேப்பர் செலவு போக கிடைத்த லாபம் 90 செண்ட். அதில் சரி பாதி உங்களுக்குச் சொந்தம்! இத்துடன் 45 செண்ட் தபால் தலைகள் அனுப்பி இருக்கிறேன்.
இப்படிக்கு உங்கள்
பரம ரஸிகன்.
பிரபல எழுத்தாளருக்கு எப்படி இருந்திருக்கும்? நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்!


You must be logged in to post a comment.