ஆண்டாளுடன் 60 வினாடி பேட்டி

ஆண்டாள் அம்மாள், அனந்த கோடி வணக்கங்கள். திருமாலையே கணவனாக வரித்த தாயே, எங்கள் ஊர் பெண்கள் விரைவில் திருமணம் நடக்க ஒரு பாட்டு சொல்லுங்களேன்

 

மத்தளம் கொட்ட, வரி சங்கம் நின்றூத

முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னை

கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன்.

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து

நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்

தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி!

 

ஓ, எனக்குத் தெரியும். வாரணம் ஆயிரம், எல்லா ஐயங்கார் கல்யாணங்

களிலும் கேட்டிருக்கிறேன். இதைப் பாடினால் ஏழேழ் பிறவிக்கும் அன்புடை கணவன் கிடைப்பானா?

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு

உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட் செய்வோம்;

மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம் பாவாய்

 

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளையே. கண்ணனைக் கும்பிட்டால் கவலைகள் எல்லாம் சாம்பல் ஆய்விடுமாமே?

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்

தூயப் பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தில் தோன்றும் அணிவிளக்கைத்

தாயை குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை

தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது

வாயினால் பாடி மனதினால் சிந்திக்க

போய பிழையும் புகு தருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பு ஏல் ஒர் எம்பாவாய்

 

இவ்வளவு சிறு வயதில் உங்களுக்கு எவ்வளவு விஷயம் தெரிந்திருக்கிறது. நீங்கள் வீனஸ், ஜூபிடர் கிரகங்கள் பற்றிப் பாடியதால் தான் உங்கள் காலத்தை அறியமுடிந்தது. தமிழ் பெண்கள் கெட்டிக்காரிகள்.

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை

கிள்ளிக் களைந்தானைக் கீர்ந்திமைப் பாடிப் போய்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும் சிலம்பின காண்

 

உங்களுக்கு பறவைகள், மிருகங்கள் பற்றிய அறிவு அதிகம் இருக்கிறதே. உயிரியல் பாடம் படித்தீர்களா? ஒரு பாட்டில் சிங்கத்தை நேரில் பார்த்தது போலவே பாடினீர்களே!

மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து

வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலே

 

பலே,பலே சர்கஸில் கூட சிங்கத்தை இப்படிப் பார்த்ததில்லை.

30 பாவைப் பாடல்களையும் பாடினால் என்ன கிடைக்கும்?

சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே

இங்கு இப் பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

 

கோதைத் தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை

வையம் சுமப்பதும் வம்பு என்று ஒருவர் பாடுகிறாரே.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடு கயல் உகள

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண் படுப்ப

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்து ஏல் ஓர் எம்பாவாய்.

 

திடீரென்று ஒரு பாட்டு நினைவுக்கு வருகிறது, கருப்புரம் நாறுமோ…

கருப்புரம் நாறுமோ? கமலப் பூ நாறுமோ?

திருப் பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?

மருப்பு ஒசித்த மாதவன் தன் சுவையும் நாற்றமும்

விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல், ஆழி வெண் சங்கே!

 

நன்றி, தாயே.

 

(Please read other 60 second interviews with Adi Shankara, Sathya Sai Baba, Swami Vivekananda, Bharathiyar, Kamban, Arunagirinathar, Maniikavasagar,Valluvar,Tirumular,Ilango and Pattinathar)

Leave a comment

1 Comment

  1. stnigilmaadhu's avatar

    stnigilmaadhu

     /  March 30, 2012

    படிக்கும்போதே சிரிப்பு வந்துவிட்டது…அருமை

Leave a comment