கமில்சுவெலபில்மொழிபெயர்த்ததமிழ்தாத்தாவின் ‘என் சரித்திரம்‘!
ச.நாகராஜன்
தமிழ் தாத்தா உ.வே.சுவாமிநாதையரின் (1855-1942) தமிழ் தொண்டை உலகமே அறியும். தமிழர்கள் தம் பெருமையை அறிய தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். இரவு பகல் பாராது தமிழ் சுவடிகளைச் சேகரித்து ஆராய்ச்சியில் மூழ்கி ஒவ்வொரு சொல்லின் பொருளையும் தேர்ந்து அதை உலகிற்குத் தந்தவர். சில சமயம் ஒரு சொல்லின் பொருளைக் கண்டுபிடிக்க இவர் செய்த முயற்சிகள் நம்மை பிரமிக்க வைக்கும். அவரது என் சரித்திரம் என்ற நூல் மிகச் சிறந்த நூல்.தமிழ் வரலாறை அறிய விரும்புவோர் தமிழ் தாத்தாவின் அரிய சரித்திரத்தை நிச்சயம் படிக்க வேண்டும். சுவையான நூல். சுவை படைத்த அரிய விஷயங்களை நல்கும் நூல்.
இதை மொழிபெயர்க்க செக்கோலேவேகியாவின் தமிழ் அறிஞர் கமில் சுவெலபில் (பிறப்பு : 17-11-1927 மறைவு 17-1-2009) மிகுந்த ஆசைப்பட்டு அற்புதமாக ஆங்கிலத்தில் இரு பாகங்களாக மொழி பெயர்த்துள்ளார். கிரேக்கம், இலத்தீன், ஜெர்மன், ஆங்கிலம், ருஷியன், சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளை கமில் நன்கு அறிவார். ஹிந்தி, மலையாளம், பிரெஞ்சு, இத்தாலி, போலந்து போன்ற மொழிகளையும் இவர் அறிவார்.
என் சரித்திரத்தில் ஏராளமான தமிழ் பாடல்கள் இடம் பெறுகின்றன. சுவையான நிகழ்ச்சிகள் அடங்கியுள்ளன. இவற்றை ஆங்கிலத்தில் சுவை குன்றாது மொழி பெயர்ப்பது ஒரு பெரிய அரிய கடினமான பணி. இதை அவர் சிறப்பாகச் செய்துள்ளார். முருகன் மீது பக்தி கொண்ட இவர் “சுவாமிநாதனின்” சரித்திரத்தை மொழி பெயர்க்க முன் வந்தது தமிழரின் பாக்கியமே! ஆனால் இவர் முன்னுரையில் தெரிவிக்கும் ஒரு சிறு விஷயம் நம் மனதை நெருடுகிறது! அவர் சொற்களில் அந்த சின்ன விஷயத்தைப் பார்ப்போம்:
“Although various well-meaning friends and colleagues tried to dissuade me from translating this large work of reminiscences, and although I, too, might have had my doubts myself, yet I did persevere in this task which I had to set myself in the sprit of affectionate service to the greatest figure of the ‘Tamil Renaissance’, and I shall hopefully bring it in due time to end. The main objections against this work of translation was that I should have “better things” to do; publish original scholarly works – books, papers, reviews – since there are, apparently, not so many of us in the field of Dravidology, and since I presumably have still so much to say.
இந்த பெரிய நினைவுகள் நிரம்பிய நூலை மொழிபெயர்ப்பதிலிருந்து என்னை நல்லெண்ண நண்பர்களும் சகாக்களும் தடுத்த போதிலும், நானும் கூட என்னைப் பற்றிய ஐயம் கொண்டிருந்த போதிலும், நான் இந்தப் பணியில் விடாமுயற்சியுடன் தமிழ் மறுமலர்ச்சியின் மிகப் பெரும் தோற்றமானவருக்கு பிரியமுடன் சேவை செய்யும் உணர்வுடன் இதைச் செய்ய ஆரம்பித்தேன். உரிய நேரத்தில் இதை முடிக்கும் நம்பிக்கையும் உண்டு. இந்த மொழிபெயர்ப்பு பணிக்கு எதிரான ஆக்ஷேபணைகளுள் பிரதானமாக இருந்தவை: “இதை விட சிறந்த வேலைகள்” நான் செய்வதற்கு உள்ளன; மூலமாக நானே எழுதும் அறிவு சார்ந்த ஆய்வுகள் – புத்தகங்கள், ஆய்வுக் கட்டுரைகள், மதிப்புரைகள் – உள்ளன – ஏனெனில் திராவிடாலஜி என்ற தளத்தில் அநேகர் இல்லை, இன்னும் நான் உண்மையெனக் கருதிச் சொல்ல வேண்டியது நிறைய உள்ளது என்பதால்!
தமிழுக்காக வாழ்ந்து அயரா உழைப்பை மேற்கொண்டு பத்துப்பாட்டு, எட்டுத் தொகையுள் ஐந்து, மூன்று பெரும் காப்பியங்கள், ஐம்பதிற்கும் மேற்பட்ட இலக்கியங்கள், இலக்கண நூல்கள் உள்ளிட்ட தமிழ் செல்வத்தை ஈந்து தமிழருக்குத் தமிழ் பற்றி முகவரி தந்த ஒரு பெருமகனாரின் சரித்திரத்தை மொழிபெயர்க்க ஒரு சிறந்த தமிழ் அறிஞர் முன் வந்த போது அதைத் தடுக்க முயன்றனர் என்ற செய்தியே நம்மை திடுக்கிட வைக்கிறது. இது சாதாரண விஷயமாக இருந்தால் கமில் இதை முன்னுரையில் ஒரு முக்கியத்துவம் கொடுத்துக் கூறியிருக்க மாட்டார். அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காகவே இதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
இதையும் மீறி நான் ஏன் இதைச் செய்தேன் என்று தொடரும் அவர் இரண்டு காரணங்களைச் சொல்கிறார். 1) மொழிபெயர்ப்பு என்பது ஒரு பெரும் கலை.மிக முக்கியமான ஒன்று.ஆகவே இதை மொழிபெயர்ப்பது அவசியம் 2) டாக்டர் ஐயர் அவர்கள் வார்த்தைகளாலேயே அவர் எப்படி இப்படி ஆக நேர்ந்தது என்பதை அறிவது மிக முக்கியமானது!
அற்புதமான மொழிபெயர்ப்பைப் படித்து முடித்த சந்தோஷத்தை விட சிறந்த தமிழ் பணியை தடுக்க முயன்றவர்களை எண்ணி வருத்தம் சற்று மேலோங்கவே செய்கிறது.
*****************************

You must be logged in to post a comment.