ஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங்கள்!

how god

 

ஞான ஆலயம் ஜனவரி 2013 இதழில் வெளியான சிறப்புக்கட்டுரை

 

உலகின் பிரபல நியூரோஸயின்டிஸ்டான (neuroscientist) ஆண்ட்ரூ நியூபெர்க்கை ஞான ஆலயம் வாசகர்களுக்காகத் தொடர்பு கொண்டோம். அவரது ஆராய்ச்சிகளைப் பற்றி எழுதவும் படங்களை வெளியிட அனுமதி வேண்டியும் அவரை வேண்டியபோது உடனே இசைவைத் தெரிவித்ததுடன் ஞான ஆலயம் வாசகர்களுக்குத் தன் வாழ்த்துக்களையும் தெரிவித்து தனது புகைப்படத்தையும் மகிழ்வுடன் அனுப்பி வைத்தார். உலகெங்கும் உள்ள ஆன்மீகவாதிகளுக்கு கடவுளை மூளை இயல் விஞ்ஞான அடிப்படையில் நிருபித்து பெரும் நம்பிக்கையை ஊட்டி வருபவர் அவர். மதம் கடந்த ஆன்மீகம் என்ற நிலையில் விஞ்ஞானம் கடவுளை அறிய முயன்று ஒரு சிறிது வெற்றியும் பெற்று ஆதாரங்களையும் அள்ளி வீசுகிறது. அவருக்கு ஞான ஆலயம் வாசகர்கள் சார்பில் நன்றி தெரிவித்து இந்தக் கட்டுரையை ஆங்கிலப் புத்தாண்டின் சிறப்புக் கட்டுரையாக அளிக்கிறோம்

 

ஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங்கள்!

ச.நாகராஜன்

 

விஞ்ஞானி ஆண்ட்ரூ நியூபெர்க்

உலகின் பிரபல மூளை இயல் நிபுணரும் விஞ்ஞானியுமான ஆண்ட்ரூ நியூபெர்க் தனது அதிசய ஆராய்ச்சிகளின் மூலம் ஆன்மீகவாதிகளுக்கு ஒரு அற்புதமான செய்தியை அளித்துள்ளார். இறை நினைவு ஏற்படும்போதெல்லாம் மூளையில் அதிசயத்தக்க    விதத்தில் மாறுதல்கள் ஏற்பட்டு பல நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது தான் அது!

 

ஆண்ட்ரூ நியூபெர்க் பல பிரமிக்க வைக்கும் புத்தகங்களைப் படைத்தவர். 150க்கும் மேற்பட்ட அரிய ஆய்வுக் கட்டுரைகளை அறிஞர்கள் வியக்கும்படி சமர்ப்பித்தவர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ரேடியாலஜி பிரிவில் அசோசியேட் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் ஆன்மீகம் மற்றும் மன மையத்தின் இயக்குநராகவும் இருக்கிறார்.

 

புதிய அறிவியல் உத்தி தரும் மூளையின் படங்கள்

  

ஆன்மீக அனுபவங்களால் பல்வேறு நிலைகளை அடையும் ஏராளமானோரை அவர் தனது ஆய்வுக்கு உட்படுத்தினார். இதற்காக அவர் கையாளும் தொழில்நுட்ப உத்தியின் பெயர் சிங்கிள் போடான் எமிஷன் கம்ப்யூடட் டோமோகிராபி (single photon emission computed tomography). இந்த ஆய்வுக்கு உட்படுவோரின் உடல்களில் காமா கதிர்களை வெளிப்படுத்தும் ஒரு வித கெமிக்கல், ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்த கதிர்கள் தரும் தகவல்களை ஒரு கணினி சேகரிக்கிறது. அதன் மூலம் அவர்களின் மூளையில் ரத்தம் பாயும் பகுதிகள் பற்றிய படம் சித்தரிக்கப்படுகிறது. எந்தப் பகுதியில் அதிகமாக ரத்தம் பாய்கிறதோ அங்கு மூளை அதிகமாகச் செயல்படுகிறது என்று அர்த்தம்.

 

ஆறு பகுதிகளில் ஏற்படும் அதிசய மாறுதல்கள்

செயிண்ட் பிரான்ஸிஸ் ஆஃப் அஸிஸியின்(St Franscis of Assisi) விதிமுறைகளைப் பின்பற்றுவோரை பிரான்ஸிஸ்கன் நன் என்று அழைப்பர். அவர்களையும் திபெத்திய யோகிகளையும் தனது ஆய்வுக்கு வருமாறு ஆண்ட்ரூ அழைத்தார். மகிழ்வுடன் அவர்களும் இசைந்தனர். சுமார் 15 ஆண்டுகாலம் பென்சில்வேனியாவில் இடையறாது தன் குழுவினருடன் ஆய்வை நடத்தி வந்த ஆண்ட்ரூ மூளையின் முக்கியமான ஆறு பகுதிகளில் இறை உணர்வால் பெரும் மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்டறிந்தார்.

 

அந்த ஆறு முக்கிய பகுதிகள் : 1) முன் மடல் (frontal lobe) 2)லிம்பிக் அமைப்பு (limbic system)3)ஆன்டீரியர் சிங்குலேட் (anterior cingulated) 4) அமிக்தலா (amygdale) 5) தாலமஸ்(thalamus) 6) சுவர் மடல்(parietal lobe)

தியானம் அல்லது ஆன்மீக உணர்வுகள் மேம்படும்போது மடல்கள் ஒரு வலிமை வாய்ந்த உணர்வை அனுபவிக்க வைக்கின்றன. ரத்த ஓட்டத்தினால் முன் மடல் மேலே செல்வதற்குப் பதிலாக கீழே செல்கிறது! இதன் மூலம் அவர்கள் கூறும் அல்லது அனுபவிக்கும் அற்புத அனுபவங்கள் உண்மையே என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது.

 

இறை நினைவு அனைத்து மதத்தினருக்கும் ஏற்றம் தரும்

ஆச்சரியமான விஷயம் என்னவெனில் இறைவனைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கும் போதே மூளையில் வெவ்வேறு சர்க்யூட்டுகள் உருவாகின்றன. ஹிந்து, புத்த, யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் மதத்தில் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இது ஏற்படுகிறது.

 

அறிவியல் உணர்த்தும் ஐந்து பேருண்மைகள்

 

பிரான்ஸிஸ்கன் நன்கள் மற்றும் புத்த குருமார்களை நான்கு வருட காலம் சிறப்பாக ஆய்வுக்குட்படுத்திய பின் ஆண்ட்ரூ பின் வரும் உண்மைகளைக் கண்டறிந்தார்.

1)   மூளையின் ஒவ்வொரு பகுதியும் கடவுள் பற்றிய வெவ்வேறு கருத்தை அமைத்துக் கொள்கிறது. அதிகம் தியானிக்கத் தியானிக்க கடவுள் இன்னும் அதிக மர்ம புருஷராகிறார்!

(ஒப்பீடு:-சொல் பதம் கடந்த தொல்லோன் போற்றி-மாணிக்கவாசகர் திருவண்டப்பகுதியில்)

2)   கடவுள் பற்றிய அமைப்பை ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு விதமாக அமைத்துக் கொள்வதோடு, கடவுளுக்கு வெவ்வேறு குணநலன்களையும், மதிப்பையும், அர்த்தத்தையும் கற்பித்துக் கொள்கிறான்.

(ஒப்பீடு:-அவரவர் தம தமது அறிவு அறி வகைவகை

அவரவர் இறையவர் என அடி உடையவர்கள்

அவரவர் இறையவர் குறைவிலர் – நம்மாழ்வார்)

3)   மத நம்பிக்கையே இல்லாவிட்டாலும் கூட ஆன்மீகப் பயிற்சிகளை ஒருவர் மேற்கொள்ளும்போது உடல் நலமும் உள்ளநலமும் மேம்படுகிறது.(ஒப்பீடு:-வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே – வள்ளலார்)

4)   நீண்ட கால தியானப் பயிற்சி மூளையின் அமைப்பையே முற்றிலுமாக மாற்றி விடுகிறது!இது மூட் எனப்படும் மனநிலையை சீராக ஒரே மாதிரி இருக்கும்படி செய்கிறது.ஆன்ம அறிவை ஏற்படுத்தி புலன் உணர்வுகளை நன்கு உருவாக்குகிறது.

(ஒப்பீடு: அடிமுடியும் நடுவும் அற்ற பரவெளிமேல் கொண்டால்

அத்வைத ஆனந்த சித்தம் உண்டாம்: நமது குடி முழுதும் பிழைக்கும்; ஒரு குறையும் இலை – தாயுமானவர்)

5)   சாந்தி, சமூகம் பற்றிய விழிப்புணர்வு. தயை ஆகியவற்றிற்கு ஆதாரமான  குறிப்பிட்ட மூளை சர்க்யூட்டை அதற்குரிய பகுதியில் வலிமைப்படுத்துகிறது. (தாயிற் சிறந்த தயா ஆன     தத்துவனே- மாணிக்கவாசகர் – சிவ புராணத்தில்)

கடவுளை இடைவிடாது நினைக்க நினைக்க அவர் உங்கள் மூளையை நிச்சயம் மாற்றிக்கொண்டே வருகிறார்.

இப்படி ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தில் நம்பிக்கை கொண்டவர்களே அதிக நோபல் பரிசுகளை சமாதானத்திற்காகப் பெற்றதை ஆண்ட்ரூ சுட்டிக் காட்டுகிறார்.மார்ட்டின் லூதர் கிங்.,பிஷப் டெஸ்மாண்ட் டுடு. தலாய் லாமா, மதர் தெரஸா ஆகியோர் உலக அமைதிக்காகப் பாடுபட்டதற்கு அவர்கள் உலகின் பால் கொண்டுள்ள அதீத தயை உணர்ச்சியே ஆகும்!

 

 

நியூரோபிளாஸ்டிசிடி

நியூரான்கள் ஒரு கட்டத்தில் கற்பதை நிறுத்தி விடுகின்றன என்று மூளை இயல் நிபுணர்கள் இது வரை கருதி வந்தனர். ஆனால் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான எரிக் காண்டல்,” மூளை நியூரான்கள் கற்பதை ஒருபோதும் நிறுத்துவதில்லை.உள்ளும் புறமும் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ப நரம்பு செல்கள் மாறுகின்றன.இது வயதானாலும் தொடர்கிறது” என்று கூறுகிறார். இப்படிப் பல கண்டுபிடிப்புகளை இன்று நமக்குத் தரும் புதிய துறையின் பெயர் நியூரோபிளாஸ்டிசிடி!

 

மூன்று ‘சி’க்களும் இரண்டு படங்களும்

ஆன்மீகவாதிகளுக்கு மூன்று ‘C’க்களில் அதிக திறன் ஏற்படுகிறது. Cognition. Communication creativity ஆகிய அறிவுத் திறன், தகவல் தொடர்புத் திறன், படைப்பாற்றல் திறன் மூன்றும் அபரிமிதமாக செழிக்கிறது.இறுதியாக ஆன்மாவை அறியச் செய்கிறது!

ஒழுங்கான முறையான விரதம், தியானம், பிரார்த்தனை, வழிபாடு, இதர மதச் சடங்குகள் ஆகியவற்றை மேற்கொள்ளும் போது இரண்டு விதமான படங்களை ஏற்படுத்துவதை மூளை காண்பிக்கிறது.

 

1)முதலாவது மேப் ஆழ்மனம் பற்றியது. அன்றாட உலகில் போட்டிக்கு ஈடு கொடுத்து உயிர் வாழ்ந்து வாழ்க்கையை நடத்துவது.உடலை ஆரோக்கியத்துடன் தக்க வைத்துக் கொள்வது ஆகியவற்றை காண்பிக்கிறது இந்தப் படம்!

2) இரண்டாவது மேப் பிரபஞ்சம் பற்றிய நமது பிரக்ஞையைச் சித்தரிக்கிறது.புலன்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் அப்பாற்பட்டது இது!

 

 

ஆன்மீகப் பயிற்சி தரும் அளப்பரிய நன்மைகள்

 

ஆகவே 1)உலகில் நிலை பெற்றிருக்கும் கடவுள். 2)அவரைப் பற்றிய ஆழ்மன நிலையில் நமது அறிவும் அனுபவமும், 3)வெளிப்படையாக அவரைப் பற்றிய நமது கருத்தினால் முன்மடல், பக்கமடல்,சுவர் மடல் ஆகிய மூளைப் பகுதிகளில் நாம் அமைத்துக் கொள்ளும் அமைப்பு ஆகிய மூன்று நிலைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இதற்கு பிரார்த்தனை உள்ளிட்ட அனைத்தும் நமக்கு உதவி செய்து  வியக்கவைக்கும் சாந்தியை நமக்கு அளிக்கிறது.

தயை என்பது நமக்கு உயரிய ஆன்மீக அனுபவத்தைத் தருகிறது. இந்த தயை (பிற உயிர்களிடத்து இரக்கம்) உச்சநிலையை எட்டுவதற்கும் நமது ஆன்மீகப் பயிற்சியே அடித்தளமாக அமைகிறது.

 

மூளையை மாற்றும் இறைவன்

இவற்றையெல்லாம் தெள்ளத் தெளிவாக கடவுள் உங்கள் மூளையை எப்படி மாற்றுகிறார் (How God Changes Your Brain)  என்ற பல லட்சம் பிரதிகள் விற்பனையான தனது புத்தகத்தில் மார்க் ராபர்ட் வால்ட்மேன் என்பவருடன் இணைந்து எழுதியுள்ளார் ஆண்ட்ரூ!

இந்த அறிவியல் தரும் அற்புத ஆராய்ச்சியின் முடிவை நமது அருளாளர்கள் மிகத் தெளிவாக சில வார்த்தைகளிலேயே சொல்லியிருப்பது நம்மை பிரமிக்க வைக்கும் இன்னொரு விஷயம்;

நினைப்பவர் மனங் கோயிலாக் கொண்டவன் (அப்பர் –பனைக்கை என்று தொடங்கும் பாடலில்)

மனத்துள் நின்ற கருத்தானை – (அப்பர் வாயானை என்று தொடங்கும் பாடலில்)

உளன் கண்டாய் நன்னெஞ்சே! உத்தமன் என்றும்

உளன் கண்டாய்; உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் –(பொய்கை ஆழ்வார் முதல் திருவந்தாதியில்)

என்ற வார்த்தைகளின் ஆழமான பொருள் அறிவியல் ஆராய்ச்சியால் அல்லவா இப்போது விளங்குகிறது.

அவன் அருளாலே அவன் தாள் வணங்குவோம்!!

**************

படங்களும் விளக்கங்களும்

 

திபெத்திய யோகிகள் தியானம் செய்யும் போது அதன் விளைவுகளை மூளையின் இந்தப் படங்களில் பார்க்கலாம்!

Frontal lobe (முன்மடல்)

சிங்கிள் போடான் எமிஷன் கம்ப்யூடட் டோமோகிராபி (SPECT) என்ற தொழில்நுட்ப உத்தி மூலமாக யோகிகள் தியானம் செய்யும் போது மூளைப்பகுதியான ஃப்ரண்டல் லோப் எனப்படும் முன்மடலில் ஏற்படும் மாற்றங்கள் கண்டறியப்பட்டது. இரத்த ஓட்டம் அதிகரிப்பது அதிக செயலாற்றலை அந்தப் பகுதியில் காண்பிக்கிறது. இடது பக்கப் படம் மூளை சாதாரண நிலையையும் வலது பக்கப் படம் மூளை தியானத்தில் இருக்கும் நிலையையும் காண்பிக்கிறது. இதில் ஒருமுனைப்படுத்தும் பகுதிகள் அதிகமாக ஒளிர்வதைப் பார்க்கலாம்.

 

Parietal Lobes (சுவர் மடல்)

சுவர்மடலிலோ குறைந்த செயல்பாடே காண்பிக்கப்படுகிறது. இந்தப் பகுதி தான் இடம் மற்றும் காலம் பற்றிய உணர்வை நமக்குத் தெரிவிக்கிறது. இந்தப் பகுதியை முற்றிலுமாக அடைத்து விட்டோமானால் இடம் மற்றும் காலம் கடந்த நிலையை எய்தி விடலாம்.இது தியானத்தின் மூலமாக அடையப் படுகிறது. இது பற்றிய இன்னும் அதிகமான நுட்பமான படங்களும் ஏராளமாக எடுக்கப்பட்டுள்ளன. அவை தியானம் எல்லையற்ற பிரபஞ்சத்தில் லயமாகும் நிலையைத் தெரிவிக்கின்றன!

This article is written by my brother S Nagarajan, Engineer, Bangalore

contact: swami_48@yahoo.com

 

Leave a comment

Leave a comment