Compiled by S Nagarajan
Post No: 1649; Dated: 14 February 2015
by ச.நாகராஜன்
நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:.
उपवासाद्वरंभिक्षेतिन्यायः
upavasadvarambhikseti nyayah
உபவாஸாத்வரம்பிக்ஷேதி நியாயம்
இது ஆபத்து கால தர்மத்தைக் குறிக்கிறது. உயிர் காத்துக் கொள்ள வேண்டிய நேரத்தில் உபவாசம் இருக்க முடியுமா? முதலில் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை, உபவாசத்தை விடு என்று சொல்லும் ஆபத்து கால தர்ம நியாயம் இது.
தன்னைக் கொல்ல வந்த பசுவையும் கொல்லலாம் என்பது ஆபத்து கால தர்மம்.அது போல ஆபத்துக் கால தர்மங்களில் ஒன்றாக, வீராப்புடன் பட்டினி கிடக்காமல் உயிரைக் காத்துக் கொள்; அதற்காக பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை என்று சொல்லும் தர்மம் இது. ஆபத்துக் கால விதிகளை அறிந்து கொள்வது இன்றியமையாதது.அந்த வகையில் இந்த நியாயம் மிகவும் முக்கியமானது.
उभयतः पाशरज्जुः न्यायः
ubhayata pasarajjuh nyayah
உபயத: பாசரஜ்ஜு: நியாயம்
இரு பக்கமும் வலைகள். இந்தப் பக்கமும் போக முடியாது; அந்தப் பக்கமும் போக முடியாது, என்ன செய்வது என்கிற நியாயம் இது.
எந்தப் பக்கம் போனாலும் வலையில் அகப்படுவது உறுதி. எந்த நிலையை மேற்கொண்டாலும் அபாயம் நிச்சயம் என்று இருக்கும் நிலையைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது!
ऊषरवृष्टिन्यायः
usharavrishti nyayah
உஷரவ்ருஷ்டி நியாயம்
வ்ருஷ்டி – மழை
வறண்ட தரிசு நிலத்தில் எவ்வளவு தான் மழை பெய்தாலும் விதை விதைத்தால் விளையாது. அது போல எவ்வளவு தான் முயன்றாலும் பலன் தராத ஒரு விஷயத்தை ஒருவர் மேற்கொண்டால் அது பலன் தராது. அப்போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.
एकवृन्तगतफलद्वयन्यायः
ekavrntagataphaladvaya nyayah
ஏகவ்ருந்தகதபலத்வய நியாயம்
ஏகம் – ஒன்று த்வயம் – இரண்டு
ஒரு கிளையில் உள்ள ஒரே காம்பில் இரு பழங்கள் என்னும் நியாயம் இது.
ஒரே காம்பில் சில சமயம் இரு பழங்கள் பழுத்துத் தொங்கும். இதை இலக்கணத்தில் எடுத்துக் கொண்டு ஒரு நியாயத்தைக் காட்டுகிறது இந்த நியாயம். ஒரே ஒரு வார்த்தை தான் ஆனால் அது இரு பொருள் படும்படி பயன்படுத்தப்பட்டால் இந்த நியாயம் அங்கு பொருந்தும்
.
एकमनुसंधित्सतोऽपरं प्रच्यवते न्यायः
ekamanusandhitsato aparam pracyavate nyayah
ஏகமனுசந்தித்ஸதோ அபரம் ப்ரச்யவதே நியாயம்
தர்க்கத்தில் வரும் சூத்திரம் இது. ஒரு வாதத்தில் ஒரு பகுதி அடிப்பட்டுப் போகிறது, ஆனால் அதே சமயம் நிலைத்து நிற்கிறது. ஆனால் அதே சமயம் தர்க்கரீதியாக ஒன்றுக்கொன்று முரண்படும் ஏராளமான விஷயங்கள் சேர எதையும் சமாளிக்க முடியாத நிலை ஏற்படும் போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.
******************





You must be logged in to post a comment.