Article No. 2042
Written by London swaminathan
Swami_48@yahoo.com
Date : 4 August 2015
Time uploaded in London : –13-04
கனவுகள் பற்றி எவ்வளவோ அதிசயச் செய்திகள் உள்ளன. கணித மேதை ராமானுஜம் கனவில் கடவுளிடமிருந்து பெற்ற கணித விஷயங்கள் முதல் பென்ஸீன் அமைப்பை கனவில் கண்ட விஞ்ஞானிகள் வரை எழுதிவிட்டேன். இப்பொழுது கனவில் கதைகளையும் கவிதைகளையும் பெற்ற ஓரிரு சம்பவங்களைப் பார்ப்போம்.
திருமதி அமோஸ் பிஞ்சொட் என்பவர் ஒரு கவிஞர். ஒரு நாள் அவருக்கு கனவில் ஒரு கவிதை வந்தது. அது பலதார திருமணம் பற்றிய கவிதை. கனவில் கவிதை வந்தவுடன் பக்கத்தில் மேஜை மீதிருந்த பென்சிலையும் பேப்பரையும் எடுத்து அவசர அவசரமாகக் கிறுக்கி வைத்தார். காலையில் எழுந்தபோது மறந்தே போய்விட்டார். பின்னர், மேஜை மீது காகிதக் கிறுக்கலைப் பார்த்தபோது அதை எடுத்துப் படித்தார். அசந்தே போனார்.
அவர் எழுதிய கவிதை
ஹோகமஸ் ஹைகமஸ்
மென் ஆர் பாலிகமஸ்
ஹைகமஸ் ஹோகமஸ்
விமன் ஆர் மானொகமஸ்
பாலிகமஸ்=பல மனைவியரை மனத்தல்
மானோகமஸ் = ஒருவரை மட்டும் மணத்தல்
“Hogamus Higamus
Men are Polygamous
Higamus Hogamus
Women Monogamous.
(நான் நினைவில் கண்டவை: மறுநாள் காலையில் எழுத வேண்டிய கட்டுரைத் தலைப்பு பற்றி எண்ணியவாறே நான் தூங்குவேன். இரவில் முழிப்பு வரும்போது திடீரென்று சில புதிய ஐடியாக்கள்- அதாவது அந்தக் கட்டுரைக்குத் தொடர்புடைய விஷயங்கள் – மனதில் தோன்றும். உடனே படுக்கைக்கு அருகில் வைத்திருக்கும் சிட்டையில் எழுதிவைப்பேன். காலையில் அவைகளைத் தொகுத்து எழுதுவேன். ஆனால் இதுவரை கனவில் எதுவும் கிடைக்கவில்லை!!)
மேலை உலகத்தில் மிகப்பெரிய உளவியல் நிபுணர்கள் என்று கருதப்படும் பிராய்ட், யங் ஆகியோர் கனவுகளைப் பற்றி சொல்லும் கொள்கைகள் சரியென்று தோன்றவில்லை. அடி மனதில் புதைந்து கிடக்கும் நிறைவேறாத ஆசைகள்தான் இரவில் கனவுகளாக பரிணமிப்பதாக அவர்கள் கூறுவர். ஆனால், புத்தர், மஹாவீரர் ஆகியோரின் தாய்மார்கள் கண்ட சுபக் கனவுகள் பற்றி அவர்களுடைய சாத்திரங்கள் சொல்லுகின்றன. இந்து மத நூல்களிலும் ரிக் வேத காலம் முதல் கனவுகளின் பொருள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.
கனவுகளின் விளக்கம் என்ற நூல் சம்ஸ்கிருததில் உள்ளது. இது வியாழ பகவான் எழுதியது. இது தவிர, பொன்னவன் எழுதிய கனா நூல் ஒன்றுளது. தமிழ் என்சைக்ளோபீடியாவான சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணியில் ஏழு பக்கங்களுக்கு கனவுகள் பற்றி விளக்கங்கள் உள்ளன.
கனவில் வந்த கதை
ராபர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன் என்ற கதாசிரியரை, ஆங்கிலம் படித்த எல்லோருக்கும் தெரியும். அவர் எழுதிய ‘ட்ரெஷர் ஐலண்ட்’, ‘கிட்நாப்ட்’ – முதலிய கதைகள் மிகவும் பிரசித்தமானவை. ஒரு நாள் அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது பயத்தில் ஓலமிட்டார். அவருக்கு ஏதோ பயங்கரக் கனவு எற்ற்பட்டிருக்கிறது என்று எண்ணி, அவருடைய மனைவி, லூயிஸைத் தட்டி எழுப்பினார். அவருக்கு ஒரே கோபம்; ஏன் என்னை எழுப்பினாய்? அருமையான ஒரு பயங்கரக் கதையைப் பார்த்துக்கொண்டிருந்தேன் – என்று சொல்லி திட்டினார். பின்னர் இதை “டாக்டர் ஜெகில், மிஸ்டர் ஹைட்” என்ற கதையாக எழுதினார்.
லிங்கன் கண்ட கனவு
அமெரிக்காவின் 16ஆவது ஜனாதிபதியான ஆப்ரஹாம் லிங்கன் ஒரு கனவு கண்டது பற்றி அவரே எழுதிவைத்து இருக்கிறார்: “நான் ஒரு பெரிய சபையில் பலரைக் கடந்து சென்று கொண்டிருந்தேன். யாரோ ஒருவர் என்னைப் பார்த்து “இவனைப் பார்த்தால் சாதாரண ஆசாமி போலத் தோன்றுகிறது” – என்றான். நான் உடனே அவனைப் பார்த்து சொன்னேன்: “நண்பரே! கடவுளுக்கு சாதாரண ஆசாமிகளைத்தான் அதிகம் பிடிக்கும். அதனால்தான் அவர், சாதாராண மனிதர்களை அதிகம் படைத்திருக்கிறார்.”
கனவில் வந்த எலிகள்
ஒரு ஜெர்மன் இளவரசனுக்கு எலிக் கனவு வந்தது. அந்தக் கனவில் மூன்று எலிகள் வந்தன. ஒன்று கொழுத்த எலி; இன்னொன்று நலிந்து மெலிந்து போன எலி; மூன்றாவதோ குருட்டு எலி. அவருக்கு இந்தக் கனவின் பொருளை அறிய ஆசை. உடனே எல்லோரும் “ஜிப்ஸி இன ஆரூடக்காரியிடம் கேளுங்கள்” – என்று சொன்னார்கள். அவரும் ஜிப்ஸி குறத்தியிடம் குறி கேட்டார். அந்தப் பெண் சொன்னாள்: “கொழுத்த எலி இருக்கிறதே – அதுதான் உன்னுடைய பிரதம மந்திரி, மெலிந்த எலி இருக்கிறதே – அது உன் நாட்டு மக்கள்; மூன்றாவது குருட்டு எலி யார் தெரியுமா? அது நீயே தான்!!
செவ்விந்தியர் கனவு
ஒரு 500 ஆண்டுகளுக்கு முன் வரை உலகிலேயே பணக்கார நாடு இந்தியாதான். இதனால் உலகம் முழுதுமுள்ள பேராசைக்காரர்கள் எல்லாம் இந்தியாவை நோக்கி 2000 ஆண்டுகளாகப் படை எடுத்து வந்தனர். இப்படிப் புறப்பட்ட ஒரு ஆள்தான் கொலம்பஸ். அவர் கண்டுபிடித்ததோ மேற்கிந்தியத் தீவுகள். அதை இந்தியா என்று நினைத்து அனைவரையும் இந்தியர் என்று பெயரிட்டார். இப்படிப்பட்ட அமெரிக்க இந்தியர்களுக்குப் பொறுப்பாக சர் வில்லியம் ஜான்சன் என்பவரை பிரிட்டன் நியமித்தது. அப்பொழுது அமெரிக்காவின் ஒரு பகுதி அவர்களிடம் இருந்தது.
சர் வில்லியம் நல்ல ஜரிகை வேலைபாடுமிக்க உடைகளை இங்கிலாந்திலிருந்து தரவழைத்திருந்தார். இந்தியாவில் பல பழங்குடி மக்கள் இருப்பது போலவே, இந்தியாவைவிடப் பெரிய நாடான அமெரிக்காவில், நிறைய பழங்குடி இன மக்கள் இருக்கின்றனர். அதில் ஒரு இனம் மொஹாக் இனப் பழங்குடியினர். அவர்களின் தலைவன் ஹென் ட் ரிக்.
வில்லியமைச் சந்திக்கவந்தபோது அவரும் இந்த வெளிநாட்டு உடைகளைப் பார்த்து புகழ்ந்துவிட்டுச் சென்றார். சில நாட்களுக்குப் பின் திரும்பிவந்து தான் கண்ட கனவை வில்லியமிடம் கூறினார். அந்தக் கனவில், விலையுயர்ந்த வெளி நாட்டு உடைகளில் ஒன்றை வில்லியம் தனக்குக் கொடுப்பது போல கனவு கண்டதாகச் சொன்னார். உடனே சர் வில்லியமும் குறிப்பறிந்து ஒழுகினார். ஒரு உடையை அந்த செவ்விந்தியத் தலைவரிடம் கொடுத்தார். அவரும் மகிழ்ச்சியுடன் விடை பெற்றார்.
சில காலம் கழிந்தது. ஹென் ட் ரிக் மீண்டும் வில்லியமைக் காண வந்தார். இப்பொழுது வில்லியம், தான் கண்ட ஒரு கனவை ஹென் ட் ரிக்கிடம் சொன்னார். மோஹாக் நதிக்கரையில் விலை மதிக்கமுடியாத 5000 ஏக்கர் நிலப்பரப்பை பழங்குடி இனம் தனக்குக் கொடுப்பதாகக் கனவு கண்டதாகச் சொன்னார். உடனே அந்த இனத்தின் தலைவன் கொஞ்சமும் தயங்காமல், 5000 ஏக்கர் நிலப்பரப்பை வெள்ளைக்காரரிடம் கொடுத்துவிட்டார்.
போகும்போது அவர் சொன்னார்: வில்லியம், இனி உங்களைக் கனவில் காணும் ஆசையே போய்விட்டது. ஏனெனில் உங்கள் கனவெல்லாம் கொஞ்சம் ஜீரணிக்கக் கடினமானவை”.
(வெள்ளைக்காரனிடம் விலையுயர்ந்த ஆடையை வாங்கியதால் 5000 ஏக்கர் விலையுயர்ந்த நிலப்பரப்பை இழந்தது மோஹாக் இனம்! வில்லியம் கண்ட கனவு, உண்மைக் கனவோ பொய்க் கனவோ, யாம் அறியோம் பராபரமே!)
My previous Research Articles on Dreams:
Role of Dreams in Tamil Saivite Literature (posted on July 4, 2013)
Do our Dreams have Meaning? (Posted on December 29, 2011)
God’s Note Book (posted on March 16, 2014)
Strange Dreams, posted on 27 July 2015Inauspicious Dreams: Dreams in Vedas and Upanishads, Posted on 28th July 2015
Vedic Echo in Sumerian and Egyptian Concept of Dreams, Posted 31 July 2015
–சுபம்—






You must be logged in to post a comment.