Written by S NAGARAJAN
Post No.2261
Date: 21 October 2015
Time uploaded in London: 7-50 AM
Thanks for the pictures.
Don’t use pictures. Don’t reblog for at least a week.
குறள் தெளிவு
வள்ளுவர் அறிவுறுத்தும் விரைந்து செய்ய வேண்டிய மூன்று செயல்கள்!
ச.நாகராஜன்
மூன்றை விரைந்து செய்!
முடிந்த போதெல்லாம் விரைந்து செய்ய வேண்டிய செயல்கள் மூன்று என்கிறார் வள்ளுவர்.
இதற்கு அவர் பயன்படுத்தும் சொல் – ‘ஒல்லும்’
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாயெல்லாஞ் செயல் (குறள் 33)
தர்மத்தை இடைவிடாமல் செய்ய வேண்டும். தன்னால் இயன்ற அளவு செய்ய வேண்டும். செய்யக் கூடிய வழியில் எல்லாம் மனம், மொழி, மெய் ஆகியவற்றால் செய்ய வேண்டும்.
ஒல்லும் வாயெல்லாம் வினை நன்றே ஒல்லாக்கால்
செல்லும் வாய் நோக்கிச் செயல் (குறள் 673)
செய்து முடிக்கக் கூடிய இடத்தில் எல்லாம் ஒரு காரியத்தை உடனே செய்து முடிப்பது நல்லது. அப்படிச் செய்ய ஒரு வேளை முடியவில்லை என்றால் செல்லும் வாய் நோக்கி – ஏற்ற இடம் நோக்கிச் செய்து விடு.
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும் வாய் ஊன்றும் நிலை (குறள் 789)
நட்பிற்குச் சிறந்த நிலை யாது? எனில், மாறுபாடு இல்லாமல் முடிந்த இடமெல்லாம் உதவி செய்து தாங்குகின்ற நிலையாகும்.
தர்மத்தைத் தள்ளிப் போடாதே! உடல் அழியும் காலத்தில் அழியாமல் உடன் வந்து காக்கும் துணை அறம் ஒன்றே. பொன்றுங்கால் பொன்றாத் துணை அறம். ஆகவே மெல்லச் செய்து கொள்ளலாம் (அன்றறிவாம் என்னாது) என்றில்லாமல் உடனே செய்!
எந்த ஒரு காரியத்தையும் தள்ளிப் போடாதே!
நட்புக்காக முடிந்த போதெல்லாம் உதவி செய்!
இடைவிடாது செய்ய வேண்டியவை அறவினை புரிதல், வினை முடித்தல், நட்பைத் தாங்குதல்.
ஒன்றால் இம்மைக்கும் மறுமைக்கும் வழியைக் காட்டினார். அடுத்ததால் இவ்வுலக வாழ்க்கையின் வெற்றிக்கு வழியைக் காட்டினார். மூன்றாவதன் மூலம் நமக்கு என்றும் இருக்கும் துணையை உறுதி செய்து பலன் பன் மடங்கு வரும் என்பதை தெரிவிக்கிறார். ஏனெனில் பயன் தெரிவார் தினைத் துணை உதவியையும் பனைத் துணையாக் கொள்வார் அல்லவா!
வள்ளுவரின் சொற்களின் ஆழம் லேசுப்பட்டதா, என்ன? தோண்டத் தோண்ட மணற் கேணி போல அர்த்தம் ஊறிக் கொண்டே இருக்கும்!


You must be logged in to post a comment.