Radio Talk written by S NAGARAJAN
Date: 7 November 2015
Post No:2307
Time uploaded in London :– 6-03 AM
(Thanks for the pictures)
DON’T REBLOG IT ! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
By ச.நாகராஜன்
சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்
சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்
((Part 1 was published yesterday))
இயற்கை படைத்த அரிய உயிரினத்தில் ஒன்றான தேனீக்கள் அழிந்து வருகின்றன என்பது வருத்தமூட்டும் ஒரு உண்மையான செய்தி! இதற்குக் காரணம் மனிதர்களாகிய நமது அஜாக்கிரதையான செயல் தான் என்பது இன்னும் அதிகத் துன்பமூட்டும் உண்மையாகிறது.
அன்றாடம் பேப்பர் ‘கப்’களில் (Paper Cups) அதாவது பேப்பரினால் செய்யப்பட்ட கோப்பைகளில் காப்பியையும் டீயையும் ஏந்திக் குடித்து அவற்றை வீசி எறிகிறோம். இந்த கப்களில் உள்ள காப்பி மற்றும் டீயின் எஞ்சிய இனிப்பை அருந்த வரும் தேனீக்கள் மீண்டும் பறக்க முடியாமல் இறந்து விடுகின்றன.
ஆலைகள் பெருகி வரும் இந்த நாட்களில் இயற்கையான மரங்களும் மரம் சார்ந்த சூழ்நிலையும் இல்லாததால் ஆங்காங்கே தூக்கி எறியப்படும் பேப்பர் கப்களை நாட வேண்டிய கட்டாயத்திற்கு தேனீக்கள் தள்ளப்படுகின்றன.
தமிழ்நாட்டில் மட்டும் காப்பி மற்றும் டீயை விற்கும் விற்பனை நிலையங்களில் தூக்கி எறியப்படும் பேப்பர் கப்களின் எண்ணிக்கை குறைந்தபட்சமாக ஒரு நாளுக்கு 1225 என்ற எண்ணிக்கையில் உள்ளது. இவற்றில் அன்றாடம் சுமார் 680 தேனீக்கள் சராசரியாக இறந்து கிடப்பதை ஆய்வாளர்கள் அண்மையில் கண்டறிந்தனர்.
இயற்கையான சூழ்நிலையில் மலர்களிலிருந்து தேனை உறிஞ்சி அவற்றை சேகரிக்கும் தேனீக்கள், இப்போது மலர்கள் அடங்கிய தோட்டங்கள் இல்லாத சூழ்நிலையில் தமது உணவுக்காக கழிவாகக் கிடக்கும் கப்களுக்கு வருகின்றன. இப்படி தேனீக்கள் இறப்பதற்கு காலனி கொலாப்ஸ் டிசீஸ் (Colony collapse disease) என்று பெயர்.இந்த தேனீக்களை அழிக்கும் நோய் பல நாடுகளிலும் பரவி தேனீக்களின் இனத்தையே அழித்து வருவது வருத்தமூட்டும் செய்தி.
இத்துடன் மட்டுமின்றி தகவல் தொழில்நுட்பத்தால் ஏற்படுத்தப்பட்ட தகவல் தொலைத் தொடர்புக்கான கோபுரங்களிலிருந்து வரும் மின் அலைகளாலும் தேனீக்கள் அல்லல்பட்டு அழிகின்றன.
சுறுசுறுப்புக்கே உதாரணமாக விளங்கும் அற்புத தேனீக்களை அழிக்க நாம் ஒரு போதும் காரணமாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்துடன் இனி பேப்பர் கோப்பைகளில் காப்பி மற்றும் டீ அருந்துவதில்லை என்ற நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம்; அனைவருக்கும் இந்தச் செய்தியைச் சொல்லி அவர்களையும் பேப்பர் கோப்பைகளின் பயன்பாட்டைக் கைவிடச் செய்வோம்!
***************



You must be logged in to post a comment.