
Compiled by London swaminathan
Date: 22 November 2015
Post No. 2354
Time uploaded in London :– காலை 9 -49 மணி
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
பழைய கால நகைச் சுவை நூலான — பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை.
நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை
தர்மாபுரம் என்ற ஊரில், அணித, கணித நிகா கணித, மகா கணித, தர்மராஜ ஜோஸியர் என்ற பிராமணர் ஒருவர் வயல்களைச் சுற்றிப்பார்த்து வருகையில் புதுக் காலணா ஒன்று கீழே கிடந்ததை எடுத்துப் பார்க்கையில் தற்செயலாய் அவ்விடத்தில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த ஒரு இடைப்பையன், “சாமி அது என்னெ”வென்று கேட்டான்
தர்மராஜ ஜோஸியர்: “அடே அது பவுன்”.
இடைப்பையன்: சாமி, எங்கே பார்ப்போம். காசை எனக்குக் கொடுங்கள். நல்ல ஆடு ஒன்று தருகிறேன் என்று சொல்லி காசைப் பெற்றுக்கொண்டு ஒரு ஆட்டைக் கொடுத்துவிட்டு தன் போக்காக சந்தோஷமாய் அக்காசை திருப்பித்திருப்பிப் பார்த்துக்கொண்டே போய்ச் சேர்ந்தான்.
ஆட்டைப் பெற்றுக்கொண்ட பிராமணன் அதை வெகு ஆதரவாக வைத்துக் காப்பாற்றினான். அடுத்தவீட்டு
அச்சுதராமையன்: – “ஓய் ஜோஸியரே! ஏதுகாணும் பிராமணன் ஆடு வாங்கி வளர்க்கிறீரே?”
ஜோஸியர்: போங்காணும், போம், போம். அந்த ஆடு சாமான்யமான ஆடு என்று நினைத்தீரா? அது மிருகண்டு மகரிஷி யாகம் செய்தபின் உற்பவித்த ஆடு. நேற்று என் கனவில் தோன்றி இன்ன இடத்தில் ஆடு ஒன்று நிற்கிறது. அதைப்பிடித்துக் கொண்டுபோய் ஒரு வருஷம் வளர்த்தால் சொர்ண (தங்க) புழுக்கையாய்ப் போடும் என்று சொன்னதின் பேரில்தான் இதைப் பிடித்துக் கொண்டுவந்து நான் வளர்த்து வருகிறேன்
அச்சுதராமையன்: ஓய் ஜோஸியரே! என்னகாணும் புளுகுகிறீர்! காலம் கலி காலம், போம்!!
ஜோஸியர்:- சரி சரி போம். உம்ம ஜோலியைப் பார்த்துக்கொண்டு போம். உம்மிடம் புளுகினால் எனக்கு என்ன லாபம்?
பிறகு தினம் ஒவ்வொரு பிராமணனாக வந்து வந்து மேற்கண்ட சங்கதிகளை விசாரித்துச் செல்லுவதைப் பார்த்த அச்சுதராமய்யன் பேராசை என்னும் வலையில் சிக்குண்டு, மறுபடி ஜோஸியரிடம் போய் ஜோஸியரே! என்ன சமாசாரம், ஆட்டின் விஷயமெப்படி யிருக்கிறது?
ஜோஸியர்: ஓய் பிராமணா! ஆட்டின் விஷயம் மாத்திரம் என்னைக் கேட்காதீர். அதுவுமக்கு நம்பிக்கையில்லை. அதுவிஷயமெனக்குத் திருப்திதான். நீர் போரும்
அச்சுதராமய்யன்: ஓய் ஜோஸியரே! இங்கு வாரும் கோபிச்சுகாதேயும். ஒருத்தர் கிட்டேயும் சொல்லாதேயும். அந்த ஆட்டின் விலையென்ன சொல்லும். இப்பொழுதே வேணுமென்றாலும் ரொக்கத்தை எண்ணித் தருகிறேன்.
ஜோஸியர்: இந்தாரும் ஆட்டுச் சமாசாரத்தைப் பேசாதேயும். அது நீர் ஐநூறு கொடுத்தாலும் முடியாது. ஆயிரம் கொடுத்தாலும் முடியாது. நான் எவ்வளவோ கஷ்டப்பட்டுச் சம்பாதித்தேன். அதைத் தவிர வேறு ஏதாவது பேசும்.
அச்சுதராமய்யன்: ஓய் உம்மைக் கெஞ்சுகிறேன் காணும். இந்தாரும் ஓய் ஆயிரம் ரூபாய். இதைப் பெற்றுக்கொண்டு ஆட்டைக்கொடுங்காணும்.

ஜோஸியர்:- “சரி, ஒருவரிடமும் சொல்லாதேயும்”
என்று சொல்லி ஆட்டைக் கொடுத்து ரூபாயை வாங்கிக் கொண்டு இனி இங்கிருக்கக் கூடாதென்று நினைத்துக் காட்டை நோக்கிப் புறப்பட்டார். அப்போது ஒரு வேங்கைப் புலி இவரைத் துரத்திக்கொண்டுவர இவர் ஒரு ஆலமரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டார். புலியோவெனில் அவருக்கு எதிர்ப்புறம் நின்று கொண்டு இவரைப் பிடிக்க இரு புறமும் கைகளை நீட்டியது. உடனே ஜோஸியர் இரண்டு கைகளையும் கெட்டியாகப் பிடிக்க, புலியும் அவரும் பலமுறை மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தனர். அப்போது அவர் ஆடு விற்று மடியில் கட்டிவைத்திருந்த பணம் ஒவ்வொன்றாக விழத் துவங்கியது. அதுசமயம் ஒரு சிப்பாய் குதிரைமேல் சவாரி செய்துகொண்டு வந்தான். அவனைக் கூப்பிட்டு, ஓய் சிப்பாய், இந்தப்புலியைக் கொன்றுவிடு என்று கெஞ்சினார்.
சிப்பாய்: போம் ஓய் பொம்மன். என் மாமனார் பெயர் புலியப்பக் கவுண்டர். ஆகையினால் புலியை நாம் கொல்ல மாட்டோம்- என்று சொல்லி நெருங்கிவர ரூபாய் ஒவ்வொன்றாக விழுந்து கொண்டிருந்ததைப் பார்த்த சிப்பாய்க்கு பேராசை பிடித்துக் கொண்டது. எப்படி எங்கேயிருந்து ரூபாய் நோட்டுகள் விழுகின்றன? என்று சிப்பாய் கேட்டான்.
ஜோஸியர்: இந்த மரத்தில் ஒரு முனி இருக்கிறது. புலியின் கைகளைப் பிடித்துச் சுற்றிக் கொண்டிருந்தால், ரூபாய் நோட்டுகள் விழ ஆரம்பித்துவிடும் என்றார்.
சிப்பாய்: நல்லது ஓய்! கொண்டாரும் கையை என்று சொன்னவுடனே புலியின் கையை சிப்பாயிடம் கொடுத்துவிட்டு, ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு சிப்பாயின் குதிரை மீதேறிக்கொண்டு,சிட்டாக பறந்தார்.
சிப்பாய் கூவினான்: “ என்ன இது? ரூபாய் நோட்டுகள் எதுவும் விழவில்லையே! என்றான். உன்னைக் கொன்று போடுவேன் என்று கத்தினான்.
ஜோஸியர்: போடா போ, புத்தியில்லாத மடையா! எங்கள் சித்தப்பா வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்). நான் புலியைக் கொல்ல மாட்டேன்” என்று சொல்லிவிட்டு குதிரையைச் சிட்டாகப் பறக்கவிட்டார்.

683999257 Bengal Tiger Panthera tigris CAPT Young Male Native to Indian Subcontinent Wildlife Rescue
–இரண்டாவது பகுதியில் ஒரு கிழவியையும் விபசாரியையும் மாப்பிள்ளையையும் ஜோஸியர் ஏமாற்றிய கதைகளைக் காண்போம்.
–தொடரும்…………………………..
You must be logged in to post a comment.