கலியுகத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!! (Post No 2936)

yugas

Written by London swaminathan

 

Date: 2 July 2016

Post No. 2936

Time uploaded in London :–9-56 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

கடைகளுக்குப் போனால் “இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்” என்று பல பொருள்கள் மீது எழுதியிருப்பதைக் காண்கிறோம்.

 

அதே போல “ஐந்து பொருள் வாங்கினால் இவ்வளவு தள்ளுபடி, பத்து வாங்கினால் இவ்வளவு தள்ளுபடி” என்றெல்லாம் விளம்பரங்களைப் படிக்கிறோம்.

 

இதுபோலக் கடவுளும் கூட பக்தர்களுக்கு தள்ளுபடி சலுகைகளை அறிவிக்கிறார். இது விஷ்ணு புராணத்திலுள்ள விஷயம். புராணங்களில் மிகவும் பழமையானதும், புகழ்பெற்றதும் ஆகும். ஆகையால் இந்த செய்திக்கு மதிப்பு அதிகம்.

 

வியாசரிடம் போய்  முனிவர்கள் சந்தேகம் கேட்ட போது அவர் கங்கையில் குளித்துவிட்டு இந்த தகவலைத் தந்தார்.

 

கிருதயுகத்தில் தவம், தானம், பிரம்மசர்யம் முதலிய சிறந்த குணங்களுடன் இருப்பவர்க்கு நீண்டகாலம் தவம் செய்து கிடைக்கக்கூடிய பலன் கலியுகத்தில் சுலபமாகக் கிடைத்துவிடும்.

 

கலியுகத்தில் சங்கமே சக்தி என்பர். ஆதாவது கூட்டாகச் செய்யும் காரியத்துக்குப் பலன் அதிகம். அது மட்டுமல்ல யாக யக்ஞாதிகள் செய்யாமல் வெறும் “சிவ சிவ” அல்லது “ராம ராம” என்று நாம ஜபம் செய்தாலேயே புண்ணியம் சம்பாதித்துவிடலாம்.

 

 

Yugas

 

யத்க்ருதே தசபி: வர்ஷை: த்ரேதாயாம் ஹாயனேன யத்

த்வாபரே யது ச  சமாசேன அஹோராத்ரேண தத்கலௌ

 

தபஸோ ப்ரஹ்மசர்யஸ்ய ஜபதிஸ்ச பலம் த்விஜா:

ப்ராப்னோதி புருஷஸ்தேன கலிகலிஸ்ஸாத்விதி பாஷிணம்

விஷ்ணு புராணம் அங்கம் 6, அத்தியாயம் 2

 

கிருத யுக பத்து வருஷ தவம் = திரேதா யுகத்தில் ஒரு வருஷம் = துவாபர யுகத்தில் ஒரு மாஸம் = கலியில் ஒரே நாளுக்கு ஸமமாகும்.

 

தவம், ஜப , பிரம்மசர்ய பலன்களை இந்த ரீதியில் அடைகின்றனர்.

அதாவது ஒர் ரிஷியோ முனிவரோ பத்து வருஷம் தவம் செய்து கிடைக்கும் பலனை, திரேதாயுகத்தில் பிறந்தவர் ஒரு வருஷம் செய்தாலேயே அடைந்து விடுவார்.

 

அதே முனிவர், த்வாபர யுகத்தில் பிறந்திருந்தால் ஒரு மாதம் யாக, யக்ஞங்களைச் செய்தால் போதும்

 

அவரே கலியுகத்தில் பிறந்தால் ஒரே நாள் தவம் செய்தால் போதும்.

எவ்வளவு சலுகை பாருங்கள்!!

 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய புராணத்தில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது.

 

உலகிலேயே மிகவும் அறிவியல் பூர்வமாக அமைந்தது இந்துமதம். முரட்டுத் தனமான, பிடிவாதமான கொள்கைகள் இதில் கிடையா. எல்லாம் செயல் முறைக்கு உகந்த மாதிரி, கால, தேச, வர்த்த மானங்களுக்கு அணுசரனையாக சொல்லப்பட்டிருக்கும்.

 

ஜெட் விமானத்தில் பறந்து, அலுவலக வேலைகளைச் செய்பவர்கள் கிருத யுகம் போல 12 ஆண்டு யாகம், 100 ஆண்டு யாகம் முதலியவற்றை செய்ய வேண்டியதில்லை. செய்யவும் முடியாது என்பதும் நம் முன்னோர்களுக்குத் தெரியும்.

 

ஆனால் கடையில் எவ்வளவுதான் சலுகைகளை அறிவித்தாலும், எத்தனை பொருட்களை வாங்குவது என்பது நம் கையில்தான் உள்ளது. அதாவது அந்த அளவுக்கு பர்ஸில் காசு வேண்டும் அல்லது கிரெடிட் கார்டில் உத்தரவாதம் வேண்டும். அது போல, இவ்வளவு சலுகைகளை கடவுள் அறிவித்தாலும் நல்ல குணமும் நல்ல எண்ணமும் தூய்மையும் வேண்டும். அப்போதுதான் கடவுள் அறிவித்த சலுகை, நமக்குக் கிடைக்கும்.

 

கலியுகத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!!

 

–சுபம்–

 

 

Leave a comment

Leave a comment