Written by London swaminathan
Date: 30 APRIL 2017
Time uploaded in London:-6-51 am
Post No. 3865
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடிய பாடல்களில் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்று “துன்பம் நேர்கையில்…………..” என்ற பாடல். இது திரைப்படத்திலும் இடம் பெற்றுள்ளது. இதற்கு இசை அமைத்தவர் திக்கெட்டும் தமிழ் இசை மணம் கமழ வைத்த M M தண்டபாணி தேசிகர் ஆவார். இதற்கு இசை அமைக்க அவருக்கு இரண்டு ஆண்டுகள் ஆயிற்றாம். இது அவரே சொன்ன செய்தி. இதற்கு மிகவும் பொருத்தமான ராகம் ‘தேஷ்’ என்னும் ராகம்தான் என்கிறார் தேசிகர்.
ஒரு பாட்டின் பொருளுக்கேற்ற ராகத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம் என்கிறார். யார் ஒருவர் பாட்டு எழுதினாரோ, அவருக்கு சங்கீத ஞானம் இருந்தால் அவரே அந்த பாட்டுக்கு ராகமும் போட்டுவிடுவார். பாரதி பாடல்களுக்கு அவரே அமைத்த ராகங்களை பழைய பதிப்புகளில் காணலாம்.
தண்டபாணி தேசிகர் சொல்கிறார்:
“இந்த பாட்டுக்கு சரியான ராகத்தைக் கண்டுபிடித்து இசை அமைக்க இரண்டு வருஷம் ஆச்சு. இதற்கு தேஷ் ராகம்தான் பொருத்தம். பாருங்கள்! நான் இதையே அடானா ராகத்தில் பாடுகிறேன் (தேசிகர் பாடியும் காட்டுகிறார்). இப்படி அடானா ராகத்தில் பாடினால், வருத்தமுற்ற பெண் ‘அம்மா, அப்பா’ என்று அழுதுகொண்டு ஓடிப் போய்விடும். பொருளுக்கேற்ற ராகம் இருக்க வேண்டும். இதை வள்ளுவர் அந்தக் காலத்திலேயே சொல்லி வைத்தார்:-
பண் என்னாம் பாடற்கு
பண் என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண் என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண் — குறள் 573
பொருள்:-
பாடலின் பொருளோடு இயைந்து வராத பண்ணால் (ராகத்தால்) என்ன பயன்? அதைப்போல கண்ணோட்டத்துடன் (இரக்கம், அருள்) பொருந்தாத கண்ணால் என்ன பயனுண்டாகும் ?”
இதிலிருந்து வள்ளுவனுக்குள்ள சங்கீத ஞானமும் புலப்படும்
இதோ பாரதிதாசனின் முழுப்பாடல்:–
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்கமாட் டாயா? — எமக்
கின்பம் சேர்க்கமாட் டாயா? — நல்
லன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்கமாட் டாயா? — கண்ணே
அல்லல் நீக்கமாட் டாயா? …… துன்பம்…
வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க — எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க — நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்டமாட் டாயா? — கண்ணே
ஆடிக் காட்டமாட் டாயா? — துன்பம்…
அறமி தென்றும்யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது — யாம்
அறிகி லாத போது — தமிழ்
இறைவ னாரின்திருக் குறளிலே ஒருசொல்
இயம்பிக் காட்டமாட் டாயா? — நீ
இயம்பிக் காட்டமாட் டாயா? —துன்பம்…
புறம் இதென்றும் நல்லகம் இதென்றுமே
புலவர் கண்ட நூலின் — தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் — நல்
திறமை காட்டிஉனை ஈன்ற எம்உயிர்ச்
செல்வம் ஆகமாட் டாயா? — தமிழ்ச்
செல்வம் ஆகமாட் டாயா? துன்பம்…
——-பாவேந்தர் பாரதிதாசன் (Poem is taken from Project Madurai website)
xxx
திரு எம் எம் தண்டபாணி தேசிகரின் வெண்கல குரலில் அவர் இயற்றிய பிரபல பாடலை தேஷ் ராகத்தில் கேளுங்கள் இங்கே
https://www.4shared.com/…/o…/Thunbam_nergaiyil_Desh_MMD.html…
–Subahm–