பசு வதை செய்யாதே! (Post No.4017)

Written by S NAGARAJAN

 

Date: 20 June 2017

 

Time uploaded in London:-  5-17  am

 

 

Post No.4017

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

 

 

by ச.நாகராஜன்

 

 

அஹிம்ஸா பரமோ தர்ம: என்பது ஹிந்து மதத்தின் உயிரான கொள்கைகளில் ஒன்று.

எந்த மிருகத்தையும் கொல்லாதே என்பது அற நூல்கள் நமக்குத் தரும் அறிவுரை.

 

 

கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா உயிரும் தொழும் என்பது வள்ளுவர் வாக்கு.

பசு, பிராம்மணன் – கோ, ப்ராஹ்மண் – ஹிந்து மதம் மிகச் சிறப்பாகக் கூறும் பிறவிகள்.

 

 

இதன் காரணம் பசுவும் பிராம்மணனும் தன் நலம் இன்றி பிறர் நலத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டதே தான்!

கோ ஹத்யா – பசுக் கொலை பாவம் என்கிறது வேதம்.

கோ அஹத்யா – பசுவைக் கொல்லாதே என்று வேதம் நூறு தடவைகளுக்கு மேல் கூறுகிறது.

 

பசுவையும் விருந்தினர்களையும் அது இணைத்துப் பல முறைகள் கூறுகிறது.

 

அதிதி தேவோ பவ: – விருந்தினர்கள் தேவர்களே என்று கூறும் வேதம் பய பாயஸம் வா என்று கூறுகிறது.அவர்களை அருமையான பாயஸத்துடன் உபசரி – என்று பால் கலந்த இனிப்பைத் தரச் சொல்கிறது. பசுவின் பால் விருந்தினர்களுக்குத் தர உகந்த அற்புதமான வரவேற்புப் பொருளாம்!

 

சம்ஸ்கிருதம் கற்காதே என்ற தற்கொலைக் கொள்கையால் அறிவுச் செல்வம் நம நாட்டில் வறள ஆரம்பித்தது.அரைகுறை படிப்பாளிகளும் கிறிஸ்தவ மதத்திற்கு நாட்டையே அடகு வைத்து கிறிஸ்தவமாக மாற்ற வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட் ஆங்கிலேய “மெக்காலே அறிவாளிகளும் வேதம் உட்பட்ட பல நூல்களுக்குத் தங்கள் கோணல் பார்வையாலும் அரைகுறை அறிவாலும் வியாக்யானம் அல்லது விரிவுரை தர முற்பட்டனர்.

 

அதனால் வந்தது கோளாறு பெரிது!

 

பசு மாமிசத்தை வேத காலத்தில் சாப்பிட்டனர் என்று உள்நோக்கத்தோடு எடுத ஆரம்பித்தனர்.

எடுத்துக்காட்டாக ஒரே ஒரு விஷயத்தை இங்கு பார்க்கலாம்:

மூன்று அல்லது நான்கு விருந்தினர்கள் வீட்டிற்கு வந்து விட்டால் அவர்களை அரிசியை சாதமாக சமைத்து அத்துடன் கொஞ்சம் உக்ஷ அல்லது ருஷவத்தையும் தருமாறு அற நூல்கள் பகர்கின்றன.

 

 

உக்ஷ என்பது சோமலதா. ருஷவ என்பது ஒரு வகை மூலிகைச் செடி.ஊட்டச் சத்து நிறைந்த இவற்றைத் தந்து அவர்களை உபசரி என்பது அறிவுரை.

இந்தச் செடிகள் எருதின் கொம்பு போல பெரிதாக இருக்கும். ரிஷவம் என்பதற்கு இன்னொரு அர்த்தம் ஏழு இசை ஸ்வரங்களில் ஒன்றாகும். இது எருதின் சப்தத்தை ஒத்து இருக்கும்.

 

ஆனால் அரைகுறை சம்ஸ்கிருத அறிவாளிகளும் பாரத நாட்டைக் கெடுப்பதில் குறியாக இருந்த ஆங்கிலேய அதி மேதாவிகளும் இதை எருதின் மாமிசம் என்று எழுதி விட்டனர்; சந்தோஷப்பட்டனர்.

 

பெரிய ராக்ஷஸர்கள் – ஆங்கிலேய ராக்ஷஸர்கள் கூட சில எருதுகளைக் கொன்ற மாமிசத்தைச் சாப்பிட முடியுமா? சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். அந்த அளவு முட்டாள்களா, அதிதிகளை உபசரிக்கும் வழிகளைக் கூறும் அறவோர்?!

எதை வேண்டுமானாலும் எழுதலாம் – அதுவே பத்திரிகை சுதந்திரம் என்று மார் தட்டும் மதியீனர்களை சுதந்திரத்தின் பேரால் சகித்துக் கொள்ள வேண்டியிருப்பது கொடுமையிலும் கொடுமை அல்லவா?!

 

 

மேலை நாடுகளிலும் – இந்த அரைகுறை அறிவாளிகள் கூற்றுப்படி நமது நாட்டிலும் கூட பசு வதை செய்யப்படும் போது வெளிப்படும் மீதேன் வாயு நூறு சதவிகிதம் கார்பன் டை ஆக்ஸைடு வெளிப்பாட்டை விட  அதிகம் என்பதாவது இவர்களுக்குத் தெரிகிறதா?

 

செலக்டிவ் அம்னீஷியா எனப்படும் வேண்டுமென்றே மறப்பது இவர்களுக்குக் கை வந்த கலை.

 

சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடு என்று பல இடங்களில் அரசியலுக்காக ஆதாயம் தேடி கிளர்ச்சியில் ஈடுபடும் கம்யூனிஸ தோழர்களும், ஹிந்து மத செகுலர் விரோதிகளும் வேண்டுமென்றே இந்த சுற்றுப்புறச் சூழல் கேட்டை மனதில் கொள்ள மாட்டார்கள் – பசுவதை செய்யாதே என்ற சட்டத்தை அமுல் படுத்து என்று அரசும் ஹிந்து மத அறவோரும் சொல்லும் போது!

 

 

பசுவதையால் ஏற்படும் பொருளாதாரச் சீர்கேட்டையும் பிரபலமான பொருளாதார மேதைகள் – செகுலரிஸ்டுகள் – மறந்து விடுகின்றனர் என்பது வேதனையான விஷயம்.

நன்கு சீர்தூக்கிப் பார்த்து நியாயமான முறையில் ஆய்வை நடத்தும் எவரும் பசுவை வதைக்காதே என்று சொல்வதோடு இந்த விஷமிகளின் தவறான கொள்கையையும் வெளிப்படுத்த முனைய வேண்டும்.

 

தாமதமாக இருந்தாலும் கூட பசு வதை நிறுத்தபட்டே ஆக வேண்டும். நிறுத்தப்படும்.

 

தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும் – சில காலம் தான் கவ்வ முடியும்.

 

மறுபடி தர்மமே வெல்லும்!

****

 

Leave a comment

2 Comments

  1. R.Nanjappa (@Nanjundasarma)'s avatar

    வேறு பிற விஷயங்களைப்போல ( எ.டு: ஸம்ஸ்க்ருதம்) பசுவதையைத் தடுப்பதையும் பிராமணர்களின் ஆதிக்கம் என்ற நோக்கிலேயே பார்க்கிறார்கள் நம் அரசியல்வாதிகள். பசுவதையை தடைசெய்யக்கோருவோரும் பத்தாம் பசலித் தனமாக நடந்துகொள்கின்றனர். சாஸ்திரத்தில் இருக்கிறது என்பதே அவர்கள் வாதம். சாஸ்திரத்தையே ஏற்காதவர்களிடம் இது எப்படிச் செல்லும்?

    விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இன்றைய நிலையில், அறிவியல் , பொருளாதார ரீதியாக பல விஷயங்கள் நிரூபிக்கப்பட்டு விட்டன.. “ஆவினுக் கருங்கலம் அரனஞ்சாடுதல்” என்ற தேவாரப்படி, பசு தரும் ஐந்து பொருள்கள்- சாணம், மூத்திரம், பால், தயிர், நெய் – சிவனுக்குகந்தவையாகச் சைவர்கள் கொள்கிறார்கள். இதில் பால், தயிர், நெய் என்பவை போஷாக்கு நிறைந்த உணவாக பாலர்முதல் வயோதிகர் வரை பயன்படுகின்றன. சாணம் எரிபொருளாவதுடன் மிகச்சிறந்த இயற்கை உரமாகவும் பூச்சிக்கொல்லி மருந்தாகவும் இருக்கிறது, 50 வருஷங்களாக ரசாயன வழி விவசாயத்தில் மயங்கிய நம் விவசாயிகள் அதனால் நிலம் இயல்பான வளம் இழந்தும், நீர் கெட்டும், செலவு கட்டுங்கடங்காமல் போவதும் கண்டு தாங்கமுடியாமல் ஆயிரக்கணக்கில் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பசு தரும் ஐந்து பொருட்கள் -பஞ்சகவ்யம்- மிகச் சிறந்த இயற்கை உரமாகவும் பூச்சிக்கொல்லி மருந்தாகவும் இன்னும் பல விதத்திலும் பயன்படுவதை சில பெரியவர்கள் எடுத்துச்சொல்லி வந்தனர். இதில் தமிழ் நாட்டில் முன்னின்றவர் நம்மாழ்வார் என்ற நல்லாழ்வார்! இவர் பிராமணரும் அல்லர்; ஹிந்துத்வா வாதியு மல்லர்; ஆஸ்திகரும் அல்லர் ! முற்றிலும் விஞ்ஞானக் கண்கொண்டே இதை ஆய்ந்த வேளாண்மைத்துறை பட்டதாரி-விஞ்ஞானி! இவ்வளவு பயன் தரும் பசுவைக் கொல்வதும், இறைச்சிக்காக அதை விற்பதும் தவறு என்பதை விஞ்ஞான- பொருளாதார அடிப்படையில் காட்டியவர். பசுவும் எருதும் இயற்கைவழி வேளாண்மைக்கு அவசியம் , அதனால் அதிக செலவில்லாமல் விவசாயம் செய்து பொருளீட்டலாம் என்பதை நடைமுறையில் செய்து காட்டினார். பசுவதையைத் தடுப்பதற்கு சாஸ்திரம் மட்டும் ஆதாரமல்ல- இன்று விஞ்ஞானமும் அதையே உறுதிப்படுத்துகிறது.

    அமெரிக்கா இறைச்சிக்காகவே மாடு வளர்த்த-வளர்க்கும் நாடு. மாட்டிறைச்சியின் கேடுகள் இன்று பரவலாகப் பேசப்படுகின்றன. இறைச்சிக்காக மாடு வளர்ப்பது பொருளாதாரத்தையே பாழ்படுத்துகிறது என்பதை John Robbins போன்ற பலர் ஆதாரத்துடன் விளக்கியிருக்கிறார்கள்.
    ஆனால் அமெரிக்கா மாட்டுவதையை விடவில்லை. இருந்தாலும் அவர்கள் ஒரு சிறந்த செயல் செய்திருக்கிறார்கள். குதிரை பலவிதத்தில் மனிதனுக்கு உதவுகிறது, அதை வதைக்கக் கூடாது என்று தடைசெய்திருக்கிறார்கள் ! Horse has become the holy cow of Americans ! இதைப்பார்த்தாவது நமக்கு புத்திவரவேண்டாமா?

    என்ன சொல்லி என்ன! நமது மீடியாக்களும் மக்களும் உண்மையைக் கண்டுகொள்ளமாட்டார்கள். இந்திய விஞ்ஞானிகள் கெமிகல் கம்பெனிகளின் கைக்கூலிகளாகி விட்டார்கள்.. அரசுக்கு துணிவில்லை. நாம் கடவுள் மேல் பாரத்தைப்போட்டு நல்ல காலம் வரும் என்றுதான் காத்திருக்க வேண்டும்!.

  2. Santhanam Nagarajan's avatar

    நன்றி.
    உங்கள் கருத்துக்கள் ஆழமானவை. பொருள் பொதிந்தவை.
    1) நம்மாழ்வாரைப் புகழ்ந்து பேசும் பகுத்தறிவுச் செல்வங்கள் அவர் சொல்லும் பசு வதை வேண்டாம் என்பதை இருட்டடிப்புச் செய்கிறார்களே! ஊடகம் – பத்திரிகை, டிவி எவ்வளவு பாழ்பட்டு இருக்கிறது என்பதுற்கு இது ஒரு சிறந்த எடுத்துக் காட்டு
    2) அன்னிபெஸண்ட் அம்மையார் சிகாகோவை அடைந்த போது விமானத்திலிருந்து இறங்க முயன்றவர் படியிலேயே நின்று விட்டார். ஏன் என யாருக்கும் புரியவில்லை. இந்த நகரில் என்ன நடக்கிறது என்று கேட்டார். நிறைய மாடுகளை கொல்லும் வதைக் கூடங்கள் உள்ளன என்று பதில் வந்தது. வானிலிருந்து ஆயிரமாயிரம் குரல்கள் எங்களைக் காப்பாற்றுங்கள் என்று ஓலமிடுகிறதே என்று வருத்தத்துடன் சொல்லி விட்டு இறங்கினார்.
    3)அரசியல் நோக்கில் இதைப் பார்க்காமல் பாரதத்தின் பாரம்பரிய நோக்கில் இதைப் பார்த்தால் உண்மை புரியும்.
    மீண்டும் நன்றி.
    ச.நாகராஜன்

Leave a comment