
Date: 20 FEBRUARY 2018
Time uploaded in London- 5-56 am
COMPILED by S NAGARAJAN
Post No. 4765
PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
பாடல்கள் 387 முதல் 395
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்
பாரதி பத்துப்பாட்டு
தமிழ்த்தாய் பார்வையில் பாரதி, பாரதமாதா பார்வையில் பாரதி, பராசக்தி பார்வையில் பாரதி, பாஞ்சாலி பார்வையில் பாரதி, கண்னன் பார்வையில் பாரதி, குயில் பார்வையில் பாரதி, புதுமைப்பெண் பார்வையில் பாரதி, பாப்பா பார்வையில் பாரதி, சித்தர் பார்வையில் பாரதி, பாரதி பார்வையில் பாரதி ஆகிய பத்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது இந்தக் குறுங் காவிய நூல்.
முதல் அத்தியாயம்: தமிழ்த்தாய் பார்வையில் பாரதி
21 முதல் 29 வரை உள்ள பாடல்கள்
பிரளயம் மீண்டும் நேர்ந்ததுவே – வெற்றுப்
புலவர்க ளாலது நிகழ்ந்ததுவே
பொருள்பெற வேண்டித் தனவந்தரைப் – பல
பொய்யுரை கூறிப் புகழ்ந்தனரே
மருள்போல் பலதல வரலாற்றை –
மனம்போ னபடிக் கிறுக்கினரே
பெரும்பிர ளயமெனல் அதுவேதான் – என்னைப்
புதைத்திட முயன்றவர் அவரேதான்
ஆங்கில மோகம் தலைக்கேறி – அவர்
ஆடிய ஆட்டம் என்சொல்வேன்?
ஆங்கிலம் பேசலே பயனென்று – அவர்க்கு
அடிவரு டிகளாய் மாறினரே
தீங்கெனத் தமிழைப் புறக்கணித்தே – பெற்ற
தாயெந்தன் வயிற்றில் மிதித்தனரே
ஆங்கந்தப் பிரளய வெள்ளம்தான் – எனை
அமிழ்ந்தே முழுகிடச் செய்ததுவே
முன்னாளில் பொங்கிய பிரளயம் தன்னிலே
முடிந்ததோ எந்தன் வாழ்வு
என்றுநான் தவிக்கையில் புவிமன்னன் பாண்டியன்
எனையிங்கு மீட்டுத் தந்தான்
அன்றென்னைக் காத்திட பாண்டியன் போலவே
இன்றென்னைக் காப்ப வர்யார்?
என்றுநான் தவிக்கையில் கவிமன்னா பாரதி
எனைக்காக்கத் தோன்றி வந்தாய்
பாரதிநீ இல்லையேல் பாரினில் மீண்டும் நான்
பிழைத்திடல் என்ப தேது?
பாரதிநீ இல்லையேல் பண்டிதரை விட்டென்னைப்
பலரறிய மீட்பார் ஏது?
பாரதிநீ இல்லையேல் பழமைக்கும் புதுமைக்கும்
பாலமிங்கு அமைதல் ஏது?
பாரதிநீ இல்லையேல் பாரத எழுச்சிக்குப்
பாட்டிசைப்போர் தமிழில் ஏது?
ஆயிரத் தெண்ணூற்றி எண்பத்தி ரண்டினில்
ஆனநற் கார்த்திகை மாதம் – தனில்
யாரும் வியந்திட மூலநட் சத்திரம்
ஓங்கிய தோர்நல்ல நேரம்
தாயினைப் பிரளய வெள்ளத்தில் மூழ்காமல்
தடுத்திடு வேனென துடித்தே – கவித்
தணலென வேயிந்தப் புவியனைத் தும்போற்றத்
தோன்றிவந்த தாய்குரல் கொடுத்தே
சின்னச்சா மிஅய்யர் லட்சுமி யம்மாளும்
செய்தநற் புண்ணியத் தாலே – பெருஞ்
செல்வமில் லெனினும் கல்விவ ளமுள்ள
செம்மைக்கு டும்பத்தில் தோன்றி
என்றுமென் வடிவெனும் சுப்பிரமணியன்
என்னும் பெயர்தனைப் படைத்தே – புகழ்
எட்டுத் திசையிலும் எட்டிட வேவந்து
எட்டய புரத்தில் பிறந்தாய்
வெள்ளை மலர்வாணி பிள்ளைப் பிராயத்தில்
உள்ளம் புகுந்திட்ட தாலே – நெஞ்சை
உள்ளும் வகைப்பது வெள்ளமெனக் கவி
அள்ளியள் ளித்தந்த தாலே
துள்ளும் பதினொரு வயதினில் சபைதனில்
எள்ளப் புகுந்திட்ட போதில் – மனம்
விள்ளும் வகைக்கவி தந்து பாரதியாம்
தெள்ளு தமிழ்ப்பெயர் கொண்டாய்
பெற்றவர் மறைந்திடத் தாய்மாமன் இல்லத்தில்
புகழ்காசி தனில்வாழ்ந்த போதும் – அதன்
பின்னரெட் டயபுரம் மதுரை சென்னையென
பல்வேறு இடம்சென்ற போதும்
உற்றவர் தமைவிட்டுப் பாண்டியில் மறைவாக
உறைகின்ற நிலைவந்த போதும் – எந்தன்
உடலெங்கு அலைந்தாலும் உயிரென்றும் தமிழென்று
உறைந்ததி னால்நீயும் வாழ்ந்தாய்
எவருக்கும் புரியாமல் எழுதுவதே கவிதையென்று
புலவரெலாம் நினைத்திருந்த காலம் – அவரை
விலகவைத்த துனதுகவிக் கோலம் – எங்கே
தவறுகண்ட போதும்நெஞ்சு பொறுக்கவில்லை என்று நீயும்
தவித்ததெல்லாம் நற்கவிஞன் சீலம் – கவிதைத்
தடம்துலங்க நீயமைத்த பாலம்
- பாரதிப் பத்துப்பாட்டு தொடரும்
தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, அவரே தொலைபேசியில் 5-2-2018 அன்று தொடர்பு கொண்டு பாரதி போற்றி ஆயிரம் முயற்சி வெற்றி பெற வாழ்த்தினார். அத்துடன் பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதியும் தந்தார். அவருக்கு எமது நன்றி.
பாரதியை வாசிக்கிறேன் என்று சொல்வதை விட பாரதியை சுவாசிக்கிறேன் என்று சொல்லும் எண்ணற்ற அன்பர்களில் தன்னையும் ஒருவராக அறிமுகப்படுத்திக் கொள்ளும் இந்த அரும் கவிஞர் பாரதியை வழிகாட்டியாகக் கொண்டு கவிதை புனையத் தொடங்கியவர்.
2003ஆம் ஆண்டு இந்த பாரதி பத்துப்பாட்டு காவியத்தை இயற்றியுள்ளார் இவர்.
கவிஞர் பிறந்த நாள்: 22-4-1942 பிறந்த ஊர்: குடியாத்தம்
இவர் வேதாந்த பாடசாலை என்னும் குருகுலத்தில் இலக்கண இலக்கியப் பயிற்சியைப் பெற்றார்.
இவரது குருநாதர் ஸ்ரீ சண்முகானந்த சுவாமிகள்.
பத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள்/ காவியங்களை இயற்றியவர்.
நாடகக் காவலர் R.S. மனோகர் நடத்திய இந்திரஜித், பரசுராமர், நரகாசுரன், துருவாசர், திருநாவுக்கரசர், வரகுணபாண்டியன் ஆகிய மேடை நாடகங்களை எழுதியவர் இவரே.
ஹெரான் ராமசாமி உள்ளிட்ட பலர் நடத்திய சரித்திர நாடகங்கள், சமூக நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.
வேலுண்டு வினையில்லை திரைப்படத்திற்கான கதையையும், தோடி ராகம் திரைப்படத்திற்கான வசனத்தையும் இவர் எழுதியுள்ளார்.
சென்னை தொலைக்காட்சிக்காக நரகாசுரன், ஜெயா டி.விக்காக இந்திரஜித், கால பைரவர், சாமியே சரணம் ஐயப்பா, பக்த விஜயம், விஜய் டி.விக்காக பைரவி, சன் டி.வி.க்காக விநாயகர் விஜயம், ஆதி பராசக்தி ஆகிய தொலைக்காட்சித் தொடர்களை எழுதியவர் இவர்.
இவர் சொற்பொழிவு நிகழ்த்தாத தலங்களே இல்லை என்று சொல்லுமளவு பெரும்பாலான தலங்களில் சமய சம்பந்தமான சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.
இவரது மூன்று நாடகங்களை ஆய்வு செய்து மூவர் ஆய்வில் எம்.பில். பட்டம் பெற்றுள்ளனர்.
பதினைந்துக்கும் மேற்பட்ட பெரும் விருதுகளைப் பெற்றுள்ள இவரைத் தமிழகம் பாராட்டி மகிழ்கின்றது.
இவருக்கு நமது நன்றி.
இவரைப் பாராட்டி மகிழ விரும்பும் அன்பர்கள் கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் கே.பி.அறிவானந்தம், 14, நல்லீஸ்வரர் நகர், வெங்கடாபுரம், குன்றத்தூர், சென்னை 600 069
சந்தனத் தென்றல் பதிப்பகம்: பாரதிப் பத்துப்பாட்டும் பாரதிதாசன் பதிற்றுப் பத்தும் என்ற நூலை வெளியிட்டுள்ள சந்தனத் தென்றல் பதிப்பகத்தின் உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் பாரதி போற்றி ஆயிரம் பகுதியில் பாரதியின் பத்துப்பாட்டு நூலை வெளியிட அனுமதியை மகிழ்ச்சியுடன் தந்துள்ளார். அவருக்கு எமது நன்றி. 128 பக்கங்களைக் கொண்ட நூல் சிறப்புற அச்சிடப்பட்டுள்ளது. விலை ரூ 100/
பதிப்பகத்தின் முகவரி: 10, காமராசர் தெரு, கொல்லைச்சேரி, குன்றத்தூர், சென்னை, 600069
நன்றி: கவிஞர் கே.பி.அறிவானந்தம் நன்றி: சந்தனத் தென்றல் பதிப்பகம், சென்னை.
****