
Picture posted by Vidhya Subramanian in Facebook
Date: MARCH 15, 2018
Time uploaded in London- 5-07 am
Compiled by S NAGARAJAN
Post No. 4816
PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
பாடல்கள் 455 முதல் 463
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்
பாரதி பத்துப்பாட்டு
நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு மூன்றாம் அத்தியாயமான பராசக்தி பார்வையில் பாரதி ஆரம்பிக்கப்படுகிறது
மூன்றாம் அத்தியாயம்: பராசக்தி பார்வையில் பாரதி
1 முதல் 9 வரை உள்ள பாடல்கள்
பராசக்தி என்றாலே பாரதம் முழுவதும்
பக்தியுடன் போற்று மன்றோ?
பராசக்தி யாலேதான் இகவாழ்வின் நலம்யாவும்
பாங்குடனே அமையு மன்றோ?
பராசக்தி தானிங்கு மூலசக்தி யாய்த்தோன்றி
பரிணமித்த சக்தி யன்றோ?
பராசக்தி தானிங்கு புவனங்கள் உயிரினங்கள்
பார்க்கின்ற யாவு மன்றோ?
ஆயிரம் பெயர்கொண்டு அழைத்தாலும் ஆதாரம்
ஆதிபரா சக்தி யன்றோ?
ஆயிரம் வடிவினில் அமர்ந்தாலும் அவையாவும்
அன்னையென் வடிவ மன்றோ?
ஆயிரம் பணிகளைச் செய்தாலும் வலிமையை
அருள்பவள் யானே யன்றோ?
ஆயிர மாயிரம் கோயில்க ளிலென்றும்
அமர்ந்ததிச் சக்தி யன்றோ?
புவனங்கள் அனைத்தும்தன் வடிவாகக் கொண்டதால்
புவனேச்வ ரியென்று ரைப்பர்
அவமற அகிலத்தைக் காத்துவாழ் விப்பதால்
அகிலாண்டேச் வரியே என்பார்
கவல்கின்ற நிலைமாற்றி கவினுறவாழ் விப்பதால்
காமாட்சி என்று சொல்வார்
விவரிக்க வொண்ணாத பேரரசு கண்டதால்
மீனாட்சி எனப்பு கழ்வார்
இமயத்தின் பார்வதியாய் இருப்பினும் வங்கத்தில்
இகல்காளி யென்றி ருப்பேன்
அமர்வென்ற மராட்டிய பவானியாய் இருக்கும்நான்
ஆந்திரத் துர்கை யாவேன்
குமரியாய் தென்கடலில் நிற்கும்நான் பாரதக்
கோயிலெங் கணுமி ருப்பேன்
சமயஒற் றுமையோடு தேசியஒற் றுமைகாண
சார்ந்தவள் நானே யன்றோ?
இத்தனைச் சிறப்புகள் எனக்கிருந்தும்
எனைப்பற்றிப் பாடல்கள் அதிகமில்லை
இத்தினம் அதனை நினைத்தாலும்
என்னதான் காரணம் புரியவில்லை
ஆலயங் கள்தமிழ் நாட்டினிலே
யாருக்கு அதிகம் எனப்பார்த்தால்
சாலவும் எனக்கே பலகோயில்
சான்றிடும் நூல்களோ சிலவேதான்
இடபா கத்தில் என்னை ஏற்ற
ஈசன் புகழ்பாட
அடல்சார் மூவிழி எனமுப் புராணம்
அழகாய் அமைந்தனவே
திடமார் நால்வர் பாவுடன் பன்னிரு
திருமு றையானதுவே
கடல்போல் பரந்த சிற்றிலக்கியங்கள்
கணக்கி லடங்காவே
எந்தன் தமையன் திருமால் பெருமை
என்றும் நிலைபெறவே
சிந்தை துள்ளும் சந்தக் கவியில்
திவ்ய பிரபந்தம்
அந்த மில்லாமல் அதற்குப் பின்னும்
அட்ட பிரபந்தம்
எந்த நாளும்ரா மாயண பாரத
இதிகா சம்உளவே
முருகன் எந்தன் அருமை மைந்தன்
முத்த மிழின்தலைவன்
பெருமை உரைக்க எத்தனை எத்தனைப்
புலவர் நாடிவந்தார்
திருமு ருகாற்றுப் படைமு தலாகத்
திருப்பு கழுந்தொடர
அருள்பெற் றவனைப் பாடிய நூல்கள்
அளவி டயியலாதே
பராசக்தி பார்வையில் பாரதி தொடரும்
தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார். அவருக்கு எமது நன்றி
***