
Written by LONDON SWAMINATHAN
Date: 20 JUNE 2018
Time uploaded in London – 8-45 am (British Summer Time)
Post No. 5131
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

லோகேஷ் சந்திராவின் ஜப்பான்- இந்திய உறவு பற்றிய ஆங்கிலப் புஸ்தகத்தில் 400 பக்கமும் சுவைமிகு அதிசயச் செய்திகள்!
ஜப்பானில் பிள்ளையார் கோவில், ஸரஸ்வதி ஆலயம், ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள், தர்மபோதி பொம்மைகள், நவக்ரஹ வழிபாடு, வேத கால தெய்வங்கள் முதலியன பற்றி நாலைந்து கட்டுரைகள் எழுதிவிட்டேன். கடலில் விழுந்த ஒருவர் ஜப்பானுக்கு பருத்தித் துணியைக் கொண்டு வந்ததையும் பிராமணர் ஒருவருக்கு மஹத்தான வரவேற்பு கிடைத்ததையும் இன்று காண்போம்.
49 அடி வெண்கல புத்தர்
காமகுரா டாய் புட்சு ( KAMAKURA DAIBUTSU AT HASE) ஹேஸி என்னும் இடத்தில் உள்ளது. இந்து 49 அடி வெண்கல புத்தர்; ஜப்பானின் சின்னமாகத் திகழ்கிறது. 1232ல் சுஹாவதி (SUHAAVATI) பிரிவினர் கொடுத்த காணிக்கையால் உருவாக்கப்பட்டது; 500 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சுனாமி பேரலை வந்து மண்டபத்தை அடித்துச் சென்றது. இன்று வெட்டவெளியில் கருணா மூர்த்தியாக கீழ் நோக்கிய பார்வையுடன் அருள் பொழிகிறார் அமிதாப புத்தர்.
ஆப்கனிஸ்தானில் பாமியன் (BAMIYAN) என்னுமிடத்தில் இருந்த பிரம்மாண்டமான கல் புத்தர்களை இந்த வெண்கல புத்தர் நினைவுபடுத்தும்.
( ஆப்கனிஸ்தானில் இருந்த 174 அடி உயர புத்தர் சிலைகளை துலுக்க வெறியர்கள் 2001-ம் ஆண்டில் வெடி குண்டு வைத்து தகர்த்துவிட்டனர்)

கடலில் வந்த பருத்தித் துணி
ஜப்பானில் மிகாவா(MIKAWA) மாகாணத்தில் கி.பி.799-ல் நடந்தது இது.
கடலில் விழுந்த ஒரு இந்தியர், கடல் அலைகளால் கரைக்கு அடித்து வரப்பட்டார். அவருக்கு இருபது வயது. அரை நிர்வாண கோலத்தில் இருந்தார். அவர் பேசிய பேச்சு எவருக்கும் புரியவில்லை. தவியாய்த் தவித்தார். நீண்டகாலத்துக்குப் பின்னர் ஜப்பானிய மொழியைப் புரிந்து கொண்டார்; தான் இந்தியாவிலிருந்து வந்ததாகச் செப்பினார். அவர் பருத்தி விதைகள் உள்ள ஒரு பை வைத்திருந்தார். நரா நகரில் கவடெரா கோவிலில் ( KAWADERA TEMPLE AT NARA) தஞ்சம் புகுந்து வசித்து வந்தார். அவர்தான் பிற்காலத்தில் ஜப்பானியர்கள் மிகவும் விரும்பி அணிந்த பருத்தித் துணியை ஜப்பானியர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர் மூலம் பருத்தி சாகுபடி துவங்கியது. இந்த விஷயம் எல்லாம் நிஹோன் கோகி, ருய்ஜு (NIHON-KOKI AND RUIJU-KOKUSHI) புஸ்தகங்களில் இடம்பெற்றுள்ளன ஜப்பானியர்கள் பருத்தி(துணி)யை ஹட (HATA OR VATA) அல்லது வட என்பர். ஸம்ஸ்க்ருத மொழியில் பட (PATA) என்பது துணியைக் குறிக்கும் அதிலிருந்து பிறந்தது ஜப்பானியச் சொல்.

புத்த மத வரலாறு
ஜப்பானிய சக்ரவர்த்தி கிம்மெய் (Emperor Kimmei) என்பவருக்கு கி.பி.552-ல் பெக்செ (குடார= கொரியா; Paekche- Kudara) மன்னர் சில பரிசுகளை அனுப்பினார். அவற்றில் சாக்யமுனி புத்தரின் சிலையும் நூல்களும் இருந்தன. இது போன்ற ஒரு தத்துவ போதனையை நான் யாங்கனுமே கேட்டதில்லை என்று அவர் வியந்தார்.
கி.பி.577-ல் புத்த மத குருமார்களை கொரியா அனுப்பிவைத்தது.
கி.பி.584-ல் குடார (கொரியா) நாட்டிலிருந்து பெரிய கல் புத்தர் சிலை கொணரப்பட்டது.
ஆறாம் நூற்றாண்டின் மத்தியில், புகழ்மிகு தர்மபோதி (Dharmabodhi) சீனா வழியாக ஜப்பானுக்கு வந்து ஹொக்கேசான் என்னும் இடத்தில் வாசம் செய்தார். ஆயிரம் கையுடைய அவலோகிச்வரர் சிலையின் சிறு வடிவம் அவரிடம் இருந்தது. அப்போது சக்ரவர்த்திக்கு தீராத நோய். கூன் பாண்டியன் நோயை ஞான சம்பந்தர் விபூதி மூலம் குணப்படுத்தியது போல அப்பர் பெருமானின் நோயை அவரது தமக்கை திலகவதியார் விபூதி மூலம் குணப்படுத்தியது போல, தர்மபோதியும் மன்னர் நோயை , குணப்படுத்தினார்.
கி.பி.651-ல் த்ரிபீடக (மூன்று பெட்டி) திருவிழாவை அறிமுகப் படுத்தினார். ஏழு நாட்களுக்கு அரண்மனையில் பேருரை ஆற்றினார். இளவரசர்கள் அனைவரும் அவர் தாள் பணிந்தனர்.
இந்தியாவுக்கு வந்து சென்ற சீன யாத்ரீகர் யுவாங் சுவாங்கிடம் தியானம் கற்பதற்காக தோஷோ (629-700) சீனாவுக்குச் சென்றார். அவரிமிருந்து தோஷோ (Dosho) அரிய மருந்துப் புட்டிலையும், புத்தமத சூத்ரங்களையும் கொணர்ந்தார். இந்திய முறை தஹனக் கிரியைகளையும் அறிமுகப்படுத்தினார். இதன் பிறகு டாய்ச்சோ (Taicho) முதலிய பல குருமார்கள் தோன்றினர்.

பிராமண குரு (The Brahmin Archbishop)
டோடைஜி (Totaiji Temple) கோவிலில் மஹா புத்தர் மணிமண்டபம் (Dai Butsu Den) உளது. எட்டாம் நூற்றாண்டு முதல் ரோசன புத்தரின் விராட ஸ்வரூபம் (Virat rupa of Rocana) பிரம்மாண்டமாக காட்சி தருகிறது. புத்தரின் சக்தியை உலகிற்கு பறை அறிவிக்க சக்ரவர்த்தி ஷோமு(Emperor Shomu) இந்தச் சிலையை 48 அடிக்கு உயர்த்த திட விரதம் பூண்டார். 12 ஆண்டுகளுக்கு ஏராளமான பொருட்செலவு, உடல் உழைப்பு மூலம் கனவு (Dai Butsu) நனவாகியது. கி.பி. 752 ஏப்ரல் 9ம் தேதிக்கு புனித நீராட்டு விழாவுக்கு நாள் குறிப்பிடப்பட்டது. போதி ஸேனர் (Bodhisena) என்ற பிராஹ்மணர் அதை நடத்திவைத்தார். இதுதான் வரலாறு பூர்வமான முதல் விஜயம். ஏனையவை பலவித இலக்கிய ஆதாரங்களில் இருந்து எடுக்கப்பட்டவை.
இந்த பிராஹ்மணன் பாரத்வாஜ கோத்ரத்தை சேர்ந்தவர் என்றும் அவர் மஞ்சுஸ்ரீ புத்தரின் பெருமைதனை அறிந்து சீனாவிலுள்ள வெட்டய் ஷான் (Wu-t-ai shan) மலைக்குச் சென்று இருந்ததாகவும், ஜப்பானிய சக்ரவர்த்தியின் அழைப்பின் பேரில் அந்த பிராஹ்மண ஆர்ச் பிஷப் (மஹா குரு) எழுந்தருளினார் என்றும் வரலாற்றுக் குறிப்புகள் செப்பும். கி.பி.736-ல் அவரது திருப்பாதங்கள் ஜப்பானிய மண்ணை மிதித்தன. மஹத்தான வரவேற்பு நல் கப்பட்டது. மக்கள் அவரை பர்மன் (பிராஹ்மன்) மஹா குரு என்றே அழைத்தனர்.
கி.பி.760 பிப்ரவரி 25-ல் அவர் மஹா சமாதி அடைந்தார். பிறகு அவரது சிஷ்யர்கள் அவரது கொள்கைகளைப் பரப்பினர். பிராஹ்மண மஹா குருவால் புனிதம் செய்யப்பட்ட தோடைஜி கோவிலில் கிருஷ்ணர் போல புல்லாங்குழல் வாசிக்கும் மூர்த்தி, இந்திரன், ஸூர்யன், சந்திரன், ஸரஸ்வதி, மஹா தேவி, 4 லோகபாலர்கள் சிற்பங்கள் உள. ஒரு பெரிய தீவிபத்து நடந்த பின்னரும் தப்பிப்பிழைத்த சிற்பங்கள் இவை!

இந்த மஹத்தான மணி மண்டபத்தில் 1200 ஆண்டுப் பழமையான எண்கோண வெண்கல விளக்கும் உளது. அதில் தேவலோக இசைவாணர்கள் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
பரீக்ஷைகளில் நல்ல மார்க் வாங்க மாணவ, மாணவிகள் போதிசேனரின் த லையைத் தொடும் காட்சியை இங்கே காணலாம். ஜப்பானியர்களின் இதயத்தில் அழியா இடம் பிடித்துவிட்டார் இந்த பிராஹ்மண மஹா குரு.


லோகேஷ் சந்திராவின் தந்தை டாக்டர் ரகுவீரா, லண்டன் புஸ்தக் கடை ஒன்றில் தொங்கிய ஜப்பானியப் படத்தினால் ஈர்க்கப்பட்டு லண்டனில் ஜப்பானிய மொழி பயின்று மாபெரும் ஆராய்ச்சி செய்து அத்தனையையும் அவரது மகன் லோகேஷ் சந்திராவிடம் விட்டுச் சென்றார். இருவரும் ஜப்பானில் பல்லாண்டுக் காலம் வசித்ததாலும் ஸம்ஸ்க்ருதத்தில் புலமை பெற்றிருந்தமையாலும் புஸ்தகத்தின் 400 பகங்களில் தகவல் மழை பொழிந்துள்ளனர். ஜப்பான் இந்து மதத்தை எளிதில் தழுவும்!! பிராசரகர்கள் தேவை!!!

-சுபம், சுபம்–