

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 7 December 2018
GMT Time uploaded in London – 13-50
Post No. 5747
Pictures shown here are taken from various sources including google, Wikipedia,
Facebook friends and newspapers. This is a non- commercial blog.
இன்னா செய்தாரை வெட்கப்படும்படி நல்லதைச் செய்து விடு– என்று வள்ளுவன் பறைந்தான். கனியிருக்கக் காய் கவராதே; அகராதியில் இனிய சொல் இருக்கும் போது சுடு சொற்களைப் பெய்யாதே –என்றும் மொழிந்தான். ஏசு பிரானோ ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு- என்றான். இவர்கள் எல்லாம் மநு தர்ம சாஸ்திரத்தைக் ‘காப்பி’ அடித்தார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் மநு இவர்கள் எல்லோருக்கும் முந்தையவன் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை. ஐயம் திரிபற நிரூபிக்கப்பட்ட காலம் கி.மு.இரண்டாம் நூற்றாண்டு அல்லது அதற்கு முந்தைய நூற்றாண்டு. நானோ அவரை ரிக் வேத காலத்தில் வைக்கிறேன். முதல் ஐந்து அத்தியாயம் பற்றிய முப்பதுக்கும் மோலான கட்டுரைகளில் காரணங்களைக் கரைந்து விட்டேன்.
இப்போது ஆறாவது அத்தியாயத்தில் நுழைகிறோம். முதலில் பீடிகை போட்டுவிட்டு ஸ்லோகங்களைத் தருகிறேன்
மநுவின் புகழ்பெற்ற பாடலை நாலாவது அத்தியாயத்தில் கண்டோம்
உண்மையே பேசு
இனிமையாகப் பேசு
கசப்பான உண்மையைப் பேசாதே
அன்பின் முகத்தான் பொய்யும் புகலாதே -4-138

இது மநுவின் உலகப் புகழ்பெற்ற ஸ்லோகம். மநுவின் ஜீனியஸுக்கு (genius) முன்னுதாரணம். வள்ளுவனும் ‘வாய்மை என்பது யாதொன்றும் தீமை இலாத சொலல்’ என்றான்.
மநு ஆறாவது அத்தியாயத்தில் சொல்லுவது எல்லாம் வாநப்ரஸ்தனுக்கும் சந்யாஸிக்கும் ஆனது. அதாவது இந்துக்களுக்கு நான்கு கட்ட வாழ்க்கை உண்டு. மாணவர் வாழ்வு (பிரம்மசர்யம்), இல்லற வாழ்வு (கிரஹஸ்தன்), கானக வாழ்வு (ஓய்வுக் காலத்தில், குடும்ப பாரத்தை மகனிடம் ஒப்படைத்துவிட்டு காட்டுக்குப் போய் வாழ்தல்); இறுதி கட்டமாக முற்றும் துறந்த முனிவன் ஆதல் (ஸந்யாஸம்).
ஆறாவது அத்தியாயத்தில் முழுக்க முழுக்க வானப் ப்ரஸ்தம், ஸந்யாஸம் பற்றியே கதைக்கிறார்.
இந்த அத்தியாயம் ஆரிய- திராவிட வாதம் பேசும் கூத்தாடிகளுக்கு செமையடி, வகையடி,தொகையடி, சுத்தியடி, நெத்தியடி, மிதியடி கொடுக்கிறது. ஏதோ ஆரியர்கள் வெளி நாட்டிலிருந்து வந்ததாகவும் அதற்கு ஐரோப்பிய மொழிகளில் உள்ள ஸம்ஸ்க்ருதச் சொற்களே சான்று என்றும் மாக்ஸ் முல்லர்களும் வில்லியம் ஜோன்ஸ்களும், கால்டுவெல்களும் கழுதையாகக் கத்துவர். ஆனால் முக்கியமான இந்துமதக் கோட்பாடுகள் அங்கே இல்லை என்பதை அவர்கள் மூடி மறைப்பர். பெண்களைப் போற்றும் இடத்திலேயே கடவுள் வசிப்பார் என்று மநு சொல்லுவதையும், உண்மையே அனைத்துக்கும் ஆதாரம் என்பதையும் வேற்றுமத நூல்களில் காண முடியாது. இந்த அத்தியாயத்தில் வரும் வாழ்வின் நான்கு கட்டங்களோ மநுவும் வள்ளுவனும் தொல்காப்பியனும் சொல்லும் அறம், பொருள், இன்பம் வீடு (தர்ம அர்த்த காம மோக்ஷ) என்ற வாழ்க்கையின் லட்சியங்களோ கிரேக்கம்,எபிரேயம், லத்தீனியம் வரை எங்குமே காணக்கிடைக்கில. ஆக மநுவின் ஆறாவது அத்தியாயம் இந்த ஆரிய- திராவிடப் பொய்மைவாதப் பேர்வழிகளின் கண்களைத் தோண்டி எடுத்து, கழுத்தை நெரிக்கிறது.
நிற்க.

ஆறாம் அத்தியாயத்தின் முக்கிய அம்சங்களைக் காண்போம்.
ஸ்லோகம் 6-47
“அவன் சுடு சொற்களைப் பொறுத்துக் கொள்வானாக; எவனையும் இகழாது இருப்பானாக; இந்த உடலின் காரணமாக எவனையும் எதிரியாக ஆக்கிவிடக்கூடாது” (அதாவது எதிரியே இலாது அன்பே உருவாக வாழ்க)
ஸ்லோகம் 6-48
“கோபத்துடன் சீறுவோன் இடத்தில் கோபம் காட்டாதே;
அவன் சுடு சொற்களைச் சொல்லும்போது அவனுக்கு இனிமையான சொற்கள் சொல்லி வாழ்த்து; அதற்காக பொய்மைப் புகழ்ச்சியும் வேண்டாம்
ஸ்லோகம் 6-40
இரு பிறப்பாளன் ஒருவன், அணு அளவேனும் பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாது இருப்பின் அவனுக்கு வேறு எந்த உயிரிடத்திலிருந்தும் தீங்கு வராது.
இதைத்தான் வள்ளுவனும் ஆங்காங்கே, ‘மன்னுயிர் எல்லாம் தொழும்’,’எல்லா உயிர்களும் கை கூப்பித் தொழும்’ என்றெல்லாம் பகர்வான்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று- 100
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல் – 314
இதை ஒருவரை ஒருவர் ‘காப்பி’ அடித்தனர் என்று சொல்லுவதைவிட இந்துமத சிந்தனை என்று சொல்லுவதே சாலப் பொருந்தும்; ஏசு பிரான் 13 வயதில் போனார்- 33 வயதில் திரும்பி வந்தார் என்று இயம்பும் பைபிள், அவரது இருபது வயது இளமைக் காலத்தில் அவர் இமயமலை முனிவர்களிடையே பாடம் கற்றதை மறைத்துவிட்டது. ஆகையால்தான் சில கருத்துக்களை மட்டும் அவர் எதிரொலிப்பதை நாம் காணமுடிகிறது ( உம். ஒரு கன்னத்தில் …..); இது பாரத மண்ணின் மைந்தர்கள் சிந்தனை என்பதால், புத்தரின் தம்ம பதத்திலும் காணலாம்.
ஏழுவாசல்
ஸ்லோகம் 6-48-ல் ஏழுவாசல் ‘ஸப்த த்வார’ என்ற சொல்லைப் பயன் படுத்துகிறார். இதற்கு உரைகாரர்கள் பல விளக்கங்களைத்தருவர். இதனால் மநு நூலின் பழமை புலப்படும் அவர் சொன்னது பலருக்கும் பல பொருள்களைத்தருவதால் அவர் மிகப் பழங்காலத்தவர் என்பது தெளிவு. இதே போல 3 விலக்கத்தக்க காய்கறிகளை(ஸ்லோகம் 14) மநு குறிப்பிடுவது பலருக்கும் பலவித அர்த்தங்களைத் தொனிக்கச் செய்கிறது.

நான் கொடுத்திருக்கும் தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு வழிகாட்டியேயன்றி சரியான மொழிபெயர்ப்பு அன்று; மநு நூலுக்கு பழைய உரைகள் மட்டுமே ஒன்பது உள. நாம் அரசியல்சாசனம் இயற்றி அதற்கு ஆண்டுதோறும் திருத்தம் செய்வது போல மநு நூலூம் காலாகாலத்தில் பல இடைச் செருகல்களைப் பெற்றுளது.
வானப்ரஸ்த எடுத்துக்காட்டுகள்
கானக வாழ்வுக்கான இந்து சமய எடுத்துக் காட்டுகள்:
மஹாபாரதம்- பாண்டு-மாத்ரி
புராணம் – அஹல்யா-கௌதம மஹரிஷி
ராமாயணம்- சபரி முதலிய பலர்
காளிதாசன் – கண்வர் (சகுந்தலையின் வளர்ப்புத் தந்தை)
புறநானூறும் மநு ஸ்ம்ருதியும்
ஸ்லோகம் 31 வடக்கு நோக்கி நடந்து, நடந்து உயிரை விடும் வழக்கத்தைப் புகலும்; இதை மஹாபாரதத்தின் 18ஆவது பர்வத்தில் காணலாம். அப்படி வடக்கே போக முடியாதவர் வடதிசை நோக்கி அமர்ந்து உயிர் விடுவர். இது புறநானூற்றிலும் ராமாயணத்திலும் உளது. புனிதமான மேரு, கயிலாயம் ஆகியன வடதிசையில் உள்ளன. சுந்தரர், அவ்வையார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோரும் வடதிசை வந்தனர்.
கல்யாணம் செய்யாமல், குழந்தை பெறாமல், திடீர் சந்யாசி ஆவதும் பாபம் என்பார் மநு (ஸ்லோகம் 37).புறநானூற்றிலும் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த குழுவில் சேர வந்த ஒரு புலவரை பிள்ளை பெற்ற பின்னர் வா என்று திருப்பி அனுப்பி விடுகின்றனர். ஆனால் பிசிரந்தையார் போன்ற வயதானவர்களை வரவேற்று ஏற்றுக் கொள்கின்றனர்.
சம்பள நாள் உவமை
மநுவும் காளிதாசன் போல உவமையில் வல்லவன். வானப்ரஸ்தம் செய்பவன்தானாகவும் உயிரை விடக்கூடாது; வாழவும் ஆசைப்படக் கூடாது .சம்பளநாள் வருவதை எதிர்பார்த்துநிற்கும் தொழிலாளி போல, மரண காலம் வருவதை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்க வேண்டும்என்பார் (ஸ்லோகம் 45)

ஜோதிடம் வேண்டாம்
மநு சில இடங்களில் ஜோதிடத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஸ்லோகம் 50-ல் வானப்ரஸ்தன் (கானக வாழ்வினன்) ஜோதிடம், ஆரூடம், நிமித்தம் எல்லாம் சொல்லி காசோ உணவோ பெறக்கூடாது என்கிறான்.
கடுமை, கடுமை, கடுமை
கானக வாழ்வினனுக்கு மநு இடும் கட்டளைகள் எவ்வளவு கடுமையான வாழ்வு என்பதைக் காட்டும்; இதற்கெல்லாம் கட்டு திட்டங்களை– ஒழுங்கு நெறிகளை விதித்த-சொன்ன — ஒரே மதம் இந்து மதம்.
மரவுரி அல்லது மான் தோலாடை.
உயர்த்திக் கட்டிய கொண்டைமுடி, தாடி,
மரவோடு அல்லது திருவோடு
வீடு கூடாது, மரத்தடி வாழ்வு
ஒரே முறை உணவு
மூன்று முறை குளியல்
தானிய உணவு, மரக்கறி உணவு
தேனீக்கள் சேகரித்த தேனைத் திருடாதே; புற சூழலை அழிக்காதே
இப்படியெல்லாம் அற்புதமான கட்டளைகள்! இவையெல்லாம் பாரத மண்ணின் மைந்தர்கள்– அவர்கள் என்பதைக் காட்டும்.
இதோ ஆறாம் அத்தியாயத்தின் முதல் ஐம்பது ஸ்லோகங்கள் (மொழி பெயர்ப்புசுமார்தான்).
மநுநீதி நூல் – பகுதி 34
TAGS- வள்ளுவன, ஏசு, மநு, ‘காப்பி’






