
WRITTEN BY S NAGARAJAN
Post No.7743
Date uploaded in London – – 26 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் அலைவரிசை ‘A’யில் காலைமலர் நிகழ்ச்சியில் தினமும் காலை 6.55க்கு 1-3-2020 முதல் 10-3-2020 முடிய ஒலிபரப்பப்பட்ட பத்து சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு உரைகளில் இரண்டாவது உரை
(2-3-2020 அன்று ஒலிபரப்பானது)
மழை நீரைச் சேகரிப்போம்!

ரெயின் வாட்டர் ஹார்வெஸ்டிங் (Rain Water Harvesting) எனப்படும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் நமது நாட்டில் அனைவரும் மேற்கொள்ள வேண்டிய இன்றியமையாத ஒரு திட்டமாகும்.
மழை பொழியும் போது நீரை வீணாக்கமல் சேகரிக்க, அதைப் பிடிக்கும் பரப்பு, அந்த நீரை உரிய வழிகளில் நீரைச் சேமிக்கும் இடத்திற்குக் கொண்டு செல்லல், அந்த நீரை வடிகட்டல், அதைச் சேமித்தல் ஆகிய நான்கு அம்சங்களைக் கவனித்து மழைநீரைச் சேமித்தல் வேண்டும். வீட்டின் கூரைப் பகுதி சற்று சாய்வாக அமைக்கப்பட்டால் நீரைச் சேகரிப்பது சற்று சுலபமாகும்.
வடிகட்டலுக்குத் தேவையான பொருள்களை உரிய விதத்தில் அமைத்தால் பருகும் நீர் சுத்தமாக்கப்பட்டு நமது பயன்பாட்டிற்குக் கிடைக்கும்.
மழைநீரை Recharging எனப்படும் ‘மறுபடி பயன்பாட்டிற்கு உரியதாக’ ஆக்குவதற்கு உரிய இடத்தில் 3.6 மீட்டர் ஆழமுள்ள குழியை வெட்டி சிமெண்டிலான உறைகளை அதில் வைப்பதன் மூலம் நீரை நேரடியாக நிலத்தடிக்கு அனுப்பி நிலத்தடி நீரைச் சேமிக்க முடியும்.

மழைநீர் என்பது இயற்கை நமக்கு இலவசமாகத் தரும் ஒரு அரிய வரபிரசாதம். இப்படிச் சேகரிக்கும் பழக்கம் நமது மனப்பான்மையில் ஒரு நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தி நீர் வளம் பற்றிய நல்ல கருத்தை நம் இல்லத்தில் உள்ளோருக்கும் அண்டை அயலாருக்கும் ஏற்படுத்தும்.
சமுதாயக் கட்டிடங்களிலும் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் இந்தத் திட்டம் அமுல் படுத்தப்படுமானால் ஒரு சமூகம் முழுவதும் நலம் பெறும் திட்டமாக இது அமையும். அன்றாடப் பயன்பாட்டிற்கு இது உதவுவதோடு அவசர காலங்களில் உதவும் அற்புதத் திட்டமாகவும் இது அமைகிறது. வறண்ட கோடைக் காலங்களில் போதுமான நீரை இந்தத் திட்டம் தந்து உதவும்.
சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டை எடுத்துக் கொண்டால் சாலைகளிலும் பொது இடங்களிலும் ஏற்படும் வெள்ள அபாயம் நீக்கப்படும். நீரும் தேங்காது. பூச்சிகள் தொல்லையும் இருக்காது; தேவையற்ற உலோகம் உள்ளிட்ட போருள்களால் ஏற்படும் மாசுகள் இந்தத் திட்டத்தினால் தவிர்க்கப்ப்டும்.
நீர் முறையாக வழிப்படுத்தப்படுவதால் நதிகளில் நீர் பெருகி ஏற்படும் அரிப்புகள் உள்ளிட்டவை ஏற்படாது. செடிகளுக்கும் தாவர இனங்களுக்கும் இந்த மழைநீர் சேகரிப்பு பெரிதும் உதவி சுற்றுப்புறத்தை என்றும் பசுமையுடன் வைத்திருக்கும்.

அரசின் மூலமாக வரும் முனிசிபல் குழாய்களில் வரும் நீரின் பயன்பாடும் பெரிதளவில் குறைவதால் ஒரு நகரின் நீர் வளம் சிறப்பாக எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இப்படிப் பல நன்மைகளைத் தரும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை உடனடியாக ஒவ்வொருவரும் மேற்கொள்ளுதல் நமக்கும் நாட்டிற்கும் பயன்படும் சிறப்பான செயலாக அமையும் என்பதில் ஐயமில்லை.
Script by S.Nagarajan (ச.நாகராஜன்)

tags- மழைநீர், சேகரி