
WRITTEN BY S NAGARAJAN
Post No.7858
Date uploaded in London – – 21 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் அலைவரிசை ‘A’யில் காலைமலர் நிகழ்ச்சியில் தினமும் காலை 6.55க்கு 1-3-2020 முதல் 10-3-2020 முடிய ஒலிபரப்பப்பட்ட பத்து சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு உரைகளில்
பத்தாவது (கடைசி) உரை
(10-3-2020 அன்று ஒலிபரப்பானது)
எலக்ட்ரிக் வாகனங்களின் அறிமுகம்!

தட்பவெப்ப நிலை மாற்றத்திலிருந்து உலகைக் காக்க வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் நச்சு வாயுக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதற்கு ஒரு சிறந்த வழியாக இப்போது உலகெங்கும் படிம எரிபொருள் தேவைப்படாத எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
1888ஆம் ஆண்டு பிரான்ஸை சேர்ந்த ஒருவரால் எலக்ட்ரிக் கார் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. மணிக்கு 63.16 கிலோமீட்டர் இது ஓடியது. அடுத்த ஆண்டே லா ஜமைஸ் காண்டெண்ட் (La Jamais Contente) என்ற எலக்ட்ரிக் கார் மணிக்கு 105.88 கிலோமீட்டர் ஓடி முதல் சாதனையை முறியடித்தது. ஆனால் எலக்ட்ரிக் கார்களில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரிகளை நூறு கிலோமீட்டருக்கு ஒரு முறை சார்ஜ் செய்ய வேண்டியிருந்ததால் இதைப் பயன்படுத்த யாரும் முன்வரவில்லை. ஆனால் இன்றோ பல்வித முன்னேற்றங்களுடன் சத்தமே இல்லாத, வெகு தூரம் ஓடும் எலக்ட்ரிக் கார்கள் சந்தைக்கு வந்துள்ளன.
இதில் முன்னோடியாக இருப்பது உலகின் தலை சிறந்த நிறுவனமான டெஸ்லா. டெஸ்லாவைத் தொடர்ந்து ஏராளமான நிறுவனங்கள் மின்சக்தி வாகனங்களைத் தயாரிக்க ஆரம்பித்து விட்டன. அடுத்த ஐந்து வருடங்களில் 34 புது மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும் என்பது ஒரு சுவையான செய்தி. இப்போது இருக்கும் கார்கள், பஸ்கள் என்னென்ன வசதிகள் கொண்டிருக்கின்றனவோ அதை விட கூடுதல் வசதிகளுடன் இவை தயாரிக்கப்படும்.
பல லட்சம் எலக்ட்ரிக் கார்கள் உலகெங்கும் இன்று ஓடுகின்றன. ஜெர்மனியில் மட்டும் பத்து லட்சம் கார்கள் இயக்கப்படுகின்ற்ன.

நார்வே 2025லும் இந்தியா 2030லும் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் 2040லும் பெருமளவில் எலக்ட்ரிக் வாகனங்களை சாலைகளில் இயங்கச் செய்யும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இவை அனைத்தும் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தும் நாசகரமான வாயுவான கார்பன் டை ஆக்ஸைடை வெளிப்படுத்தாது; ஆகவே சூழல் மேம்படும். அத்துடன் மக்களின் ஆரோக்கியமும் மேம்படும்.
அடுத்து, சூரிய சக்தியால் இயங்கும் வாகனங்களும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இவை பயன்பாட்டுக்கு வரும் போது முற்றிலுமாக வளி மண்டலம் நச்சு வாயுக்களிலிருந்து காக்கப்படும். இந்த மாற்றத்தை வரவேற்று பெட்ரோல், டீஸல் வாகனங்களைத் தவிர்ப்போமாக!
Script by S.Nagarajan (ச.நாகராஜன்)
TAGS சூரிய சக்தி,எலக்ட்ரிக் கார்கள்