‘நல்லா சாப்பிடுங்க, ஜமாய்ங்க’ — 2700 ஆண்டுகளுக்கு முன் கேட்ட பேச்சு (Post No.8116)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8116

Date uploaded in London – 6 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நல்லா சாப்பிடுங்க, ஜமாய்ங்க’ — 2700 ஆண்டுகளுக்கு முன் கேட்ட பேச்சு !

உலக மஹா இலக்கண வித்தகன் , உலகத்தின் முதல் மொழியியல் அறிஞன் , கவிஞன் பாணினி ஒரு மக்கள் கவிஞன் . அவன் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் சாமான்ய மனிதன் பேசிய பேச்சுக்களை அப்படியே உதாரணமாகத் தந்துள்ளான் . ஒரு வேளை கல்யாண மஹால் அல்லது பெரிய விருந்து நடந்த ‘டைனிங் ஹால்’ (Dining Hall) போயிருப்பார் போல; அதுமட்டுமல்ல சமையல் நடைபெறும் அடுப்பங்கரைக்கும் போயிருப்பார் என்றே தோன்றுகிறது. அவர் கேட்ட நான்கு வசனங்கள் இதோ :–

காதத – மோததா = சாப்பிடுங்க, சந்தோஷமா இருங்க;

அஸ்நீத – பிபதா  = நல்லா சாப்பிடுங்க , குடிங்க;

பசத – ப்ரிஜ்தா  = (சிக்கிரம்) சமைங்க, வறுங்க ;

பிந்த்தி – லவணா  = (இதில்) உப்பு போடுங்க .

சமையல் நடைபெறும் இடத்தில் தலைமை ‘குக்’  (Chef) மற்ற பரிசாரகர்களை விரட்டி வேலை வாங்கியதையும் அவர் கேட்டிருப்பார் போலும். இவைகளையும் இன்னும் 20  உதாரணங்களையும் பட்டியலிட்டுவிட்டு சம்ஸ்க்ருதம் அக்காலத்தில் பேச்சு மொழியாக இருந்தது என்கிறார் டாக்டர் வி.எஸ். அக்ரவாலா . அவர் 1950களில் லட்சுமணபுரி பல்கலைக் கழகத்தில் பாணினி இலக்க ணத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்..

பாணினி இலக்கணத்தைக் கற்ற வெளிநாட்டினரான கோல்ட் ஸ்டக்கர், கீத் , லைஃபிச் ஆகியோரும் நகர மக்களின் பேச்சு மொழியாக சம்ஸ்க்ருதம் இருந்தது என்பதை உறுதிப் படுத்துகின்றனர்.

பாணினி இலக்கண நூலான அஷ்டாத்யாயீதான் உலகின் முதல் இலக்கண நூல், முதல் மொழியியல் நூல் என்பதை உலக அறிஞர்கள் ஒப்புக்கொள்கின்றனர். பாணினி தனது புஸ்தகத்தில் சம்ஸ்கிருதம் என்ற மொழி யின் பெயரையே எங்கும் சொல்லவில்லை. அவர் ‘பாஷா’ என்ற சொல்லை மட்டுமே பயன்படுத்துகிறார். மொழி என்பது இதன் பொருள்; இந்தியா முழுதும் அறிஞர்களுக்குத் தெரிந்த மொழி என்பதாலும், உலகில் ஒரு இனத்தின் பெயரால் அமையாத ஒரே மொழி என்பதாலும் பாஷா என்றே சொல்லுவார். தமிழ், கிரேக்கம், சீனம் , லத்தின் , ஹீப்ரூ போன்ற ஏனைய பழங்கால  மொழிகள் அனைத்தும் அந்தந்த இனங்களின் பெயரால் அமைந்தவை.

பாணினி, அவருக்கு மிகவும் முன்காலத்தில் இருந்த வேதகால கவிதை இலக்கணத்தையும் ஒப்பிட்டு எழுதி இருக்கிறார். அந்த இடங்களில் எல்லாம் ‘சந்தஸ்’ அதாவது ‘கவிதையில்’ என்று எழுதினார்.

அக்காலத்தில் உலகியல் வழக்கு என்பது சம்ஸ்கிருத மொழியாகவும், நாடக வழக்கு என்பது வேத கால கவிதை வழக்காகவும் அவர் கொண்டார் போலும்.

***

உமா துணி , அணு சாப்பாடு

இவர் சொல்லும் சில சொற்கள் கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்தில் கூட  இல்லை. பாணினி ‘உமா’ என்னும் தாவரத்தையும் ‘அணு’ என்ற தானியத்தையும் குறிப்பிடுகிறார். சுமார் ஆறு வகை அரிசியையும் இலக்கண மொழி உதாரணங்களாகக் காட்டுகிறார். இதில் ‘அணு’ என்பது தினை வகை தானியம். ஏழைகளின் உணவு. ‘உமா’ என்பது துணி நெய்வதற்குப் பயன்பட்ட தாவரம். அதிலிருந்து வரும் ‘அவுர்ண’ என்ற துணியையும் குறிப்பிடுகிறார். இவரை எல்லாம் அவர் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவர் என்பதைக் காட்டுகின்றன. இவர் பயன்படுத்தும் பணம், நாணயம் தொடர்பான சொற்களும்  அர்த்தசாஸ்திர (கௌடில்யர்) காலத்துக்கு முந்தையவை. இவர் நந்தர் போன்ற மன்னர்களின் பெயரை எங்குமே குறிப்பிடவில்லை.

அதுமட்டுமல்ல . இவரால் குறிப்பிடப்படும் எந்த இலக்கண ஆசிரியரின் நூலும் நமக்குக் கிடைக்கவில்லை..ஆக இவர் காலம் 2700 ஆண்டுகள்  அல்லது அதற்கும் முந்தையவர் என்பதை சம்ஸ்கிருத நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

Tags– நல்லா சாப்பிடுங்க, உமா, , அணு, பாணினி, 2700 ஆண்டு

–SUBHAM–

Leave a comment

Leave a comment