எந்த தேசத்தில் வசிக்க வேண்டும்? (Post No.11,519)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,519

Date uploaded in London – 8 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

மஹாபாரத வழிகாட்டி

எந்த தேசத்தில் வசிக்க வேண்டும்? 

ச.நாகராஜன்

எந்த தேசத்தில் வசிக்க விரும்ப வேண்டும் என்பதைப் பற்றி நாரத மஹரிஷி காலவருக்குக் கூறுகிறார்.

இந்த சம்வாதம் சாந்தி பர்வத்தில் 293வது அத்தியாயத்தில் காணலாம்.

அவற்றில் சில முக்கிய கருத்துக்களைக் கீழே காணலாம்:

சிஷ்யோபாத்யாயிகாவ்ருத்திர்யத்ர ஸ்யாத் சுசமாஹிதா |

யதாவச்சஸ்த்ரசம்பன்னா கஸ்தம் தேஷம் பரித்யஜேத்  ||

எந்த தேசத்தில் குரு சிஷ்யர்களுடைய செய்கையானது சாஸ்திரப்படி ஏற்பட்டதும் நன்றாக ஸ்தாபிக்கப்பட்டதுமாய் இருக்கிறதோ அந்த தேசத்தை எவன் தள்ளுவான்?

ஆகாஷஸ்தா த்ருவம் யத்ர தோஷம் பூயுவிபஸ்சிதாம் |

ஆத்மபூஜார்பிகாமோ வை கோ வஸேத் தத்ர பண்டித: ||

எந்த இடத்தில் வெளியிலுள்ளவர்கள் வித்வான்களுக்கு நிச்சயமாக தோஷத்தைச் சொல்லுவார்களோ அந்த தேசத்தில் தனக்கு கௌரவத்தை விரும்பும் எந்தப் பண்டிதன் தான் வசிப்பான்?

 யத்ர சம்லோடிதா லுப்தை: ப்ராயஷோ தர்மசேதவ: |

ப்ரதீப்தமிவ சைலாந்தம் கஸ்தம் தேசம் ந சம்த்யஜேத் ||

எந்த தேசத்தில் லோபிகளாலே தர்மத்தின் அணைகள் பெரும்பாலும் உடைக்கப்பட்டிருக்கின்றனவோ, அந்த தேசத்தை, முந்தானை பற்றி எரிகின்ற ஆடையைப் போல யார் தான் விடமாட்டான்?

 யத்ர தர்மமநாஷங்காச்சரேயுர்வீதமத்ஸரா: |

பவேத் தத்ர வஸேஸ்ஸைவ புண்யஷீலேஷு சாதுஷு ||

எந்த தேசத்தில் பயமும் மத்ஸரமுமின்றி ஜனங்கள் தர்மத்தைப் பின்பற்றுகின்றார்களோ அங்கே பிறக்க வேண்டும். புண்ணியசீலர்களான சாதுக்களிடத்தில் வசிக்க வேண்டும்.

தர்மமர்தோநிமித்தம் ச சரேயுர்யத்ர மானவா: |

ந த்ஜாமமிசேவேஜ்ஜாது தே ஹி பாபக்ருதோ ஜனா: ||

எந்த தேசத்தில் பணத்தை அடைவதற்காக தர்மத்தைக் கடைப்பிடிக்கிறார்களோ அவர்களிருக்கும் இடத்தின் அருகே ஒரு போதும் வசிக்கக் கூடாது. அவர்கள் பாவத்தை அல்லவா செய்கின்றனர்!

எந்த இடத்தில் ஜனங்கள் பாவத் தொழிலால் உயிர் வாழ விரும்புகிறார்களோ அந்த இடத்திலிருந்து பாம்பு இருக்கும் வீட்டை விட்டு ஓடுவது போல  வேகமாக ஓட வேண்டும்.

யத்ர ராஜா தர்மநித்யோ ராஜ்ய தர்மேண பாலயேத் |

அபாஸ்ய காமான் காமேஷோ வஸேத் தத்ரவிசாரயன் ||

எந்த நாட்டில் எல்லா செல்வங்களும் உள்ள அரசன் காமங்களை விலக்கி தர்மத்தை நித்தியமாகக் கொண்டு தர்மத்துடன் நாட்டை பரிபாலனம் செய்வானோ அந்த நாட்டில் விசாரிக்காமல் வசிக்க வேண்டும்.

யதாஷீலதா ஹி ராஜான்: சர்வான் விஷயவாஸின: |

ஸ்ரேயஸா யோஜயத்யாஷு ஸ்ரேயஸி ப்ரத்யுபஸ்திதே ||

அரசர்களின் சீலத்துக்கும் ஸ்வபாவத்திற்கும் தக்கபடி மக்களும் இருப்பார்கள் அல்லவா? தமக்கு நன்மை ஏற்பட்ட போது தேசவாசிகளான அனைவரையும்  சீக்கிரம் ச்ரேயஸோடு சேர்ப்பிப்பார்கள்.

இப்படி ஒரு நீண்ட உரையை நாரதர் காலவரிடம் நிகழ்த்தினார்.

(அதன் சாரம் மேலே தரப்பட்டுள்ளது.)

தர்மத்துடன் வாழும் அரசன் இருக்கும் இடத்தைச் சேர்.

வித்வான்கள் மதிக்கப்படும் இடத்தைச் சேர்.

எங்கே சாதுக்கள் மதிக்கப்படுகிறார்களோ அங்கே சேர்.

தர்மத்தை தர்மத்திற்காகச் செய்ய வேண்டுமே அல்லாது பணம் சம்பாதிப்பதற்காகச் செய்யக் கூடாது.

அரசன் தர்மத்துடன் நாட்டை அரசாண்டால் அவனிடமிருக்கும் அனைத்து நலன்களும் மக்களையும் சேரும்.

எந்த நாடு மேன்மையை அடையும் என்பதற்கான காரணங்களை தேவரிஷி நாரதர் கூறுவது பொருள் படைத்த ஒன்றாக அமைகிறது.

***

Leave a comment

Leave a comment