காலத்தைவென்றகவிஞன்கண்ணதாசன் – 3 (Post 11,542)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,542

Date uploaded in London – 14 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.youtube.com/watch?v=1eEeW7pYxjA சொல்வதெல்லாம் கண்ணதாசன் -பதாகை32 –

கமெண்ட் ஸையும் பதிவு செய்யலாம்.

நாகராஜன் 

காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் –

ச.நாகராஜன் 

கங்கைக்கரைத் தோட்டம்                                                  

கன்னிப் பெண்கள் கூட்டம் –ஓ                                                   

 கண்ணன் நடுவினிலே                                                        

காலை இளங்காற்று                                                             

பாடிவரும் பாட்டு                                                        

 எதிலும் அவன் குரலே   – படம் : வானம்பாடி

அழகு ரசிப்பதற்கே                                                             

அறிவு கொடுப்பதற்கே                                                        

மனது நினைப்பதற்கே – ஆஹா!                                               

வாழ்க்கை வாழ்வதற்கே   – படம்  வாழ்க்கை வாழ்வதற்கே

வரவு எட்டணா                                                                  

செலவு பத்தணா                                                                        

அதிகம் இரண்டனா –                                                              

கடைசியில் துனா     படம் பாமா விஜயம்

பாட்டுப் பாடவா                                                                           

பார்த்துப் பேசவா                                                                       

பாடம் சொல்லவா                                                           

பறந்து செல்லவா       படம்  தேன்நிலவு

கண்ணெதிரே தோன்றினாள்                                                       /

கனிமுகத்தைக் காட்டினாள்                                                            

நேர்வழியில் மாற்றினாள்                                                    

நேற்றுவரை ஏமாற்றினாள்           படம்  இருவர் உள்ளம்

நீ என்பதென்ன                                                              

நான் என்பதென்ன                 படம் வெண்ணிற ஆடை 

களங்கமில்லா காதலிலே                                                    

காண்போம் இயற்கையெலாம்          படம்   இல்லறஜோதி

நூற்றுக்கணக்காக உள்ள இரு சொற்பாடல்களில் சிலவற்றைப் பார்த்தோம்.

இவற்றில் நவரஸங்களும் ததும்பும்; உணர்ச்சிகள் பொங்கும்; தமிழ் சுருக்கமாக விளையாடும்; விரிவாக அர்த்தத்தைத் தரும்.

இவற்றைத் தொகுத்துப் பாடினாலே

வரும் சுகம்

இது நிஜம்!

தமிழ் நூல்களில் மூன்று சொற்களில் அமைந்துள்ள சொல்லோவியங்கள் ஆயிரக் கணக்கில் உள்ளன. ஒவ்வொரு சொற்றொடரும் ஆழ்ந்த கருத்து, இலக்கிய அழகு, இன்சுவை, உணர்ச்சி வெளிப்பாடு போன்ற பல அம்சங்களை இனிதே தரும்.

கண்ணதாசனின் பாடல்களில் மூன்று சொல் முத்துக்களை எடுங்கள் என்றால் சுலபமாக அப்பாடல்களில் உளத்தைக் கொடுத்தோர் முன்னூறு நானூறு பாடல்களை மூச்சு விடாமல் உடனே சொல்லி விடுவர்.

அப்படி ஒரு பரந்த களத்தின் அடிப்படையில் அவரது பாடல்கள் எழுந்துள்ளன.

முதலில் குறளில் மூன்று சொல் முத்துக்கள் சிலவற்றைப் பார்ப்போம்!

செயற்கரிய செய்வார் பெரியர்     குறள்  26

அறத்தான் வருவதே இன்பம்       குறள்  39

பெண்ணிற் பெருந்தக்க யாவுள?      குறள்  54

அன்பின் வழியது உயிர்நிலை    குறள்  80

நன்றி மறப்பது நன்றன்று     குறள்  108

அடக்கம் அமரருள் உய்க்கும்   குறள்  121

யாகாவார் ஆயினும் நாகாக்க   குறள்  127

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை   குறள்  439

அப்பப்பா, ஆழ்ந்த கருத்து மூன்றே சொற்களில்!

அடுத்து மகாகவி பாரதியாரின் கவிதைகளில் மிகச் சில எடுத்துக்காட்டுக்களைப் பார்ப்போம்.

அன்பென்று கொட்டு முரசே!

பெரிதினும் பெரிது கேள்

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே

வீணையடி நீ எனக்கு!

ஆசை முகம் மறந்துபோச்சே!

இப்படி ஏராளமான எடுத்துக்காட்டுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்த வகையில் கவியரசரின் கவிதைப் பூங்காவில் நுழைவோம்; கண்ணுக்கினிய சில நல்ல மலர்களைப் பார்ப்போம்.

செந்தமிழா எழுந்து வாராயோ – உன்                                       

சிங்காரத் தாய்மொழியைப் பாராயோ                                          

அன்பு நெறியிலே அரசாள – இந்த                                              

அகிலமெல்லாம் தமிழர் உறவாட                                                       

துன்பங்கள் யாவும் பறந்தோட                                                                     

 தூய மனங்கொண்டு கவிபாட                 படம்: மதுரை வீரன்

தமிழனின் தாய்மொழியைப் பாராட்டி, அகில உலக தமிழரை ஒன்று கூட்டி, தூய மனம் கொண்டு, கவி பாடி, துன்பங்கள் யாவும் பறந்தோடச் செய்வோம் என்ற கற்பனையில் உயர்ந்த சிந்தனையைப் பார்க்கலாம்!

துள்ளித் திரிந்த பெண்ணொன்று                                             

துயில் கொண்டதேன் இன்று                                                          

தொடர்ந்து பேசும் கிளியொன்று                                                                    

பேச மறந்ததேன் இன்று                       படம்: காத்திருந்த கண்கள்

!

மயக்கம் எனது தாயகம்                                                              

மௌனம் எனது தாய்மொழி                                                           

கலக்கம் எனது காவியம்  –  நான்                                                   

கண்ணீர் வரைந்த ஓவியம்                      படம்: குங்குமம்

சோகம் ஒலிக்கும் குரலில் கலக்கம் வந்த காரணத்தையும் கவிஞர் கூறி விடுகிறார்.

நானே எனக்குப் பகையானேன் –என் நாடகத்தில் நான் திரையானேன் என்று.

ஆத்மைவ ஆத்மனோ பந்து: ஆத்மைவ ரிபுராத்மன: (உனக்கு நீயே நண்பன்; உனக்கு நீயே பகைவன் என்ற கீதையின் கருத்து சாதாரணமாக இங்கு வந்து விழுவதைப் பார்க்கலாம்)

போனால் போகட்டும் போடா – இந்த                                         

 பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?                                      

போனால் போகட்டும் போடா         படம்: பாலும் பழமும்

வாழ்க்கை கணக்கை சில வரிகளில் போட்டு வாழ்க்கை என்பது வியாபாரம், வரும் ஜனனம் என்பது வரவாகும், அதில், மரணம் என்பது செலவாகும் என்று வரவு செலவு கணக்கை இவ்வளவு கச்சிதமாக மூன்று மூன்று சொல் அடுக்குகளில் காண முடிகிறதே! நமக்கும் மேலே ஒருவன், அவன் நாலும் தெரிந்த தலைவன், அவன் தான் அனைத்தையும் இரவல் தந்தவன், அதை இல்லை என்றால் அவன் விடுவானா?

கவிஞரின் ஆணித்தரமான கேள்விகள் எவ்வளவு சிந்தனையைக் கிளப்பி விடுகிறது? 

தொட்டால் சுடுவது நெருப்பாகும்                                                       

தொடாமல் சுடுவது சிரிப்பாகும்!                                                   

 தெரிந்தே கெடுப்பது பகையாகும்                                                   

தெரியாமல் கெடுப்பது உறவாகும்

 படம்: படித்தால் மட்டும் போதுமா – (அண்ணன் காட்டிய வழியம்மா பாடலில்)

எப்படி இருக்கிறது புது வியாக்கியானம்?

பிறக்கும் போதும் அழுகின்றான்                                           

இறக்கும் போதும் அழுகின்றான்                                                   

ஒருநாளேனும் கவலை யில்லாமல்                                                 

 சிரிக்க மறந்தாய் மானிடனே                படம்: கவலை இல்லாத மனிதன்

தத்துவப் பாடல்களின் மன்னன் என்பதை நிரூபிக்க எத்தனை பாடல்கள் வேண்டும்?

உள்ளம் என்பது ஆமை – அதில்                                                  

உண்மை என்பது ஊமை!                                               

சொல்லில் வருவது பாதி – நெஞ்சில்                                                 

தூங்கிக் கிடப்பது நீதி!              படம்: படித்தால் மட்டும் போதுமா

 TO BE CONTINUED……………………………

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

Leave a comment

Leave a comment