பார்ப்பதெல்லாம் நிஜமல்ல – 4 (Post No.11,777)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,777

Date uploaded in London –   7 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பார்ப்பதெல்லாம் நிஜமல்ல – 4

ச.நாகராஜன்

உண்மை என்ற ஒன்று வரும் போது ஒவ்வொரு மனிதரும் “பொதுவான ஒரு அடிப்படையை” பின்பற்றுகின்றனர். இந்த உண்மை ஜன்னல் (“window of reality” ) மனித குலம் அனைத்திற்குமே பொதுவான ஒன்று தான்!

சுடு தண்ணீரின் உஷ்ணத்தை விட ஐந்து மடங்கு அதிக வெப்பமாக உள்ள எரியும் நிலக்கரி பரப்பட்ட இடத்தின் மீது ஒருவராலும் நடக்க முடியாது என்பதை அனைவரும் உண்மையே என்று ஒப்புக் கொள்வர். அதே போல ஒரு பொருளை மனமானது செல்வாக்குக்கு உட்படுத்த முடியாது என்பதையும் ஒப்புக் கொள்வர்.

ஆனால் இது நடக்கிறதே! பல இடங்களில் இது நிரூபிக்கப்பட்டும் இருக்கிறதே!!

ஒரு சாதாரண நாற்காலியில் உட்கார்ந்து நன்றாக ஓய்வான நிலையில் இருந்து தொலைதூரத்தில் கடந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ் காலத்தில் நிகழும் அல்லது வருங்காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்க முடியாது என்பதை அனைவரும் உடனே ஒப்புக் கொள்வர். அதுவும் நாம் ஐம்புலன்களில் காணும் அளவு துல்லியமாகக் காண்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்று உறுதிபடக் கூறுவர்.

ஆனால் ஆஸ்திரேலிய பூர்வ குடியினர் தங்களுக்கு இது சர்வ சாதாரணமான ஒன்று என்கின்றனர். இந்தப் “பரிசு” அவர்களிடம் காலம் காலமாக உள்ளது.

‘ரிமோட் வியூயிங்’ (Remore viewing) எனப்படும் தொலைதூரப் பார்வையை ஏராளமான ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள் அறிகிறார்கள். அனுபவித்தும் இருக்கிறார்கள். பல பெரிய நிறுவனங்களும் தங்களுக்குத் தேவையான சில தகவல்களைப் பெற இந்த தொலைதூரப் பார்வையாளர்களை அணுகுகிறார்கள்.

பல காலமாக நாம் ஏற்றுக் கொண்ட உண்மை ஜன்னல் (reality window) இனியும் கவைக்கு உதவாது. காலத்திற்கு உதவாது. அதை விட்டு வெளியில் வர பல விஞ்ஞானிகள் முயல்கின்றனர்.

சில நிபந்தனைகளின் பேரில் உங்கள் மனமானது இந்த வழக்கமான ஜன்னலை விட்டுத் தப்பி ஓடுகிறது. அதிகமதிகம் பேர்கள் தங்களது “இந்த நம்பவே முடியாத, நடக்கவே முடியாத” நிகழ்வுகளை அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள். பிரபஞ்சத்தின் பிரக்ஞை மாறுகிறது. ஒரு குறிப்பிடத்தக்க பெரிய அளவில் இந்த அனுபவங்களை பெரும்பாலானோர் பெறும் போது ‘நூறாவது குரங்கு’ என்ற கொள்கையின் படி ஒவ்வொருவரும் திடீரென்று இந்த விஷயங்களை நன்கு புரிந்து கொள்வர்; அதை சிலாகித்துப் பேச ஆரம்பிப்பர். இது எப்படி நிஜ வாழ்வில் பிரதிபலிக்கும் என்பதை ஷெல்ட் ரேக்ஸின் மார்போஜெனிக் ஃபீல்ட் தியரி விளக்குகிறது,
(Sheldrake’s Morphogenic Field theory)

எதுவுமே பார்ப்பது போல நிஜத்தில் இல்லை!!!

ஏனெனில் கடந்த நூறு ஆண்டுகளில் மேற்கத்திய நாகரிகம் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்றாக ஆகி விட்டது. தொழில்நுட்பம் மேம்பாடு அடைய அடைய நவீனமாக ஆக ஆக அதை அனைவருமே விரும்பத்தான் செய்கிறோம். ஆனால் தொழில் நுட்பம் தர்க்கத்தை அடிப்படையாக – லாஜிக்கை- கொண்ட ஒன்று.

நமக்கு உண்மையைக் காட்டும் ஒரே ஜன்னலின் அடிப்படை தர்க்கம் தான்.

இப்பொழுதைய தர்க்கத்திற்கு அப்பாற்பட்டு நாம் இன்னொரு வித்தியாசமான தொழிநுட்பத்தைக் கண்டுபிடித்து விழிப்புணர்வைக் கொண்டோமானால், நம்மிடம் உள்ள சம்பிரதாயமான கருவிகளைக் கொண்டு நாம் காணப்போகும் புது உண்மைகளை அளக்க முடியாது எனில் அப்போது நாம் திகைக்கப் போகிறோம்! பிரமிக்கப் போகிறோம். ஏனெனில் நாம் பார்க்கும் வழக்கமான ஜன்னல் வழியான ஒரு பார்வை அல்ல!

ஆனால் இந்த மாற்றுத் தொழில்நுட்பங்கள் நம்மிடம் ஏற்கனவே உள்ளன. அது வரும் நூற்றாண்டின் விஞ்ஞானமாக அமையும். அவை இயற்கையில் உள்ள பல விசித்திரங்களைக் காணும்; காண்பிக்கும்!

ரெஸொனென்ஸ் (Resonance ) எனப்படும் ஒத்ததிர்வும் அவற்றில் ஒன்று. நிலையான காந்தத்தில் சுற்றி உள்ள காந்த பிரதேசம் இன்னொன்று.

க்ளீவி பாக்ஸ்டரின் பிரைமரி பெர்செப்ஷன் என்பது இன்னொன்று!     ( Cleve Baxter’s Primary Perception )

இப்போதுள்ள க்வாண்டம் பிஸிக்ஸ் மூலம் செய்யப்படும் பயன்பாடுகள் நமக்கு விசித்திரமாகத் தோன்றும் பலவற்றில் பல உண்மைகளைக் கண்டுபிடிக்க இனி வரும் காலத்தில் நம்மை இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

எதுவுமே பார்ப்பது போல நிஜத்தில் இல்லை.

உதாரணத்திற்குச் சொல்லப் போனால் காலம் என்பது நிலையானது என்று கருதப்பட்டு வந்தது. அதாவது விநாடிகள், நிமிடங்கள், மணிகள் என்று ஒரே வேகத்தில் எப்போதும் டிக் டிக் டிக் என்று அடித்துக் கொண்டே செல்லும் ஒன்று என்று ஒவ்வொருவரிடமும் சொல்லப்பட்டது.

ஆனால் ஒரு அற்புதமான கருவி ஒன்று சில வருடங்களுக்கு முன்னர் டாக்டர் நிலோலை கோஜிரெவ் (Dr. Nilolai Kozyrev) என்ற விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டது. அது காலத்தின் மிக மிக நுண்ணிய வேறுபாடுகளைக் குறிக்க வல்ல ஒரு  கருவி. ஒரு சிறிய இயந்திர அல்லது இரசாயன நிகழ்வு சோதனைப்படுத்தப்படும் போது காலமானது காரணத்தின் பக்கம் மெலிதாகவும் அதன் விளைவாக ஏற்படும் காரியம் என்னும் விளைவின் பக்கம் அடர்த்தியாகவும் இருப்பது அந்தக் கருவியின் மூலம் காணப்பட்டு நிரூபிக்கப்பட்டு விட்டது. அதாவது காலம் நிலையான ஒன்று அல்ல வேறுபாடுகளைக் கொள்ளும் ஒன்று என்பது அறியப்படுகிறது.
 

எதுவுமே பார்ப்பது போல நிஜத்தில் இல்லை.

இயற்கை விசித்திரங்கள் நிறைந்தது. நடைமுறை விஞ்ஞானமானது இந்த விரும்பத்தகாத வரவேற்கப்பட முடியாத நிகழ்வுகளை ஒதுக்கிப் புறம் தள்ளி வந்தது – இது வரை! ஏனெனில் அது அவர்களுக்குப் புரியவில்லை. ஆனால் இனியும் அப்படி இருக்க முடியாது. ஒரு புதிய இனமான விஞ்ஞானிகளின் குழு, இப்போதைய விஞ்ஞானிகள் என்ன சொல்வார்களோ என்ற பயமின்றி இருக்கும் குழு, உண்மையை உண்மை என்று உடைத்துச் சொல்ல விரும்பும் ஒரு அருமையான குழு, வழக்கமான விஞ்ஞானிகள் பார்க்கும் ஜன்னலை விட்டு விட்டு வேறு வழியாக அனைத்தையும் பார்க்க நினைக்கிறது, விழைகிறது, உண்மைகளைக் காண்கிறது!

இந்தப் புதிய இனம் தான் 21ஆம் நூற்றாண்டின் விஞ்ஞானிகள்.. இந்த சிறுபான்மை விஞ்ஞானிகளிடமிருந்து இனி வரும் காலத்தில் நிறையக் கேட்கப் போகிறோம்! ஏனெனில் ….

எதுவுமே பார்ப்பது போல நிஜத்தில் இல்லை.

குறிப்பு : ஜேம்ஸ் எஃப் காயில் எழுதிய கட்டுரை ஒன்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை இது.

நன்றி : ஜேம்ஸ் எஃப் காயில்

( James F. Coyle, Author of Beyond Belief: The Ultimate Mindpower Instructional Manual)

***

இந்தக் குறுந்தொடர் முடிவடைகிறது.

முக்கியக் குறிப்பு : நூறாவது குரங்கு இந்தக் கட்டுரையாளர் எழுதிய அறிவியல் துளிகள் ஆறாவது பாகம் பதினொன்றாம் அத்தியாயத்தில் காணலாம். அதீத உளவியல் ஆய்வுகள் பற்றியும் அதில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் பற்றியும் காலம் பற்றிய ரகசியங்களையும் இந்தக் கட்டுரையாளர் எழுதிய அறிவுக்கும் அப்பால் நூலில் காணலாம்.

அனைத்துப் புத்தகங்களும் www.pustaka.co.in இல் காணலாம். படிக்கவும், மின்னணு நூலாக வாங்கவும், அச்சுப் பதிப்பாக வாங்கவும் முடியும்.

Leave a comment

Leave a comment