சொறி நாய் சிங்கமான கதை! வாரியார் சொன்ன 2 குட்டிக் கதைகள்-part 2 (Post No.11,789)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,789

Date uploaded in London – –  10 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Part 2

சொறி நாய் சிங்கமான கதை

ஒரு காட்டில் ஒரு முனிவரின்  ஆஸ்ரமம் இருந்தது. அவர் கருணையே வடிவானவர். அந்த ஆஸ்ரமத்துக்கு  வெளியே ஒரு சொறி நாய் வசித்தது. அது ஒரு சோனி நாய்; எலும்பும் தோலுமாகக் காட்சி அளித்தது. ஒருநாள் ஒரு ஓநாய் திடீரென்று தோன்றியது. அதைச் சாப்பிட இருந்த நேரத்தில் முனிவர் பார்த்துவிட்டார். உடனே தனது மந்திர சக்தியால் அதை பெரிய ஓநாய் ஆக்கினார். உடனே ஓநாயாக மாறிய அந்த நாய், காட்டிலிருந்து வந்த ஓநாயை விரட்டி அடித்தது.

நாட்கள் உருண்டோடின. ஒரு நாள் திடீரென்று ஒரு சிறுத்தை தோன்றியது. அது ஒநாயைத் தாக்க வரும் தருணத்தில் முனிவர் பார்த்துவிட்டார். உடனே சொறிநாயாகஇருந்து ஓநாயாக மாறிய பிராணியை நீ வலிமையான சிறுத்தை ஆகக்கடவது என்றார் . அந்த ஓநாயும் பெரிய சிறுத்தைப் புலியாக மாறி, காட்டிலிருந்து வந்த சிறுத்தையை விரட்டி அடித்தது.

வாரங்கள், மாதங்கள் சென்றன. ஒருநாள் காட்டிலிருந்து ஓரு மதயானை பிளிறல் சப்தத்துடன்  ஒடி வந்தது. உடனே ஆஸ்ரமத்துக்கு வெளியே நின்ற சிறுத்தை அதன் மீது பாய்ந்தது. ஆனால் மத யானையை அதனால் சமாளிக்க முடியவில்லை. உடனே யானையின் எதிரி சிங்கம் என்பதால் முனிவர் அந்த சிறுத்தைப் புலியை சிங்கம் ஆக்கினார்.

யானைக்கு சிம்ம சொப்பனம் என்பது பழமொழி. அந்த சிங்கம் யானையை எளிதில் விரட்டி அடித்தது.

சிங்க ராஜா காட்டில் எதிர்க்கட்சி இன்றி உலவி வந்தார். பதவி மோகம் தலைக்கு ஏறியது. அது நினைத்தது-  சொறிநாயாக இருந்த என்னை இன்று சிங்க ராஜா  நிலைக்கு உயர்த்திய முனிவருக்கு எவ்வளவு சக்தி இருக்க வேண்டும். அவரையே சாப்பிட்டால் அது நமக்கு முனிவரின் அபூர்வ தவ வலிமையைக்  கொடுத்துவிடும் என்று எண்ணியது.

இந்த தீய எண்ணத்துடன் ஆஸ்ரமத்தை அணுகியது. முனிவரோ தியானத்தில் அமர்ந்து இருந்தார். ஆனால் அவர் முக்காலமும் உணர்ந்த த்ரிகால ஞானி. சிங்கத்தின் தீய நோக்கம் அவருக்கு ஞான த்ருஷ்டியில் தெரிந்தது.

ஆஸ்ரமத்துக்குள் சிங்கம் நுழைவதைக் கண்டார்.

சீ நாயே !

ஓ நாயே !

வா நாயே !

போ நாயே !!!

என்று சொன்ன மாத்திரத்தில் அது ஓநாயாகி , சீ நாய் என்று சொல்லும்படி மீண்டும் சொறி நாயாகியது .

அவர் போ நாயே என்று சொன்னபோது அது போயாகிவிட்டது.

XXX

MY COMMENT’S

கீழ் மக்களை உயர் மட்டத்தில் வைத்தாலும் அவர்களின் நாய்க்குணம் மாறாது..

ஆன்மீகத்தில் உயர் நிலையை அடைந்த மாணிக்க வாசகர், அவரது திருவாசகத்தில் நூற்றுக்கும் மேலான இடங்களில் தன்னை நாயேன் என்று சொல்லி பாடுகிறார். உண்மையில் அவர் தன்னைச் சொல்லவில்லை  .நாய்க்குணம் உடைய மனிதர்களின் பிரதிநிதியாக தன்னை முன்னிலைப்படுத்தி பாடுகிறார். நாய்க்கு சிம்மாசனம் கொடுத்தது போல என்னையும் உயர்த்தினாயே என்று பாடுகிறார். இந்தக் கதைக்குப் பொருத்தமான வரி அது.

பாடல் எண் : 28 
கேட்டாரும் அறியாதான் கேடொன் றில்லான்
    கிளையிலான் கேளாதே எல்லாங் கேட்டான்
நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் துள்ளே
நாயினுக்குத் தவிசிட்டு நாயி னேற்கே
காட்டா தனவெல்லாங் காட்டிப் பின்னுங்
    கேளா தனவெல்லாங் கேட்பித் தென்னை
மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான்
    எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே . பொருள்ஒருவராலும் கேட்டு அறியாதவனும், தனக்கு ஒரு கேடில்லாதவனும், உறவு இல்லாதவனும், கேளாமலே எல்லாம் கேட்பவனும் ஆகிய இறைவன், என் சிறுமை நோக்காது நாய்க்குத் தவிசிட்டாற் போலத் (தவிசு – இருக்கைஆசனம்) தன் அருகில் இருத்தி, காட்டுதற்கரிய தன் உண்மை நிலையைக் காட்டி, நான் எக் காலத்திலும் கேட்காத வேத சிவாகமங்களின் பொருள்களைக் கேட்பித்து, மீட்டும் நான் பிறவாமல் என்னைத் தடுத்து ஆட் கொண்டான். இது ஒரு விந்தையாகும்.

XXXX

கீழ் மக்களை ஆட்சியில் அமர்த்தினால் அவர்கள் குணம் மாறாது, தீய செயல்களை செய்வார்கள். இதை  தசாவதாரக் கதைகளிலும் காண்கிறோம்.

தேளுக்கு அதிகாரம் கொடுத்தால் அது கொட்டிக்கொண்டே இருக்கும், நாயைக் குளி ப்பாட்டி  நடு வீட்டில் வைத்தாலும் அது வாலைக் குழைத்துக் கொண்டு ——— தின்னத்தான் போகும்  என்ற பழ மொழிகளை நினைவுபடுத்தும் கதை இது .

—-SUBHAM—–

Tags-  நாய், ஓநாய், சிங்கம், முனிவர், கீழ்மக்கள், நாய்க்கு தவிசு , சிம்மாசனம்

Leave a comment

Leave a comment