
Satyameva Jayate is in our National Emblem
Post No. 11,804
Date uploaded in London – 14 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சுபாஷித செல்வம்
தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!
ச.நாகராஜன்
ஒரேமாதிரியான பிரச்சினை இருந்ததால் ஏற்பட்ட நட்பு!
ராமனுக்கும் சுக்ரீவனுக்கும் நட்பு ஏற்படக் காரணம் என்ன? இருவரின் மனைவிகளும் கடத்தப்பட்டார்கள். ஆகவே ஒருவரின் துன்பம் இன்னொருவருக்கு நன்கு புரிந்தது. ஒத்த நிலையில் இருந்த இருவரும் நட்பு கொண்டதில் ஆச்சரியம் என்ன?
ச ராகவேந்த்ரோ ஹ்ருதராஜதார: ச
வானரேந்த்ரோ ஹ்ருதராஜதார: |
ஏவம் த்யோரத்வநி தைவயோகாத்
சமானஷீலவ்யஸனேஷு சக்யம் ||
பொருள் :-
ரகு வம்சத் தலைவரின் மனைவி கடத்தப்பட்டார்; வானரங்களின் தலைவரின் மனைவியும் கடத்தப்பட்டார். இப்படி இருவரும் வழியில் விதியால் சந்திக்கப்பட்டு ஒரே மாதிரியான பிரச்சினையில் இருந்ததால் நண்பர்களானார்கள்.
ராமரும் சுக்ரீவரும் நட்பு கொண்டது அடிப்படையான பிரச்சினை இருவருக்கும் பொதுவான ஒன்றாக அமைந்ததால் தான்!
xxxx
மெதுவாக அடையப்படும் ஐந்து விஷயங்கள்!
எல்லா விஷயங்களையும் ஒரே நாளில் கற்று விட முடியுமா என்ன? சில விஷயங்களை மெதுவாக படிப்படியாகத் தான் கற்றுத் தேற முடியும் அவை என்ன விஷயங்கள்? பார்ப்போமா?
சனை: பந்தா சனை; கன்யா சனை: பர்வதலங்கணம் |
சனை:ர்வித்யா சனை:ர்வித்தம் பஞ்சைதானி சனை: சனை: ||
சனை: என்றால் மெதுவாக என்று பொருள்.
பாடலின் பொருள் :
இந்த ஐந்து விஷயங்கள் மெதுவாகத் தான் அடையப்பட முடியும். ஒரு பயணத்தின் தூரத்தைக் கடத்தல்; ஒரு ஆபரணத்தை பழுது பார்த்துச் சரியாக்கல்; ஒரு மலையைக் கடத்தல்; வித்யாவில்- கல்வியில் -தேர்ச்சி பெறுதல் மற்றும் செல்வத்தைச் சேர்த்தல்.
ஆக இந்த ஐந்தும் மெதுவாகவே அடையப்படுபவை.
Xxxx
சத்துக்கள் சுலபமாக தம் புலன்களால் அறியக் கூடியவை!
காட்சிக்கு அப்பாற்பட்ட ஒன்று, கண்ணுக்குப் புலனாகும் எதிரில் உள்ள காட்சி, எது கிடைக்கக் கூடியது எது கிடைக்க முடியாதது – புலன்களால் அறியக் கூடிய இந்த அனைத்தையும் எல்லோராலும் தம் புலன்களால் அறிய முடியாது! யாரால் எளிதில் அறிய முடியும்? சத்துக்களால் மட்டுமே அறிய முடியும். ஆகவே மேன்மை மிகுந்தோராக ஆதல் அவசியம்!
கிம் பரோக்ஷம் கிம்ப்ரத்யக்ஷம் கிம் கிந்து துர்லபம் |
சர்வமைந்த்ரியகம் வஸ்து சர்வம் கரகதம் சத்தாம் ||
எது கண்ணால் காண முடியாதபடி பரோக்ஷமாக இருக்கிறது, எது காட்சிக்கு பிரத்யக்ஷமாகத் தோன்றுகிறது, எது சுலபமாக அடையப்படக் கூடியது எது துர்லபம்- சுலபத்தில் அடைய முடியாதது, ஆக இப்படி எல்லா இந்திரியங்களாலும் அறியப்படும் வஸ்துவானது சத்துக்களுக்கு கை வந்த கலையாக அறியப்படும்!
xxxxx
சத்யமேவ ஜயதே ; நாந்ருதம்!
சத்தியமே ஜயிக்கும்; வேறொன்றுமல்ல என்பது வேத வாக்கு. சத்யத்தின் மஹிமைகள் எவை? பார்ப்போம்.
சத்யேன தாரயதே ப்ருத்வி சத்யேன தபதே ரவி: |
சத்யேன வாயவோ வாந்தி சர்வம் சத்யே ப்ரதிஷ்டிதம் ||
பொருள் :
பூமியானது சத்தியத்தினாலேயே தாங்கப்படுகிறது. சூரியன் சத்தியத்தினாலேயே ஒளிர்கிறது. சத்தியத்தினாலேயே காற்று வீசுகிறது. உண்மையாகச் சொல்லப் போனால் அனைத்தும் சத்தியத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
சத்யம் ப்ரூயாத்ப்ரியம் ப்ரூயான்ன ப்ரூயாத்சத்யமப்ரியம் |
ப்ரியம் ச நான்ருதம் ப்ருயாதேஷ தர்ம” சநாதன ||
ஒருவர் சத்தியத்தையே எப்போதும் பேச வேண்டும் ஒருவர் எது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்படக் கூடியதோ அதையே பேச வேண்டும். ஒருவரால் ஒப்புக்கொள்ளப்படக் கூடியதாக இல்லை என்றாலும் கூட அசத்தியத்தை – உண்மை அல்லாதவற்றை – ஒருவன் பேசக் கூடாது. இது தான் மிக உயரிய சநாதன தர்மம்.
xxxx
எல்லா மலையிலுமா மாணிக்கம் கிடைக்கும்?
ஷைலே ஷைலே ந மாணிக்யம் மௌக்திகம் ந கஜே கஜே |
சாதவே ந ஹி சர்வத்ர சந்தனம் ந வனே வனே ||
ஒவ்வொரு மலையும் மாணிக்கத்தை உற்பத்தி செய்ய முடியாது. ஒவ்வொரு யானையும் முத்தைக் கொண்டிருக்க முடியாது. நல்ல மனிதர்கள் எல்லா இடத்திலும் இருக்க முடியாது. சந்தன மரங்கள் கூட எங்கு பார்த்தாலும் எல்லா வனங்களிலும் காணப்பட முடியாது.
xxxx
மனம், வாக்கு, செயல் ஒன்றாக இருக்க வேண்டும்!
மனம் வேறு, சொல் வேறு, செயல் வேறாக ஒரு போதும் இருக்கக் கூடாது. அல்பர்களுக்கே அது சாத்தியமாகும். நல்லோர்கள் நன்கு சிந்திப்பதையே சொல்வர், செய்வர்.
யதா சித்தே ததா வாசி யதா வாசி ததா க்ரியா |
சித்தே வாசி க்ரியாயாம் ச நாதூநாமேகரூபதா ||
எது ஒன்றை சிந்திக்கிறாரோ அதையே பேசுவார். எதைப் பேசுகிறாரோ அதையே செய்வார். ஏனெனில் நல்லோரிடம் சிந்தை, வாக்கு, செயல் ஒன்றாகவே இருக்கும்.
***