
Post No. 11,808
Date uploaded in London – – 15 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பிப்ரவரி 2023ம் ஆண்டு இந்திய பயணத்தில் பார்த்த முப்பதுக்கும் மேற்பட்ட புதிய தலங்களில் பட்டீஸ்வரம் துர்க்கையும் சிவனும் உள்ள கோவிலும் அடக்கம்.
குல தெய்வமான வைத்தீஸ்வரன் கோவிலையும் மதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலையும் தவிர வேறு கோவில்களை ஒரு முறை பார்த்தாலே போதும் என்பது என் கொள்கை . திருப்பதி பெருமாளும் எங்கள் இரண்டாவது குல தெய்வம். ஆயினும் அவர் எளிதில் தரிசனம் கொடுக்காமல் “அதிகம் கிராக்கி” செய்வதால் ஏதாவது ஒரு நரசிம்மர் கோவிலைத் தரிசித்து விடுவேன். அவ்வகையில் இந்த முறை பரிக்கல் நரசிம்மரைத் தரிசித்தேன் . அந்தக் கோவிலைப்பற்றி எழுதும் முன்பாக பட்டீஸ்வரம் துர்க்கையையும் சிவ பெருமானையும் தரிசிப்போம்.
பட்டீஸ்வரம் என்னும் ஊர், மாயவரம்- தஞ்சாவூர் ரயில் பாதையில் தாராசுரம் ரயில் நிலையத்திலிருந்து இரண்டு மைல் ; கும்பகோணத்திலிருந்து நான்கு மைல் தொலைவில் இருக்கிறது .
பெரிய கோபுரம் உடையது. கல் தூண்களில் சிற்பங்களும் இருக்கின்றன.
சுவாமி பெயர் – பட்டீஸ்வரர், தேனுபுரீஸ்வரர்
அம்மனின் பெயர்- பல் வளை நாயகி அம்மை , ஞானாம்பிகை

காமதேனுவின் புத்திரிகள் நால்வர். அவர்களில் ஒரு மகளான பட்டீ என்பவள் பூஜித்ததால்பட்டீச்சுரம் என்ற பெயர் வந்தது .
திருஞான சம்பந்தர் வாழ்வில் சிவ பெருமான் செய்த அற்புதங்கள் எண்ணற்றவை. இந்த ஊரில்தான் அவர் வெய்யிலில் வாடாமல் இருப்பதற்காக சிவ பெருமான், அவரது பூதத்தை அனுப்பி ஒரு முத்துப்பந்தலை அளித்தார்.
கோவிலுக்குள் ஞான தீர்த்தமும், தல விருட்சமான வன்னி மரமும் இருக்கின்றன .
xxx
ஸ்ரீ ராம பிரானுக்கு ‘சாயா’ ஹத்தி தோஷம் நீங்கிய தலமும் இதுவே. அந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் மார்கழி மாதம் அமாவாசை தினத்தன்று நடக்கிறது.

XXXX
‘சாயா’ ஹத்தி தோஷம் என்றால் என்ன?
ராவணன் பிராமணன்; ஆனால் அசுரர் குணங்களோடு வாழ்ந்தான் அவனைக் கொன்றதால் ராவணனுக்கு பிரம்மஹத்தி (பிராமணக் கொலை ) தோஷம் பிடித்தது. அதைத்தீர்க்க ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். வாலி போன்ற வீரர்களைக் கொன்ற தோஷம் போவதற்காக வேதாரண்யத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். ராவணன் பெரிய சிவபக்தன். அப்பேற்பட்ட பக்தனைக் கொன்ற பாவம் தீருவதற்காக பட்டீஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
இது பற்றி காஞ்சி மஹா சுவாமிகள் (சங்கராச்சாரியார் 1894-1994) சொன்னதைக் காண்போம்
ராமசந்திர மூர்த்தி ராவணனைக் கொன்றதால் அவருக்கு வீரஹத்தி மட்டுமில்லாமல் ப்ரம்மஹத்தி, சாயாஹத்தி என்று மொத்தம் மூன்று தோஷங்கள் ஸம்பவித்தன. ராவணன் ப்ராம்மணன், விச்ரவஸ் என்ற ரிஷியின் பிள்ளை அவன். நன்றாக வேத அத்யயனம் பண்ணியிருந்த அவன், கைலாஸத்துக்கு அடியில் மாட்டிக் கொண்டபோது ஸாம கானத்தோடு வீணா கானம் செய்தே ஈச்வர்னை ப்ரீதி பண்ணி மீண்டு வந்தான். அதனால் அவனைக் கொன்றதில் ராமருக்கு ப்ரம்மஹத்தியும் ஏற்பட்டது.
‘சாயா’ என்றால் பிரகாசம், ஒளி என்று அர்த்தம்; figurative ஆக (உருவகமாக) ‘சாயா’ என்பது கீர்த்திக்குரிய எந்தக் குணத்தையும் குறிக்கும். இங்கிலீஷில் கூட lustre-illustrious, glow-glory என்கிற போது பிரகாசம் என்பதே கீர்த்திக்குரிய தன்மைகளையும் குறிக்கிறதைப் பார்க்கிறோம். ராவணனுக்கு ரூப காம்பீர்யம், வேத சாஸ்திரப் படிப்பு, ஸங்கீத ஞானம், சிவ பக்தி என்றிப்படி அநேக ‘சாயா’க்களிருந்ததால் அவனை வதைத்ததில் ராமருக்கு சாயா ஹத்தி தோஷம் உண்டாயிற்று. இந்த மூன்றில் ப்ரம்மஹத்தி போக அவர் ராமேச்வரத்திலும், வீரஹத்தியிலிருந்து விமோசனம் பெற வேதாரண்யத்திலும், சாயாஹத்தி விலகுவதற்காகக் கும்பகோணத்துக்குப் பக்கத்திலுள்ள பட்டீச்வரத்திலும் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தார். ராமேச்வர விஷயம் மட்டும் இப்போது எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால் இதே மாதிரி மற்ற இரண்டு ஊர் கோவில்களிலும் கூட ‘ராமலிங்கம்’ என்றே இப்போதும் இருக்கிறது.
XXXXX

பல கோவில்களில் நந்தி சிவலிங்கத்துக்கு நேராக இல்லாமல் சற்று விலகி இருக்கும். சம்பந்தப் பெருமான் வழிபடுவதற்கு வசதியாக இப்படி நந்தி விலகியதாகப் பெரியோர் புகல்வர் .
முதலில் இருக்கும் நந்தி பெரியது வேலைப்பாடு மிக்கது
பட்டீசுவரத்துக்குத் தெற்கே ஒரு பர்லாங்கு தூரத்தில் திருமலைராயன் ஆறு ஓடுகிறது. இத்தலத்துக்கு வடக்கில் வேறு ஒரு வீதியில் திரு சத்தி முற்றம் என்ற பாடல்பெற்ற தலமும் இருக்கிறது.
xxxx
பட்டீச்சுரம் துர்க்கை கோவில்
வெளிப் பிராகாரத்தில் வடக்குக் கோபுர வாயிலில் துர்க்கையம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.
பட்டீஸ்வரம் கோவில் வடக்கு வாசலில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். சோழ அரசர்கள் காலத்தில் பழையாறையில் அரச மகளிர் வசிப்பதற்கான மாளிகை இருந்தது. அந்த மாளிகைக் கோட்டையின் வடக்கு வாசலில் குடி கொண்டிருந்தவள் இந்த துர்க்கை.
சோழர்கள் காலத்திற்குப் பிறகு இந்த துர்க்கையை அங்கிருந்து கொண்டுவந்து பட்டீஸ்வரம் கோவிலில் பிரதிஷ்டை செய்தார்கள். பட்டீஸ்வரம் துர்க்கையை பக்தர்கள் ராகுகால நேரங்களிலும், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும், அஷ்டமி, நவமி திதிகளிலும் வழிபடுதலைச் சிறப்பாக கருதுகின்றனர்.
துர்க்கை இங்கு சாந்த சொரூபியாக, கருணை வடிவமாக எட்டு திருக்கரங்கள் கொண்டு அருள் பாலிக்கிறாள். இவ்வன்னை மகிஷன் தலைமீது நின்ற கோலத்துடன் சிம்ம வாகனத்துடன் திரிபங்க ரூபமாய், எட்டுத் திருக்கரங்களுடனும், முக்கண்களுடன், காதுகளில் குண்டலங்களோடு காட்சி தருகிறாள். காளி மற்றும் துர்க்கைக்கு இயல்பாக சிம்மவாகனம் வலப்புறம் நோக்கியதாக காணப்படும்.ஆனால் சாந்த சொரூபிணியான இந்த துர்க்கைக்கு சிம்மவாகனம் இடப்புறம் நோக்கி அமைந்துள்ளது.அபயகரத்துடன் சங்கு சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றை தாங்கி அருள் பாலிக்கிறாள்.
xxxxx

Patteeswaram Sivan and Durga Temple
இங்குள்ள பைரவர் சந்நிதியும் மிகவும் பிரசித்தமானது
கோவிலில் மராட்டியர் கால ஓவியங்களையும் நாயக்கர் கால சிற்ப வேலைப்பாடுகளையும் கண்டு களிக்கலாம்.
பராசக்தி தவம் செய்வதற்கு இத்தலத்தை தேர்ந்தெடுத்து இறைவனை பூஜித்து வர இறைவன் தமது சடைமுடியுடன் காட்சி கொடுத்த சிறப்புடையது இத்தலம்.
.மாளவ தேசத்து தர்மசர்மா என்ற அந்தணனுக்கு மேதாவி முனிவரின் சாபத்தால் ஏற்பட்ட நாய் வடிவம் இத்தலத்திலுள்ள ஞானவாவி தீர்த்தத்தின் ஒரு துளி நீர் பட்டதால் சாபம் நீங்கப் பெற்றான்.
இத்தலத்தில் ஐந்து நந்திகள் உள்ளன. அனைத்தும் சந்நிதியிலிருந்து விலகியேயுள்ளன.
xxxxx
பட்டீச்சுரம் தேவாரம்
3. 073 திருப்பட்டீச்சரம் சம்பந்தர் பாடியது பண் – சாதாரி
பாடல் எண் : 1
பாடன்மறை, சூடல்மதி, பல்வளையொர்
பாகம், மதில் மூன்றுஓர்கணையால்,
கூடஎரி ஊட்டி,எழில் காட்டி,நிழல்
கூட்டுபொழில் சூழ்பழைசையுள்
மாடமழ பாடிஉறை பட்டிசர
மேயகடி கட்டுஅரவினார்,
வேடநிலை கொண்டவரை வீடுநெறி
காட்டிவினை வீடும்அவரே.
பொழிப்புரை : சிவபெருமான் வேதங்களை அருளிச்செய்து வேதப் பொருளாயும் விளங்குபவர் . பிறைச்சந்திரனைச் சூடியவர் . பல வளையல்களையணிந்த உமாதேவியைத் தம் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டவர் . மதில்கள் மூன்றினையும் ஒரு கணையால் எரித்த வீர அழகைக் காட்டியவர் . நிழல்தரும் சோலைகள் சூழ்ந்த திருப்பழையாறையில் , மாடங்களையுடைய திருமழபாடி என்னும் நகரில் , திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார் . பாம்பைக் கச்சாகக் கட்டியவர் . வேடநிலைக்கேற்ப நல்லொழுக்கத்தில் நிற்கும் அடியவர்களின் வினைகளைப் போக்கி முத்திநெறி அருளவல்லவர் .
பாடல் எண் : 2
நீரின்மலி புன்சடையர், நீள்அரவு
கச்சைஅது, நச்சுஇலையதுஓர்
கூரின்மலி சூலம்அது ஏந்தி, உடை
கோவணமும் மானின்உரிதோல்,
காரின்மலி கொன்றைவிரி தார்கடவுள்
காதல்செய்து மேயநகர்தான்,
பாரின்மலி சீர்பழைசை பட்டிசரம்
ஏத்தவினை பற்றுஅழியுமே.
பொழிப்புரை : சிவபெருமான் கங்கையைச் சடையில் தாங்கியவர் . நீண்ட பாம்பைக் கச்சாகக் கட்டியவர் . கூர்மையான இலைபோன்ற வடிவுடைய கொடிய சூலப்படையை ஏந்தியவர் . கோவண ஆடை அணிந்தவர் . மான் தோலையும் அணிந்தவர் . கார்காலத்தில் மலரும் கொன்றையை மாலையாக அணிந்தவர் . அத்தகைய கடவுள் விரும்பி வீற்றிருந்தருளும் தலமாவது பூமியில் மிக்க புகழையுடைய திருப்பழையாறை ஆகும் . அங்குள்ள திருப்பட்டீச்சரம் என்னும் கோயிலிலுள்ள இறைவனைப் போற்றி வணங்க நம் வினைகள் யாவும் அடியோடு அழியும் .
பாடல் எண் : 3
காலைமட வார்கள்புனல் ஆடுவது,
கௌவைகடி யார்மறுகுஎலாம்,
மாலைமண நாறுபழை யாறைமழ
பாடிஅழ காயமலிசீர்,
பாலைஅன நீறுபுனை மார்பன்,உறை
பட்டிசர மேபரவுவார்,
மேலைஒரு மால்கடல்கள் போல்பெருகி,
விண்உலகம் ஆளும்அவரே.
பொழிப்புரை : பெண்கள் காலையில் நீர்நிலைகளில் நீராடுவதால் உண்டாகும் ஓசையை உடையதாய் , மாலையில் பூசை செய்வதால் வீதிகளிலெல்லாம் நறுமணம் கமழ்வதாய் உள்ள திருப்பழையாறை என்னும் தலத்தில் மழபாடி என்னும் பகுதியில் , தன் திருமேனி முழுவதும் மிக்க சிறப்புடைய பால்போன்ற திருவெண்ணீற்றைப் பூசிய மார்புடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலை வணங்குவார் இம்மையில் கடல்போல் செல்வம் பெருக , மறுமையில் விண்ணுலகை ஆள்வர்.

.பாடல் எண் : 11
மந்தம்மலி சோலைமழ பாடிநகர்
நீடுபழை யாறை அதனுள்,
பந்தம் உயர் வீடுநல பட்டிசர
மேயபடர் புன்சடையனை,
அந்தண்மறை யோர்இனிது வாழ்புகலி
ஞானசம் பந்தன்,அணிஆர்
செந்தமிழ்கள் கொண்டுஇனிது செப்பவல
தொண்டர்வினை நிற்பதுஇலவே.
பொழிப்புரை : தென்றல் உலாவும் சோலைகளையுடைய திருமழபாடி என்னும் நகர்ப் பகுதியைத் தன்னுள் கொண்ட நெடிய பழையாறை என்னும் திருத்தலத்தில் , தன்னையடைந்தவர்கட்குப் பந்தமும் , வீடும் அருளவல்ல நல்ல திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் படர்ந்த சிறுசடைகளை உடைய சிவபெருமான். அப்பெருமானைப் போற்றி எவ்வுயிர்களிடத்தும் இரக்கமுள்ள மறையோர்கள் இனிது வாழ்கின்ற திருப்புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் அழகிய செந்தமிழில் அருளிய இப்பதிகத்தைக் கேட்டற்கும் , உணர்தற்கும் இனிதாகச் சொல்லவல்ல தொண்டர்களின் வினைகள் நீங்கும் .
திருச்சிற்றம்பலம்
–subham—
TAGS–சாயாஹத்தி தோஷம் பட்டி, காமதேனு, மகள், துர்க்கை, தேனுபுரீஸ்வரர், பட்டீஸ்வரம், சம்பந்தர், முத்துப்பந்தல், ஞானவாவி, ஓவியங்கள், சிற்பங்கள்,