இந்திரஜித்தை வதைக்கும் போது லக்ஷ்மணர் செய்த ப்ரதிக்ஞை!(Post.11,983)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,983

Date uploaded in London –   May 9, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

ராமாயண வழிகாட்டி! 

இந்திரஜித்தை வதைக்கும் போது லக்ஷ்மணர் செய்த ப்ரதிக்ஞை!

ச.நாகராஜன்

வால்மீகி ராமாயணத்தில் இந்திரஜித்திற்கும் லக்ஷ்மணருக்கும் நடக்கும் சண்டை ஆச்சரியகரமான ஒன்று.

அதை அவர் வர்ணிக்கும் விதமே தனி.

யுத்த காண்டத்தில் 91வது ஸர்க்கத்தில் இந்த யுத்த வர்ணனையைக் காணலாம்.

இந்திரஜித்து விபீஷணன் மேல் கோபம் கொண்டு யமனால் தனக்கு அளிக்கப்பட்ட பாணத்தை (சிற்றப்பன் மேல்) விடுகிறான்.

அதை லக்ஷ்மணன் எதிர் கொள்கிறான். எப்படி?

அளவற்ற மஹிமை கொண்ட குபேரனால் கனவில் நேரில் அளிக்கப்பெற்றதும் தகைக்க அரியதும், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் மற்றும் அசுரர்களாலும் சகிக்க ஒண்ணாததுமான ஒரு பாணத்தை எடுத்தார்; விடுத்தார்.

பாணங்கள் ஒன்றையொன்று தாக்கி வீழ்ந்தன.

லக்ஷ்மணர் ஆவேசத்துடன் வாருண அஸ்திரத்தைத் தொடுத்தார்.

அதை ருத்திர அஸ்திரத்தால் எதிர் கொண்டான் இந்திரஜித்.

ருத்ராஸ்திரத்தால் வாருணாஸ்திரம் அழிந்தது.

இந்திரஜித் ஆக்னேயாஸ்திரத்தை விடுத்தான்.

அதை சூர்ய அஸ்திரத்தால் எதிர் கொண்டு தடுத்தார் லக்ஷ்மணர்.

இந்திரஜித் ஒரு கொடிய அசுர அஸ்திரத்தை எடுத்து விடுத்தான்.அதில் கூடாயுதங்களும் முத்கராயுதங்களும் சூலாயுதங்களும் புசுண்டி என்னும் ஆயுதங்களும் கதைகளும் கத்திகளும் கோடரிகளும் வெளி வந்தன.

லக்ஷ்மணரோ அந்த ஆஸுர அஸ்திரத்தை சுலபமாக மாகேஸ்வராஸ்திரத்தால் தகைத்தார்.

உவமையற்ற யுத்தம் இப்படி நீண்டு கொண்டே போனது.

லக்ஷ்மணர் ஒரு கணம் யோசித்தார்.

பின்னர் ஹரி என்னும் குதிரையை வாஹனமாகக் கொண்ட இந்திரன் முன்னொரு காலத்தில் தேவாசுரப் போரில் எந்த அஸ்திரத்தை வீசி அசுரர்களை வெற்றி கொண்டானோ அந்த அஸ்திரமான ஐந்திர அஸ்திரத்தை எடுத்து, தன் வில்லால் பூட்டினார்.

வில்லை வளைத்துத் தொடுத்து இழுத்தார்.

அப்போது அவர் செய்த பிரதிக்ஞை அற்புதமான ஒன்று.

ஶ்ரீ சம்பன்னரான லக்ஷ்மணர் சிறந்த வில்லில் தொடுத்து இழுப்பவராய் தனக்கு காரியசித்தியைத் தரும் ஒரு திருமொழியை பின்வருமாறு சாற்றி அருளினார்:

தர்மாத்மா சத்யசந்தஸ்ச ராமோ தாசரதிர்யதி |

பௌருஷே சாப்ரதித்வ்ந்து: சரைணம் ஜஹி ராவணிம் ||

                     யுத்த காண்டம் ஸர்க்கம் 91 ஸ்லோகம் 96

பௌருஷே – பிரதாப விஷயத்தில்

அப்ரதிதந்து: – ஒப்பற்றவராகிய

தாசரதி: – தசரத சக்ரவர்த்தியாரின் திருமகனாராகிய

ராம: – ஶ்ரீ ராமர்

தர்மாத்மா ச – தர்மாத்மாவும்

சத்யசந்தஸ்ச: ச – ஸத்தியசந்தராகவும்

யதி – இருக்கிறார் எனில்

ஷர – ஓ, பாணமே!

ஏனம் – இந்த

ராவணிம் – இந்திரஜித்தை

ஜஹி – வதைப்பாயாக

இப்படி ராமர் மீது பிரதிக்ஞை செய்து இந்திராஸ்திரமந்திரத்தால் அபிமந்திரித்து பாணத்தை காதுவரை இழுத்து இந்திரஜித்தை நோக்கிக் குறி வைத்து லக்ஷ்மணர் விடுத்தார்.

அது இந்திரஜித்தின் தலையை தலைப்பாகையுடனும் குண்டலங்களுடனும் சேர்த்து அறுத்து பூதலத்தில் வீழ்த்தியது.

வானிலும் பூமியிலும் பெருத்த ஆரவாரம் எழுந்தது.

அனைவரும் ஆனந்தித்தனர்.

ஆக இந்திரஜித்தை வதைக்கும் போது கூட ராமர் தர்மாத்மா என்பதும் சத்யசந்தர் என்பதும் ஸ்தாபிக்கப்பட்டது.

இப்படி ஒவ்வொரு அரிய முக்கியமான தருணத்திலும் ஶ்ரீ ராமரின் எல்லையற்ற மஹிமையை உரிய விதத்தில் அற்புதமாக வால்மீகி முனிவர் எடுத்து நம் முன் கொணர்வது நம்மை பிரமிக்க வைக்கிறது.

ஜெய் ஶ்ரீ ராம்!

***

Leave a comment

Leave a comment