தடைகளை அகற்றும் விடைகள்! – 1 (Post No.12,080)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,080

Date uploaded in London –  June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

 மாலைமலர் நாளிதழில் 1-6-2023 அன்று வெளியான கட்டுரை – இரு பகுதிகளாக இங்கு வெளியிடப்படுகிறது

ஜூன் 1 – ஹெலன்கெல்லர் நினைவு நாள் 

தடைகளை அகற்றும் விடைகள்!  – 1 

ச.நாகராஜன் 

தடைகள் உண்டு எனில் அவற்றை அகற்றும் விடைகளும் உண்டு!

நவீன உலகில் அன்றாடம் பிரச்சினைகளைச் சந்திக்காதவரே இல்லை.

அதிலும் நகர் சந்தடியிலிருந்து விலகி வாழ்வோர் படும் துன்பங்கள் அதிகம்.

ஒரு விதமான ஆதார வளம் இல்லாமல் செல்வமும் இல்லாமல், ஆதரிப்போர் இல்லாமல் ஏராளமானோர் செய்வதறியாது திகைப்பதையும் அன்றாடம் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இன்னும் உடல் குறைபாடுகளைக் கொண்டிருந்தாலோ சொல்லவே வேண்டாம். அவர்கள் படும் பாடு சொல்லி மாளாது.

ஆனால் விதி என்று இவற்றைச் சொல்லி அனுபவித்துத் துன்பப்படுவதை விட இதை மாற்றும் வழி உண்டா?

உண்டு என்று நிரூபித்திருப்போர் ஏராளம.

அவர்களில் சிலர் இதோ! 

அபூர்வப் பெண்மணி ஹெலன் கெல்லர்

ஹெலன் கெல்லர்: ஒரு அபூர்வப் பெண்மணி (தோற்றம் ஜூன் 27,1880 மறைவு ஜூன் 1, 1968)

மனம் தளராத விடாமுயற்சி எந்த சூழ்நிலையிலும் வெற்றி தரும்.

இது ஹெலன் கெல்லர் என்ற அபூர்வ பெண்மணி உலகிற்குக் காட்டிய உண்மை.

19 மாதக் குழந்தையாக இருந்தபோது அவர் கண் பார்வையை இழந்தார். காதால் கேட்கும் செவிப்புலன் சக்தியையும் இழந்தார். அவரால் பேசவும் முடியவில்லை.

ஹெலனின் தாயார் அவரை மசாசூசெட்ஸில் (அமெரிக்கா) பார்வையற்றோருக்கான பள்ளியில் சேர்த்தார். அங்கு ஆன்னி சல்லிவன் என்ற கண் பார்வை இழந்த ஒரு ஆசிரியை அவருக்கு ஒவ்வொரு பொருளையும் தடவிப் பார்க்கச் சொல்லி அதன் பெயரைத் தன் விரல்களினால் கூறுவார். விரல்கள் மூலம் அந்தப் பொருளின் பெயருக்கான எழுத்தை உணர வைப்பார்.

பயிற்சியின் போது, நீரை அவர் கை மீது பாய்ச்சி ‘வாட்டர்” என்று சல்லிவன் சொன்ன போது ‘சாவிலிருந்து மீண்டு ஒரு புது பிறப்பை எடுப்பது போல இருந்தது’ என்று பின்னால் ஹெலன் கெல்லர் கூறினார்.

ஆம், அவர் படிக்க ஆரம்பித்து விட்டார்!

பல வருட கால கடுமையான உழைப்பிற்குப் பின்னர் ஆங்கிலத்தை முழுதுமாகக் கற்றதோடு, பிரெஞ்சு மொழி, ஜெர்மானிய மொழி, கிரேக்கம், லத்தீன், கண் பார்வையற்றோருக்கான ப்ரெயிலி ஆகிய மொழிகளில் அவர் தேர்ந்தார்.

1904ஆம் ஆண்டில் அவர் பட்டம் பெற்றார். செவிடாகவும் கண்பார்வையற்றவராகவும் இருந்து முதலில் பட்டம் பெற்ற பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றார்.

எனது வாழ்க்கை சரிதம் (The Story of My Life) என்ற மனதை உருக்கும் ஒரு புத்தகத்தை எழுதியதோடு மொத்தம் 14 புத்தகங்களை அவர் எழுதினார்.

30 நாடுகளுக்குப் பயணம் செய்து அனைவருக்கும் உத்வேகம் ஊட்டினார்; பெண்களின் உரிமைக்காகப் போராடினார்.

87ஆம் வயதில் அவர் மறைந்தார். 1964ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி அமெரிக்க ஜனாதிபதி பி.லிண்டன் ஜான்ஸன் அவருக்கு அமெரிக்காவின் உயரிய சிவிலியன் ஹானர் விருதை அளித்தார்.

நெஞ்சம் தளராது உற்சாகத்தோடு தனது அனைத்துக் குறைகளையும் புறம் தள்ளி வெற்றி பெற்ற வீராங்கனை அவர்.

சரி, இவர் போலல்லாது கண் பார்வையும் செவிப் புலனையும் தக்க ஆதரவையும் கொண்டுள்ள ஆயிரக் கணக்கானோர் எப்படி எல்லாம் முன்னேறலாம்?!.

தன் தடைகளை அகற்றி அவற்றைப் போக்கப் பல விடைகளைத் தந்தவர் ஹெலன் கெல்லர் என்பதே உண்மை!

மலைகளை நகர்த்திய மா மனிதன்!

மனித மனத்தில் ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று உறுதியாகிவிட்ட பட்சத்தில் முடியாதது ஒன்றும் இல்லை.

இதற்கு உதாரணம் தசரத் மஞ்சி (Dasjrath Manjhi). (தோற்றம் 14-1-1929 மறைவு 17-8-2007)

பீஹார் மாநிலத்தில் கயாவுக்கு அருகில் உள்ள ஒரு கிராமம் ஜெஹ்லௌர்.

அதில் வாழ்ந்தவர் தசரத் மஞ்சி. ஒரு துயரமான சம்பவம் அவர் வாழ்க்கையில் 1959இல் நிகழ்ந்தது. அவரது மனைவி பல்குனி தேவி மலையிலிருந்து கீழே  விழ பலத்த காயம் பட்டது. அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. அந்த மலைப் பகுதியில் சாலையே இல்லை. அவர் இறந்து போனார். அப்போது மனதிற்குள் ஒரு உறுதியை எடுத்தார் தசரத். இந்த மலையை வெட்டி ஒரு சாலை அமைப்பது என்ற முடிவு தான் அது. அவரிடம் மூன்று ஆடுகள் தாம் இருந்தது. அதை விற்று ஒரு சுத்தியலையும் உளியையும் வாங்கினார். வேலையை ஆரம்பித்தார்.

மலையை வெட்டி ஒரு ரோடு போடுவது தான் அவரது கனவு. 22 வருடங்கள் இடை விடாது உழைத்தார் – தனி ஆளாக! 1960இல் அவர் ஆரம்பித்த பாதை 1982இல்  முடிந்தது.

ஆரம்பத்தில் பைத்தியக்காரன் என்று அவரை எள்ளி நகையாடிய அனைவரும் அவரது உறுதியைப் பார்த்து வியந்தனர்.

அவர் இருந்த இடத்திலிருந்து ஆஸ்பத்திரி 55 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. அயராமல் உழைத்து 110 மீட்டர் நீளமும் 9.1 மீட்டர் அகலமும் உள்ள ஒரு சாலையை அவரே அமைத்து முடித்தார். மலையின் சரிவில் பக்கவாட்டில் அவர் இந்த சாலையை அமைத்து முடித்தார். இந்த சாலையால் 55 கிலோ மீட்டர் தூரமானது 15  கிலோமீட்டர் தூரமானது.

இந்திய அரசு இவரை கௌரவித்து ஒரு தபால்தலையை 26-12-2016இல் வெளியிட்டது. பீஹார் அரசும் அவரைக் கௌரவித்தது.

2011இல் அவரைப் பற்றிய டாகுமெண்டரி படம் ஒன்று ‘The Man who moved the mountain’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது.

2015இல்  மஞ்சி – மலை மனிதர் – Manji – The Mountain Man  -என்ற பெயரில் அவரைப் பற்றி ஒரு திரைப்படமும் தயாரிக்கப்பட்டது.

இந்த சாலையின் மூலம் அவரது கிராமம் வெளி உலகுடன் இணைக்கப்படவே பள்ளி, ஆஸ்பத்திரி வசதி கிராம மக்களுக்குக் கிடைத்தது; வேலை வாய்ப்புகளும் உருவாயின.

2007இல் அவர் இறந்த போது பீஹார் அரசு அவரது இறுதிச் சடங்கில் அரசு மரியாதைகளைச் செய்து கௌரவித்தது.

முயன்றால் முடியாதது இல்லை என்பதற்கு தசரத் மஞ்சி ஒரு சிறந்த உதாரணம்!

 xxxxx

சாதனை படைத்த கரிகாலன்!

டாக்டர் க்ளென் கன்னிங்ஹாம் (தோற்றம் 4-8-1909 மறைவு 10-3-1988)

அமெரிக்காவில் அட்லாண்டாவில் பிறந்தவன் கன்னிங்ஹாம் என்ற அந்தப் பையன். அவனுக்கு எட்டு வயது ஆகும் போது ஒரு கோர விபத்து ஏற்பட்டது. பள்ளியில் அறையைக் கதகதப்பாக வைக்க அடுப்பை மூட்ட வேண்டிய பணி அவனுடையது. ஒரு நாள் மண்ணெண்ணெய்க்குப் பதிலாக பெட்ரோலை விட்டதால் பள்ளி தீப்பிடிக்க அதில் கால் கருகி கால்களை இழந்து கரிகாலன் ஆனான் அவன்.

அவனால் இனி நடக்கவே முடியாது என்று டாக்டர்கள் கூறி விட்டனர்.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அவனுக்கு அசாத்திய மன உறுதி இருந்தது. சாதிப்பேன் என்று தனக்குத் தானே முடிவு கட்டிக் கொண்டான். தாயார் அவன வீல்சேரில் உட்கார்த்தி வீட்டின் முன்புற முற்றத்தில் வேலி வரை அழைத்துச் செல்வார். ஒரு நாள் வீல் சேரிலிருந்து மெதுவாக எழுந்தான். விழுந்தான். பின்னர் மெதுவாக நிற்க ஆரம்பித்து வேலியைப் பிடித்து நடக்க ஆரம்பித்தான்.

பள்ளிக்குச் செல்ல ஆசை வந்தது. பள்ளிக்கு முதலில் மெதுவாக நடந்து செல்ல ஆரம்பித்தான். பின்னால் பள்ளிக்குச் செல்ல ஓட ஆரம்பித்தான். ஓடினால் அவனுக்கு ஒரு ஆனந்தம்!

ஒரு நாள் மாடிஸன் ஸ்குயர் கார்டனில் நடந்த ஒரு மைல் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டான். என்ன ஆச்சரியம்! அதில் அவனே வெற்றியும் பெற்றான்.

1933இல் ஜேம்ஸ் இ.சல்லிவன் என்ற உயரிய விருதையும் பெற்றான்.

அமெரிக்கா அவனைத் தனது தலைமை விளையாட்டு வீரனாகப் பார்க்க ஆரம்பித்தது.

1932இல் ஒலிம்பிக் போட்டிகளில் 1500 மீட்டரில் கலந்து கொண்ட கன்னிங்ஹாம் நான்காவதாக வந்த போது உலகம் ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்தது. 1936இல் அதே ஒலிம்பிக் போட்டியில் அவர் இரண்டாவதாக வந்தார்.

நான்கு நிமிடங்களில் ஒரு மைலை ஓடிக் கடக்க வேண்டும் என்பது அவரது ஆசை.

1934இல் ஒரு மைலை 4.06.8 நிமிடத்தில் ஓடி முடித்தார். உலக சாதனை படைத்தார்.

இது மட்டுமல்ல, நியூயார்க் பல்கலைக் கழகத்தில் பி.ஹெச்.டி பட்டத்தையும் பெற்றார்.

1940இல் அவர் ஓய்வு பெற்றார்.

டாக்டர்களால் நடக்கவே முடியாது என்று கூறப்பட்ட அவர் உலக சாதனை படைத்த வீரராக மாறியது எதனால்?

அவரது மன உறுதியும், எண்ண வலிமையும் அதற்கான இடையறாத உழைப்புமே தான் காரணம், இல்லையா?!

****             நாளை தொடரும்

Leave a comment

Leave a comment